Categories
Subramanya Bhujangam

ஸுப்ரமண்ய புஜங்கம் – முதல் ஸ்லோகம் – முருகனை துதிக்க கணபதியே காப்பு


ஸுப்ரமண்ய புஜங்கம் முதல் ஸ்லோகம்(11 min audio file. Same as the script below)

சித்தி விநாயக மூர்த்தி கீ ஜய்

வெற்றி வேல் முருகனுக்கு ஹரோஹரோ

நம் ஆச்சார்யாள் ஆதிசங்கர பகவத் பாதாள் நிறைய பக்தி கிரந்தங்கள் இயற்றிக் கொடுத்து இருக்கா. அதுல ஸுப்ரமண்ய புஜங்கம் ன்னு ஒரு ஸ்தோத்ரம். முருகனுடைய பெருமைகளை ரொம்ப அழகா சொல்றது. ஒரு வாட்டி ஆசார்யாளுக்கு யாரோ ஆபிசாரம் பண்ணினதாகவும், உடம்புல ரொம்ப ஸ்ரமங்கள் வந்ததுனால, கோகர்ணத்துல இருக்கிற ஸ்வாமி கனவுல “நீ போய் ஸ்ரீ ஜெயந்திபுரம் என்கின்ற திருச்செந்தூர் முருக பெருமானை வேண்டிக்கோ, அவருடைய சன்னிதியில கொடுக்கிற விபூதியை  இட்டுண்டா, எல்லா உபாதைகளும் போய் விடும். பிசாசுகள் எல்லாம் கூட ஓடிப் போய் விடும்” ன்னு ஸ்வாமியே சொன்னதாகவும் கதை.

ஆச்சார்யாள் யோக மார்கமாக திருச்செந்தூர் வந்து முருகப் பெருமானை தரிசிக்கிறார். அவர் காத்தால வந்து ஸ்வாமி தரிசனம் பண்ணும் போது, ஆதிசேஷன் ஸுப்ரமண்யருக்கு பூஜை பண்ணிண்டு இருந்தார், அதனால புஜங்க வ்ருத்தம் ஞாபகம் வந்தது. அதைத் தவிர திருச்செந்தூர் கடற்கரையில இருக்கறதுனால, அலைகளுக்கும் புஜங்கம்ன்னு பேரு, அப்படி புஜங்க வ்ருத்தத்துல அவரோட வாக்குல இருந்து ஒரு அழகான ஒரு ஸ்தோத்ரம் வந்தது என்று சொல்வார்கள்.

இந்த  ஸுப்ரமண்ய புஜங்கந்தை மஹா மந்த்ரமாக மஹான்கள் நினைச்சு இருக்கா. ஸ்வாமிகள் இந்த கீழ்கண்ட நிகழ்ச்சியை பல தடவைகள் சொல்லி இருக்கார். ஒரு நாள் சாயங்காலம் மஹா பெரியவா விஸ்ராந்தியா பூஜையெல்லாம் முடிச்சிட்டு,  கால்களை நீட்டிண்டு relaxed-ஆக உட்கார்ந்து இருந்தாளாம். ஒரு தம்பதி தன்னுடைய ரெண்டு குழந்தைகளை கூட்டிண்டு வந்து “இவாளுக்கு சங்கர ஸ்தோத்ரங்கள் சொல்லி வைச்சுருக்கோம்” ன்னு சொன்ன உடனே, பெரியவா ” சொல்லச் சொல்லு” ன்னாளாம்.

“முதாகராத்த மோதகம்” ன்னு அந்த ரெண்டு குழந்தைகள் சொல்லித்தாம். பெரியவா கேட்டுண்டே இருந்தாளாம். அப்பறம் அதை முடிச்ச உடனே ‘ஸதா பால ரூபாபி” ன்னு ஸுப்ரமண்ய புஜங்கத்தை அவா ஆரம்பிச்ச உடனே, relaxed-ஆ உட்கார்ந்து இருந்த பெரியவா, ரொம்ப பயபக்தியோட தண்டத்தை நிமிர்த்தி வெச்சிண்டு, கையை கூப்பிண்டு, கால்களை மடக்கிண்டு ஸுப்ரமண்ய புஜங்கந்தை அந்த முப்பத்தி மூணு ஸ்லோகங்களையும் கேட்டார், ன்னு ஸ்வாமிகள் சொல்வார். ஒவ்வொரு வாட்டியும் இதை அபிநயம் பண்ணி காண்பிப்பார். ஸ்வாமிகள் மஹா பெரியவா மாதிரியே இருப்பார், அவர் relaxed-ஆ ஒரு pose, அப்பறம் பயபக்தியோட கால்களை மடக்கிண்டு கையை கூப்பிண்டு அந்த தண்டத்தை நிமிர்த்தி வெச்சிண்டு ஒரு pose கொடுப்பார். அப்படியே நேரா பெரியவாளை பார்க்கற மாதிரியே இருக்கும். அப்படி இந்த ஸுப்ரமண்ய புஜங்கத்துக்கு மஹா மந்த்ரம்-னு பெரியவா மதிப்பு  கொடுத்தா அப்படீன்னு ஸ்வாமிகள் சொல்வார்.

தேதியூர் சுப்ரமண்ய சாஸ்திரிகள் அப்படீன்னு ஒரு பெரிய மஹான் இருந்தார். அப்பைய தீட்சிதர் வம்சம். அவர் இந்த ஸுப்ரமண்ய புஜங்கத்துக்கு எழுவது வருஷங்களுக்கு முன்னாடி, தமிழ்ல அர்த்தங்கள் சொல்லி இருக்கார். அந்த புஸ்தகத்தை வெச்சுண்டு தான் நான் அர்த்தம் சொல்ல போறேன். சந்திரசேகர பாரதி ன்னு ஸ்ருங்கேரி ஆச்சார்யாள் இருந்தார், அவா தேதியூர் சுப்ரமண்ய சாஸ்திரிகளுக்கு வேதமூர்த்தி ன்னு பிருது கொடுத்தா. நம்ம மஹா பெரியவா சாஸ்த்ர ரத்னாகரா ன்னு அவருக்கு பிருது கொடுத்தா. அப்பேற்பட்ட படிப்பு. அதுக்கும் மேல அம்பாள் பக்தி, அவர் சங்கர பாஷ்யத்துல authority. அப்படி தேதியூர் சுப்ரமண்ய சாஸ்திரிகள்  வேதாந்தத்துல வித்வானாக இருந்தாலும், ஆச்சார்யாளுடைய ஸ்தோத்ரங்களிலேயும் ரொம்ப பிரியம் வெச்சு, இந்த சௌந்தர்யா லஹரி, ஸுப்ரமண்ய புஜாங்கத்துக்கெல்லாம் அர்த்தம் எழுதி இருக்கார். அதனால பெரிய பாக்கியமா அது கிடைச்சியிருக்கு. அதுல முதல் ஸ்லோகம்

सदा बालरूपाऽपि विघ्नाद्रिहन्त्री  महादन्तिवक्त्राऽपि पञ्चास्यमान्या ।

विधीन्द्रादिमृग्या गणेशाभिधा मे विधत्तां श्रियं काऽपि कल्याणमूर्तिः ||

ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீ

மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா |

விதீந்த்ராதிம்ருக்யா கணேசாபிதாமே

விதத்தாம் ச்ரியம் காபி கல்யாண மூர்த்திஹி |

அப்படீன்னு ஒரு ஸ்லோகம். நான் இதுக்கு பதம் பதமா அர்த்தம் சொல்றேன். ‘ஸதா’ னா எப்பொழுதும், ‘பாலரூபாபி’ குழந்தை வடிவராக இருந்தாலும், இந்த முதல் ஸ்லோகம் பிள்ளையார் மேல. பிள்ளையார் எப்பவுமே குழந்தை வடிவம். வடிவம் மட்டும் இல்லை, அவருடைய மனசும் குழந்தை மாதிரி, நெட்டில கூட பிள்ளையார் பண்ணுவா, அவ்வளவு light hearted ஆக இருக்குற ஸ்வாமி. அவருக்கு பந்தா கிடையாது, விசேஷமா கோவில் கட்டணும் வேண்டியது இல்லை, ஒரு அரசமரத்து அடியில உடகார்ந்து இருப்பார். ஒரு அபிஷேகம் பண்ணி, இடுப்புல ஒரு துண்டை சுத்தி, ஒரு தேங்காயை நைவேத்தியம் பண்ணினாலே, அபாரமான வரங்கள் கொடுப்பார். அப்படீன்னு அவருடைய எளிமைய பத்தி மஹாபெரியவா ரொம்ப பேசியிருகா. அப்பேற்பட்ட குழந்தை ஸ்வாமி அவர், அவர் இப்பவுமே குழந்தை ஒரே stage-தான் அவருக்கு. வளர்ந்து பெரியவர் ஆனார்-ங்கிறது  கிடையாது, ‘ஸதா ஸதா பாலரூபாபி’

குழந்தைனா ஒரு அளவுக்குத் தான் strength வலிமை இருக்கும் ன்னு நினைப்போம். ஆனா இவர் என்ன பண்றார்ன்னா ‘விக்னாத்ரிஹந்த்ரீ’ விக்னம் என்ற மலைகளையே ‘ஹந்த்ரீ’-ன பொடி பொடி ஆக்குபவர். மலையையே பொடி பொடியாக்க கூடிய அளவுக்கு power இருக்கு. குழந்தையாக இருக்கார், ஆனா நமக்கு வர மலை போன்ற விக்னங்களை எல்லாம் பொடி பொடி ஆக்கிடறார். ஆதி ஆச்சார்யாள், தான் ஸுப்ரமண்யரை ஸ்தோத்ரம் பண்ண போறோம் என்று ஆரம்பிக்கும்போது, அந்த ஸ்தோத்ரம் நல்ல படியாக முடியணும்ங்கிறதுக்கு, பிள்ளையாரை வேண்டுகிறார். எந்த பூஜை பண்ணினாலும், முதல்ல பிள்ளையார் பூஜை பண்ணிட்டு அப்பறம் தான் ஒரு வெங்கடேச சமாராதனை, ஒரு நவராத்திரி  பூஜை அப்படீன்னு பண்ணுவா இல்லையா, அப்படி தெய்வங்களை வேண்டிக்கிறதுக்கே, முதல்ல பிள்ளையார வேண்டிக்கறது என்ற அந்த ஒரு ஸம்ப்ரதாயத்தையும் கொண்டு, முதல் ஸ்லோகத்துல, இந்த ஸுப்ரமண்யரை நான் ஸ்தோத்ரம் பண்ண விரும்புகிறேன், அது நல்லபடிய  முடியறத்துக்கு ஒரு காப்பு செய்யுள் போல இந்த ஸ்லோகம் இருக்கு.

‘மஹாதந்தி வக்த்ராபி’ பெரிய ஒரு தந்தம் இருக்கு, அப்படீன்னா என்ன அர்த்தம் யானை முகம்னு அர்த்தம். ‘மஹாதந்தி வக்த்ராபி’  யானையனுடைய வக்த்ரம், முகத்தவராக இருந்தாலும் ‘பஞ்சாஸ்யமான்யா’ பஞ்ச பாத்ரம்னு  சொல்றோம் இல்லையா, ‘பஞ்ச’னா அகன்ற ன்னு அர்த்தம். ஆஸ்யம் னா வாய்,  பஞ்சபாத்ரம்-னா பெரிய வாய் இருக்கிற பாத்திரம். ‘பஞ்சாஸ்யமான்யா’ இந்த இடத்துல பஞ்சாஸ்யம் னா சிங்கம்னு ஒரு அர்த்தம். சிங்கத்தை கனவுல கண்டாக் கூட யானை பயந்து போய் பிளிறிண்டே  இருக்கும் ன்னு சொல்லுவா. அப்படி சிம்ம சொப்பனம் அப்படீம்பா. ஆனா இவர் யானையாக இருந்தாலும், சிங்கங்கள் எல்லாம் இவரை மதிக்கறது, ன்னு அழகா சொல்றார். இந்த இடத்துல இவர் கணபதியா இருந்தாலும் பஞ்சாஸ்யம்-ங்கிறதுக்கு இன்னொரு அர்த்தம் ஆஸ்யம்-ன முகம், பஞ்சாஸ்யம்-ங்கிறதுக்கு இன்னொரு meaning ஐந்து முகங்களை படைத்தவர்-ன்னு அர்த்தம். ஐந்து முகங்களை படைத்தவர் யாரு, சிவபெருமான், சத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசான்யம், அப்படீன்னு ஐந்து முகங்களை படைத்த, சிவபெருமானும் வணங்கும், மதிக்கும் கணபதி அப்படீன்னு இந்த பாதத்துக்கு அர்த்தம்.

சிவபெருமான் த்ரிபுர ஸம்ஹாரம் பண்ண போறார், அப்போ இவர் போடற அஸ்த்ரங்கள் எல்லாம், அந்த அசுரர்களை ஒண்ணுமே பண்ணலயாம். ஏன்னா அவா ஒரு விக்ன யந்த்ரம் ஸ்தாபிச்சு, இந்த அஸ்த்ரங்களை  எல்லாம் பலிக்காம பண்ணிண்டே இருக்கா. அப்போ சிவபெருமான் பிரணவ ஸ்வரூபமா கணபதியை த்யானம் பண்ணி, பூஜை பண்ணின உடனே, பிள்ளையார் வந்து அந்த விக்ன யந்த்ரத்தை உடைச்சு போட்டுடறார், அதுக்கப்புறம் சிவபெருமான் த்ரிபுர ஸம்ஹாரம் பண்ணார். அப்படி அப்பாவினாலேயே மான்ய னா மதிக்கப்பட்ட,  பூஜை செய்யப்பட்ட பிள்ளை இவர். அதனாலதான் அவருக்கு அர் விகுதி கொடுத்து, பிள்ளையார் னு மரியாதையா கூப்பிடுறோம். அப்படி யானை சிங்கத்துக்கு பயப்படும், ஆனா இந்த கணபதியை பஞ்சாஸ்ய  பஞ்ச முகம் கொண்ட  சிவபெருமானே வழிபடுகிறார். ‘விதீந்த்ராதிம்ருக்யா’ விதி-ன்னா ப்ரம்ம, இந்திரன் னா இந்த்ரன் ‘விதீந்த்ராதிம்ருக்யா’ இந்திரன், ப்ரம்மா எல்லாரும், தேடி வந்து இந்த பிள்ளையாரை நமஸ்காரம் பண்ரா. ‘கணேசாபிதா’ கணேசன் என்ற பேர் கொண்டவர், ‘விதத்தாம் ச்ரியம்’ எனக்கு செல்வங்களை, மங்களங்களை அருளட்டும்.

‘காபி’ ஏதோ ஒண்ணு-ன்னு ஸம்ஸ்க்ருதத்துல அர்த்தம், இந்த எடத்துல அளவற்ற மஹிமையோடு கூடிய ன்னு அர்த்தம். ‘கல்யாண மூர்த்தி’ பரம மங்களகரமான வடிவினரான, எப்போ நினைச்சாலும் சந்தோஷத்தை கொடுக்ககூடிய ஒரு ரூபம் கணபதியுனுடைய ரூபம். அந்த பிள்ளையாரை நித்ய கல்யாண மூர்த்தியான கணேசரை எங்களுக்கு, எனக்கு மங்களங்கள் கிடைக்கும் பொருட்டு வேண்டுகிறேன்.

‘கணேசாபிதாமே விதத்தாம் ச்ரியம்’ அவர் எங்களுக்கு மங்களங்களை கொடுக்கட்டும், ஐஸ்வர்யங்களை கொடுக்கட்டும் அப்படீன்னு ஒரு ஸ்லோகம்.

இந்த நல்ல கார்யங்கள் எல்லாம் ஆரம்பிக்கும் போது ‘ஷ்ரேயாம்ஸி பஹு விக்னானி’ அப்படீன்னு ஷ்ரேயஸான ஒரு கார்யம் நடக்கணும்னா அதுக்கு, நிறைய  விக்னங்கள் வரும். அப்போ, நம்ம பிள்ளையாரை வேண்டிண்டு ஆரம்பிக்கணும்ங்கிற அளவில், இந்த ஸுப்ரமண்ய புஜங்கதுக்கு அர்த்தம் சொல்லுறதுங்கிறது எனக்கும் உங்களுக்கும் ரொம்ப ஒரு ஸ்ரேயஸை கொடுக்கக் கூடிய ஒரு விஷயம், இது நல்ல படியாக முடியணும்ன்னு வேண்டிண்டு இந்த முதல் ஸ்லோகத்தை இன்னோரு வாட்டி சொல்லி இதை இன்னைக்கு பூர்த்தி பண்ணிகிறேன்.

ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீ

மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா

விதீந்த்ராதிம்ருக்யா கணேசாபிதாமே

விதத்தாம் ச்ரியம் காபி கல்யாண மூர்த்தி

இங்க ‘விதீந்த்ராதிம்ருக்யா கணேசாபிதா (மே)’  அப்படீன்னு நிறைய புஸ்தகங்கள்ல பாடம், ஸ்வாமிகள் எனக்கு, ‘விதீந்த்ராதிம்ருக்யா கணேசாபிதா(நா)’ அப்படீன்னு ஒரு பாடம் சொல்லி இருக்கார். அதனால நான் அதை பழக்கிண்டு இருக்கேன்.

நம: பார்வதி பதயே… ஹர ஹர மஹாதேவ.

Series Navigationஸுப்ரமண்ய புஜங்கம் – இரண்டாவது ஸ்லோகம் – அறுமுக குமர சரணம் என அருள்பாடி >>

3 replies on “ஸுப்ரமண்ய புஜங்கம் – முதல் ஸ்லோகம் – முருகனை துதிக்க கணபதியே காப்பு”

மிகவும் அழகான ஸ்லோகம்.. அருமையான விளக்கம்..

பிள்ளையார் பஞ்சாஸ்ய மான்யர் மட்டுமில்லை; தாமே பஞ்சாஸ்யராக ஐந்து முகத்தோடு விளங்குபவர். அற்புதமான ஹேரம்ப மூர்த்தியாக இருப்பவர். ஐந்து கஜ சிரஸுகள்; பத்து கைகள். வாஹனம் ஸிம்ஹம்; பஞ்சாஸ்யம்! ஸிம்ஹத்தைக் கண்டு யானை பயப்படாதது மட்டுமில்லை; அதை அடக்கி அதன் மேலேயே ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறது இந்த யானை.

பஞ்சாஸ்ய மான்யராக தகப்பனாரை ஞாபகப்படுத்துவது போல ஸிம்ஹ வாஹனத்தால் தாயாரை ஞாபகப்படுத்துகிறார்.

கஜமுகாநுஜரை துதிக்க ஸ்கந்த பூர்வஜரே காப்பு🙏

மிகவும் அழகான ஸ்லோகம்.. அருமையான விளக்கம்..

பிள்ளையார் பஞ்சாஸ்ய மான்யர் மட்டுமில்லை; தாமே பஞ்சாஸ்யராக ஐந்து முகத்தோடு விளங்குபவர். அற்புதமான ஹேரம்ப மூர்த்தியாக இருப்பவர். ஐந்து கஜ சிரஸுகள்; பத்து கைகள். வாஹனம் ஸிம்ஹம்; பஞ்சாஸ்யம்! ஸிம்ஹத்தைக் கண்டு யானை பயப்படாதது மட்டுமில்லை; அதை அடக்கி அதன் மேலேயே ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறது இந்த யானை.

பஞ்சாஸ்ய மான்யராக தகப்பனாரை ஞாபகப்படுத்துவது போல ஸிம்ஹ வாஹனத்தால் தாயாரை ஞாபகப்படுத்துகிறார்.

கஜமுகாநுஜரை துதிக்க ஸ்கந்த பூர்வஜரே காப்பு🙏

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.