Categories
Subramanya Bhujangam

ஸுப்ரமண்ய புஜங்கம் – ஒன்பதாவது ஸ்லோகம் – உனதாள் அணியார் அரவிந்தம்


ஸுப்ரமண்ய புஜங்கம் ஒன்பதாவது ஸ்லோகம் (12 min audio file. Same as the script above)

நேத்திக்கு ஸுப்ரமண்ய புஜங்கத்துல எட்டாவது ஸ்லோகம், ஸுப்ரமண்ய சுவாமியின் பள்ளியறை வர்ணனை, அர்த்த ஜாம பூஜையை யார் தர்சனம் பண்றாளோ அவாளுக்கு சகல காமங்களும் பூர்த்தியாகும்ங்கிற அந்த ஸ்லோகத்தை நேத்திக்குப் பார்த்தோம். இன்னிக்கு ஒன்பதாவது ஸ்லோகம்.

रणद्धंसके मञ्जुलेऽत्यन्तशोणे

मनोहारिलावण्यपीयूषपूर्णे ।

मनःषट्पदो मे भवक्लेशतप्तः

सदा मोदतां स्कन्द ते पादपद्मे ॥ ९॥

ரணத்தம்ஸகே மஞ்சுளேத்யந்த சோணே

மனோஹாரி லாவண்ய பீயூஷபூர்ணே |

மனஷ்ஷட்பதோ மே பவக்லேசதப்த

ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே ||

ன்னு அந்த ஸ்லோகம். ஹம்ஸபக்ஷிகள் சப்தம் பண்றதை ரணத் சப்தம் அப்படீன்னு சொல்றா. ‘ரணத்தம்ஸகே’ ஹம்ச பக்ஷிகள் சப்தம் பண்ணிண்டு இருக்கு. ஸுப்பிரமண்ய ஸ்வாமியினுடைய பாதங்களை தாமரை பூக்களாக வர்ணிக்கறார். தாமரை பூக்களை சுற்றி ஹம்ஸ பக்ஷிகள் இருக்கும். தாமரைப்பூவில் தேன் இருக்கும். அதெல்லாம் கொண்டு முருகனுடைய பாதாரவிந்தத்தை வர்ணிக்கிறார். தாமரைப்பூ செக்கச் செவேல்னு இருக்கும். ‘மஞ்சுளே’ மஞ்சுளேன்னா ரொம்ப அழகானதுன்னு அர்த்தம். ‘அத்யந்த சோணே’ நல்ல செக்கச் செவேல்னு இருக்கக் கூடியதாகவும், ஒரு தாமரைன்னா அதுல தேன் இருக்குமே. இதுல என்ன தேன்? ‘மனோஹாரி லாவண்ய பீயூஷ பூர்ணே’ மனதை கொள்ளை கொள்ளும் லாவண்யம்ங்கிற தேன் நிரம்பியிருக்கு. ‘தே பாதபத்மே’ உன்னுடைய பாதங்களில் ‘பவக்லேச தப்த:’ சம்சாரத்தில் தவித்து கொண்டிருக்கும் என்னுடைய ‘மே மனஷ்ஷட்பத:’ மனமாகிய வண்டு ‘ஹே! ஸ்கந்த’ ‘ஸதா’ எப்பொழுதும் ‘மோததாம்’ உன்னுடைய பாத பத்மங்களில் என்னுடைய மனமாகிய வண்டு எப்பொழுதும் ரமித்துக் கொண்டே இருக்கட்டும்னு, கேட்கறார்.

இந்த மனசுக்கு ஆறு குணங்கள் ஷமம் , தமம் , திதிக்ஷை, உபரதி, ஸ்ரத்தா, சமாதானம் என்கிற ஆறு குணங்கள் இருக்கறதுனால ஷட்பதி. ஷட்பதிங்கிறதுக்கு ஆறு கால்கள் கொண்ட வண்டுன்னு ஒரு அர்த்தம். இந்த ஆறு குணங்கள் இருக்கறதுனால மனசையும் ஷட்பதின்னு சொல்வா. ஷட்பதி ஸ்தோத்திரத்துல கூட ஆசார்யாள் இந்த உவமையை உபயோகப் படுத்துவார். அப்படி என் மனமாகிய வண்டு உன்னுடைய பாத பத்மங்களில் இடையறாது ரமிக்கட்டும்னு அழகான ஒரு பிரார்த்தனை. இதுல என்ன அழகுன்னா, தாமரை பூவைச் சுத்தி ஹம்ஸபக்ஷிகள் இருக்கு. அந்த மாதிரி முருகப் பெருமானுடைய பாத பத்மத்தை சுத்தி பரமஹம்சர்கள் எப்பொழுதும் இருந்துண்டு, மஹா வாக்யங்களை சொல்லிண்டே இருக்கான்னு தேதியூர் சாஸ்திரிகள் அர்த்தம் சொல்லி இருக்கார். அந்த பரமஹம்சர்களான முனிவர்கள் தான் அந்த பாதத்துக்கு பக்கத்துல போக முடியும்ங்கிறதை இந்த ஸ்லோகத்துல குறிப்பிடறார். ஆனால் பக்தர்கள் அந்த அழகுங்கிற, லாவண்யம்ங்கிற பீயூஷத்தை பருக முடியும். பக்தியினாலயும் அந்த முருகப் பெருமானின் பாதங்களுடைய அழகை நாம் பருகலாம். அப்படி நம்ம மனசை உலக விஷயங்கள்ல இருந்து எடுத்து, முருகனுடைய பாத பத்மங்களில் வெச்சு எப்பவும் ரமிக்கணும்னு பிரார்த்தனை பண்ணிக்கறார்.

நேற்றைய ஸ்லோகத்துல எல்லா காமங்களும் பூர்த்தியாகும்னு சொல்றார். இந்த உலக விஷயங்கள்ல, காமங்களை பூர்த்தி பண்ணிண்டா பூர்த்தியாச்சுன்னே கிடையாது இல்லையா? அது கிடைக்குமா கிடைக்காதாங்கிற ஒரு anxiety, ஒரு தவிப்பு. கிடைச்ச பின்ன நம்மோடேயே இருக்குமான்னு ஒரு கவலை. எதுவும் நம்மோட permanent ஆ இருக்கப் போறது இல்ல. அது போன பின்னே போயிடுத்தேன்னு, ஒரு வருத்தம். இப்படித்தான் உலக சுகங்கள் எல்லாமே இருக்கு. அதனால இதுல நாம சந்தோஷத்தை, தேடி அடைஞ்சோம் எங்கிறதே கிடையாது. நெய்யை ஊத்தினா, நெருப்பு வளருமே தவிர அணையாது என்கிற மாதிரி, உலக விஷயங்களை அனுபவிச்சா, மேலும் மேலும் அந்த வாசனை ஏறி, இன்னும் இன்னும் வேணும்னு தான் தோணுமே தவிர ஒரு த்ருப்தி என்கிறதே வர மாட்டேங்கிறது. அப்படி இந்த உலக விஷயங்கள்ல சுகத்தை தேடாமல் முருகப் பெருமான் கிட்ட பக்தி பண்ணோம்னா நமக்கு பேரானந்தம் கிடைக்கும்ங்கிற ஒரு கருத்தும் இந்த ஸ்லோகத்துல இருக்கு.

மூக பஞ்சசதியில இதே கருத்தை காமாக்ஷியினுடைய பாதங்களுக்கு பொருத்தி ஒரு ஸ்லோகம் இருக்கு. அதையும் சொல்றேன்

सुरागे राकेन्दुप्रतिनिधिमुखे पर्वतसुते

चिराल्लभ्ये भक्त्या शमधनजनानां परिषदा ।

मनोभृङ्गो मत्कः पदकमलयुग्मे जननि ते

प्रकामं कामाक्षि त्रिपुरहरवामाक्षि रमताम् ॥

ஸுராகே ராகேந்துப்ரதிநிதிமுகே பர்வதஸுதே

சிரால்லப்யே பக்த்யா ஶமதனஜனானாம் பரிஷதா |

மனோப்ருங்கோ மத்க: பதகமலயுக்மே ஜனனி தே

ப்ரகாமம் காமாக்ஷி த்ரிபுரஹரவாமாக்ஷி ரமதாம் ||

அப்படீன்னு ஒரு ஸ்லோகம்.

இந்துன்னா, சந்திரன். ராகா ன்னா பௌர்ணமி. பௌர்ணமி சந்திரனுக்கு பிரதிநிதி போன்ற முகம். அதாவது பூர்ண சந்திரனை போன்ற முகத்தினை உடைய காமாக்ஷி. ‘ஜனனி’ ங்கிறார், அம்மா, காமாக்ஷி! ‘பர்வதஸுதே’ பர்வத குமாரியே! ‘திரிபுரஹரவாமாக்ஷி’ திரிபுரத்தை முப்புரத்தை எரித்தவனுடைய மனைவியே! ‘ஸுராகே’ ரொம்ப அழகா இருக்கக் கூடிய உன்னுடைய ‘பதகமலே யுக்மே’ உன்னுடய பாதங்கள் என்ற தாமரை, யுக்மம்னா இரண்டு. இரு தாமரைகள். உன்னுடைய இரண்டு பாத பத்மங்கள்ல, இந்த பாத பத்மங்கள் யாருக்கு கிடைக்கும்னா ‘ஷம தன ஜனா:’ சாந்தியை தனமாகக் கொண்ட முனிவர்கள். மனசாந்தியை மட்டுமே செல்வமாக, உலக செல்வங்கள் எதுவுமே இல்லாம “கௌபீனவன்தஹ கலு பாக்கியவன்தஹ” ன்னு சொல்றா மாதிரி, வெறும் சாந்த குணத்தை மட்டும் தனமாக கொண்ட முனிவர்கள், ‘சிராத்’ ரொம்ப நாள் முயற்சி செய்து பக்தியின் மூலம் அடைகிறார்கள். ‘பக்த்யா லப்யே’ , அந்த பாத தாமரைகள் ‘மத்க: மனோ ப்ருங்கஹ’ என்னுடைய மனமாகிய வண்டு ‘ப்ரகாமம்’ ரொம்ப ஆசையோடு எப்பொழுதும் உன்னுடைய பாத தாமரைகளில் ‘ரமதாம்’, ரமிக்கிட்டும்-ன்னு இந்த ஒரு ஸ்லோகம், எனக்கு ரொம்ப பிடிச்ச ஸ்லோகம்.

सुरागे राकेन्दुप्रतिनिधिमुखे पर्वतसुते

चिराल्लभ्ये भक्त्या शमधनजनानां परिषदा ।

मनोभृङ्गो मत्कः पदकमलयुग्मे जननि ते

प्रकामं कामाक्षि त्रिपुरहरवामाक्षि रमताम् ॥

ஸ்வாமிகளுக்கு ஸன்யாசம் வாங்கிக்கணும்னு எண்ணம் வந்த போது, பக்கத்துல இருந்த சில மடங்கள், சன்யாசிகள் இருக்கக் கூடிய ஆஸ்ரமங்கள்லாம் இருந்தது. ‘அங்க போய் கேட்டுண்டு வாங்கோ, அங்க சன்யாசிகள் வந்து தங்கணும்னா அவா rules and regulations என்ன? இடம் கொடுப்பாளா?’ அப்படீன்னு கேட்க சொன்னார். கேட்ட இடங்களில் எல்லாம் ‘அவர் என்ன contribution கொடுப்பார்? என்ன capital கொண்டு வருவார்?’ ன்னு கேட்டா. ஸ்வாமிகள் சொன்னார் ‘என் கிட்ட ஒண்ணும் பணம் இல்லையே, ‘ஷமதன ஜனானாம் பரிஷத்’ ன்னு இருக்கு. சாந்தியை தனமாக கொண்டவர்கள் சன்யாசிகள்ன்னு அந்த காலத்துல வச்சிருந்தா. இப்ப பணத்தை capitalஆக வெச்சிண்டிருந்தா தான் சன்யாசி ஆக முடியும் போலிருக்கேன்னு” வேடிக்கையா சொன்னார். அப்புறம் சிவன் சார் ” நீங்க சன்யாசம் வாங்கிக்கோங்கோ, நீங்க அந்த வீட்டு மாடியிலேயே இருங்கோ” ன்னு சொல்லிட்டார். அப்படியே இருந்தார் ஸ்வாமிகள். எங்களுக்கெல்லாம் அது ரொம்ப பாக்யமா இருந்தது. எங்கயாவது மடத்துல அவர் உட்கார்ந்து இருந்தா permission வாங்கிண்டு தான் உள்ள போக முடியும். நாங்க எல்லாம் ரொம்ப சுலபமா ஸ்வாமிகள் ஆத்துக்கே போய், எப்பொழுதும் அங்கே இருந்து, அவரோடு சாப்பிட்டு, தூக்கிண்டு நிறைய கத்துண்டு ரொம்ப சந்தோஷப்பட்டோம்.

இன்னொரு குறிப்பு – பரமஹம்ஸர்கள் சுப்ரமண்ய ஸ்வாமியினுடைய பாதத்துக்கு பக்கத்துல இருக்கா. பக்தர்கள் லாவண்யா பியூஷத்தை இடையறாது பருகி கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரி இந்த ஸ்லோகத்துலேயும் ‘ஷமதன ஜனாஹா சிராத் லப்யே’ சன்யாசிகள் ரொம்ப நாள் முயற்சி பண்ணி அடைகிறார்கள். என்னுடைய மனமாகிய வண்டு இந்த பாத தாமரையில் இடையறாது ரமிக்கட்டும்ன்னு சொல்றார். அந்த மாதிரி பக்தர்களுக்கு ஒரு உரிமை இருக்கு.

ஆனா இந்த பக்தி, இவா சொல்றது ரொம்ப உத்தம பக்தி. உத்தம பக்தி பகவானை கட்டுப்படுத்தி, ‘நாம ஒரு அடி எடுத்து வெச்சா பகவான் பத்து அடி வருவார்’ ன்னு சொல்றாளே, அப்படி ராதா தேவி கிருஷ்ணர் கிட்ட கண்பிச்ச அன்பு, அப்படி ஒரு அன்பு உத்தம பக்தர்கள் கிட்ட பகவான் காண்பிக்கறார், ‘ந மே பக்த ப்ரணஷ்யதி’ ‘என் பக்தன் வீண்போக மாட்டான்’ பக்தனை கைவிடாம அவன் சொன்ன வார்த்தையை சத்தியமாக்கி பக்தனுக்காக எல்லாமே பண்றார். சுவாமி சிவன் கோயில்கள்லாம், இங்கே திருவல்லிக்கேணில எங்காத்து பக்கத்துல காமகலா காமேஸ்வரி கோவில் ன்னு ஒரு அழகான கோயில் இருக்கு. அங்க ப்ரம்மோத்சவம் பூர்த்தியாச்சு. நேத்திக்கு கடைசி நாள், ஸ்வாமி புஷ்ப பல்லாக்கு உத்சவம் முடிச்சிட்டு, திருஊடல் உத்ஸவம் ன்னு ஒண்ணு பண்றா. சுந்தரமூர்த்திக்காக ஸ்வாமி தூது போனதை ஒரு உத்ஸவமா கொண்டாடறா. தன்னோட பக்தர்களுக்கு கட்டுப்பட்டு அவ்ளோ தூரம் எல்லாம் பண்றார். ஆனா சுந்தரர்

மீளா அடிமை உமக்கே ஆள் ஆய், பிறரை வேண்டாதே,

மூளாத் தீப் போல் உள்ளே கனன்று, முகத்தால் மிக வாடி,

ஆள் ஆய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்

வாளா(ஆ)ங்கு இருப்பீர்; திரு ஆரூரீர்! வாழ்ந்துபோதீரே!

ன்னு சுந்தரர் பாடினார். மீளா அடிமை உனக்கே ஆளாய் பிறரை வேண்டாதேன்னு, உனக்கு அடிமை நான். மீளா அடிமை நீ என்னை விரட்டினாலும் நான் போக முடியாது. மீளவே முடியாது. ஜென்ம ஜென்மத்துக்கும் அடிமை. உமக்கே ஆளாய், பிறரை வேண்டேன். போய் இன்னொருத்தரை வேண்ட மாட்டேன் அப்படி ஒரு தீர்மானம். உலக விஷயங்கள்ல ஆசையும் கிடையாது. ஏதாவது அப்படி வேணும்னாலும் உன்னைத் தான் கேட்பேன். இன்னொருத்தரை போய் கேட்க மாட்டேன் அப்படீங்கற உத்தம பக்தி இருந்தது, அப்படி இருக்கறவாளுக்கு பகவானே ‘யோகக்ஷேமம் வஹாம்யஹம்’ ன்னு தானே எல்லாம் பண்ணார்.

அந்த மாதிரி ஸ்வாமிகளுக்கு நடந்தது. மந்திரத்துல மாங்கா விழுமான்னா விழுந்துது. அவர் ‘நான் தெய்வத்தை நம்பியிருக்கேன்’ அப்படீன்னு சொல்லி உலகத்துல ஒருத்தர் கிட்டயும் ஒண்ணும் கேட்காம இருந்ததை பார்த்ததுனால தான் ‘ஓஹோ இதற்கு பேரு தான் பக்தி’ ன்னு நாங்க தெரிஞ்சுண்டோம், அப்பேற்பட்ட பக்தி. அவா என்ன பண்றான்னா, கார்த்தால அஞ்சு மணிக்கு எழுந்தா ராத்திரி பத்து மணி தூங்கற வரைக்கும் அந்த பகவானுடைய பாதபத்மத்துல ரமிச்சிண்டிருக்கா. இடையறாது பஜனம். அப்பேற்பட்ட பக்தர்களை நாம அடிக்கடி நினைச்சு, அவாளோட த்யானத்துல கொஞ்சமாவது நாம ரமிப்போம். அப்போ, ஒரு நாளைக்கு நமக்கும் அந்த உத்தம பக்தி வரும்.

வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா

Series Navigation<< ஸுப்ரமண்ய புஜங்கம் – எட்டாவது ஸ்லோகம் – பள்ளியறை தரிசனம்ஸுப்ரமண்ய புஜங்கம் – பத்தாவது ஸ்லோகம் – மனதுக்குகந்தது முருகனின் ரூபம் >>

2 replies on “ஸுப்ரமண்ய புஜங்கம் – ஒன்பதாவது ஸ்லோகம் – உனதாள் அணியார் அரவிந்தம்”

Namaste Rama Rama,

Even while hearing I was reminded of “Padamalai” a work of muruganar on Bhagavan Ramana’ teachings.

Here the word padam (though means the “Saranaravindam”) all through this work of Muruganar uses it as the “Self” or “Ramana” sometimes. ( I have read this book here and there and enjoyed some of these verses when quoted).

Also when I see this explanation “அந்த பரமஹம்சர்களான முனிவர்கள் தான் அந்த பாதத்துக்கு பக்கத்துல போக முடியும்ங்கிறதை இந்த ஸ்லோகத்துல குறிப்பிடறார்.”, certainly felt Thethiyur means the Parabhakthi of the Munis for the “Self”.

Also in the next line “ஆனால் பக்தர்கள் அந்த அழகுங்கிற, லாவண்யம்ங்கிற பீயூஷத்தை பருக முடியும். பக்தியினாலயும் அந்த முருகப் பெருமானின் பாதங்களுடைய அழகை நாம் பருகலாம்” it for the bhakthas.

Also Thethiyur Sastrigal has handled the Aditya Hrudayam meanings from the Gross, Subtle and absolute of what Aditya represents..In this verse of Subramanya Bhujangam did see a hint of the style he uses in Aditya Hrudayam.

Thank you for you lovely service of simplifying the lofty imageries and make it sweet for every day anusandham.

Looking forward to many more such offerings.

Regards
Sujatha.R

ஆசார்யாள், “என் மனமாகிய வண்டு ஸ்கந்தனுடைய பாத தாமரைகளில் எப்போதும் ரமித்துக் கொண்டிருக்கட்டும்” என்று சொல்கிறார். “உயர்ந்த ஞானிகளான பரமஹம்ஸர்கள் ஏற்கனவே அங்கே வசித்துக் கொண்டிருக்கிறார்கள்.” என்று சூசனையாக சொல்கிறார்.

சிவானந்த லஹரியில் 46ஆவது ஸ்லோகத்தில், “பரமசிவனின் பாதங்களை மாளிகையாக உருவகப்படுத்தி, மனமென்னும் ராஜ ஹம்ஸத்தை, பக்தி என்னும் ‘வது’வை கல்யாணம் செய்துகொண்டு அங்கேயே வசிக்க சொல்கிறார்.”. இந்த ஸ்லோகத்திலும் “ஞானிகளான பரமஹம்ஸர்கள் அங்கே புகலிடம் அடைந்திருக்கிறார்கள்” என்கிறார்.

இந்த இரண்டு ஸ்லோகங்களிலும் ஆசார்யாள் பரம்பொருளின் பாதத்தாமரைகளில் நம் மனதை ரமிக்கச் சொல்லி பிரார்த்தனை செய்கிறார். எதற்காக? வெளி ஸௌகர்யங்கள் எத்தனை இருந்தாலும் மனஸ் நல்லபடியாக இருந்தால்தான் சாந்தியும் ஸௌக்யமும். இல்லாவிட்டால் ஆசை, அழுகை, பயம், சஞ்சலம், அத்ருப்தி, கோபம், த்வேஷம், போட்டி பொறாமை, துக்கம் இதெல்லாம் தான் இருக்கும். மனஸிலிருந்து கெட்ட அசுத்தங்கள் எல்லாம் போய், அது சுத்தமாக வேண்டும்.

மனஸ் சுத்தமாவதற்கு பகவானிடம் ப்ரார்த்தித்துவிட்டால் போதும், அவன் க்ருபையாலே இதை ஸாதித்துக்கொள்ளலாம் என்று வழிகாட்டியிருக்கிறார்‌ ஆசார்யாள்🙏

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.