Categories
Subramanya Bhujangam

ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி இரண்டாவது ஸ்லோகம் – நின் ஞான சிவமான பதம் அருள்வாயே

ஸுப்ரமண்ய புஜங்கம் இருபத்தி இரண்டாவது ஸ்லோகம் (12 min audio file. Same as the script above)

ஸுப்ரமண்ய புஜங்கத்துல இருபதாவது ஸ்லோகத்துல, என்னுடைய இந்திரியங்கள் எல்லாம் தளர்ந்து போய், ஒண்ணும் பண்ண முடியாம கடைசி காலத்துல நான் தவிக்கும் போது நீ என் முன்னாடி வந்து தர்சனம் கொடுக்கணும்னு ஒரு ஸ்லோகம். இருபத்தி ஒண்ணாவது ஸ்லோகத்துல எம படர்கள் வந்து என்னை பயமுறுத்தும் போது நீ கையில வேலோடு, மயில் மேல ஏறி வந்து எனக்கு தர்சனம் கொடுத்து ‘மா பைஹி’ பயப்படாதேன்னு எனக்கு அபய வாக்கு கொடுக்கணும்னு கேட்டார். இன்னிக்கு இருபத்திரெண்டாவது ஸ்லோகம்.

प्रणम्यासकृत्पादयोस्ते पतित्वा

प्रसाद्य प्रभो प्रार्थयेऽनेकवारम् ।

न वक्तुं क्षमोऽहं तदानीं कृपाब्धे

न कार्यान्तकाले मनागप्युपेक्षा ॥ २२॥

ப்ரணம்யாஸக்ருத் பாதயோஸ்தே பதித்வா

ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்தயேனேக வாரம் |

நவக்தும் க்ஷமோஹம் ததானீம் க்ருபாப்தே

நகார்யாந்தகாலே மனாகப்யுபேக்ஷா ||

ன்னு ஒரு ஸ்லோகம்.

‘ப்ரபோ’ – என் துரையே, தலைவனே – அப்படீன்னு அர்த்தம். துரையப்பன் பேர் வைப்பா. முருகப் பெருமானுக்கு துரை-ன்னு பேரு. இதை சொன்ன உடனே வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள் வாழ்க்கையில நடந்த சம்பவம் ஒண்ணு ஞாபகம் வர்றது. சச்சிதானந்த ஸ்வாமிகள் பன்னிரண்டு வருஷம் வள்ளிமலையில தபஸ் பண்ணிட்டு அப்புறம் சென்னைக்கு வந்திருக்கார். தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை ஆத்துக்கு வருவார். இங்க திருவல்லிகேணியில வேங்கடராவ்னு ஒருத்தர் இருந்தார். அப்படி சில பேர் அவர் கிட்ட ரொம்ப தெய்வபக்தியா இருந்தா. அங்கெல்லாம் போனா ஆறு மணி நேரம் எட்டு மணி நேரம் திருப்புகழ் பாடுவார். எல்லாரும் எல்லாவற்றையும் மறந்துட்டு அவருடைய பஜனையில ஈடுபட்டு ரொம்ப பேரனைத்துத்துல திளைச்சு இருப்பா. திருப்புகழ் மணி ன்னு பெரியவா ஒருத்தருக்கு title கொடுத்தா. அந்த கிருஷ்ணஸ்வாமி ஐயர், அவா எல்லாரும் வள்ளிமலை ஸ்வாமிகள் கிட்ட ரொம்ப பக்தியா இருந்தா.

ஒரு தடவை டிசம்பர் கடைசி வாரத்துல ஸ்வாமிகளை வள்ளிமலை போய் தர்சனம் பண்ணியிருக்கா. அப்புறம் ‘நாங்க கிளம்பறோம்’ ன்னு சொன்ன போது ‘என்ன அவசரம்?’ ன்னு ஸ்வாமிகள் கேட்டிருக்கார் . அப்ப பிரிட்டிஷ் ஆட்சி. ஒண்ணாம் தேதி ஆச்சுன்னா பிரிட்டிஷ் துரையைப் போய் பார்த்து அவாளுக்கு ஏதாவது gift கொடுத்து salute போட்டு வருவோம்னு இவாள்லாம் சொல்றா. அப்ப வள்ளிமலை ஸ்வாமிகள் சொல்றார், ‘நமக்கு துரை முருகன்டா. திருத்தணிக்கு போங்கோ. அங்க படி பூஜை பண்ணுங்கோ, ‘பதியான திருத்தணி மேவி படி மீது துதித்து உடன் வாழ’ னு படி பூஜை பண்ணனும்னு அருணகிரிநாதர் பாடியிருக்கார். அதனால திருத்தணிக்கு போவோம். அங்க படி பூஜை பண்ணுவோம், நீங்கள் எல்லாம் ஒண்ணாம் தேதி அங்க வந்துடுங்கோ. நானும் வந்துடுறேன்’ ன்னு சொல்லி அவர் ஆரம்பிச்சது அந்த திருத்தணித் திருப்படித் திருவிழா.

இன்னிக்கும் ஜனவரி ஒண்ணாம் தேதி லட்சக்கணக்கானோர் வந்து திருத்தணியில படியில கோலம் போட்டு, காவி இட்டு கற்பூரம் ஏத்தி திருப்புகழை பாடிண்டே போய், (அங்கே 365 படிகள்) ஒவ்வொரு நாளைக்கும் ஒரு படிங்கற மாதிரி. வர வருஷம் நன்னாயிருக்கணும், முருகனோட அருள் வேணும்னு வேண்டிண்டு, மேல போய் ஸ்வாமி தர்சனம் பண்ணிட்டு வர்றதுனு ஒரு வழக்கம். அந்த மஹான் ஆரம்பிச்சு வச்சது அவ்வளோ அமோகமா நடக்கறது அது. ‘துரைன்னா நமக்கெல்லாம் துரை முருகன் தான்’ ன்னு அவர் சொன்னார் – ஹே ப்ரபோ ‘க்ருபாப்தே’ – கருணை கடலேன்னு சொல்றார். ‘தே பாதயோஹோ:’ உன்னுடைய சரணங்களில் ‘பதித்வா’ விழுந்து வணங்கி, ‘ப்ரணம்ய – நமஸ்காரம் பண்ணி, ‘அனேகவாரம்’ – பலதடவை ‘ப்ரஸாத்ய’ – உன்னை சந்தோஷப்படுத்தி உன்னுடைய நாமங்களை பாடி, ‘க்ருபாப்தே’ கருணைக் கடலே, முருகா! நான் உன்னை என்ன வேண்டிக்கறேன்னா ‘ததாநீம்’ என்னுடைய பிராண வியோக காலத்துல என் உயிர் பிரியும் போது “அஹம் வக்தும் ந க்ஷமஹ” எதுவும் பேசறதுக்கு சக்தி இல்லாம போயிடுவேன் நான். ‘அந்தகாலே’, அந்த கடைசி காலத்துல ‘மனாகபி’ கொஞ்சம்கூட என் விஷயத்தில் ‘உபேக்ஷா’ ஒரு அலட்சியம் பண்ணிடாதே, வந்து என்னை காப்பாத்து ன்னு அழகான ஸ்லோகம்.

இந்த இடத்துல தேதியூர் சாஸ்திரிகள் சொல்றார் – ‘அடிக்கடி பாகவனோட பாதாரவிந்தங்கள்ல வணங்கி நாம இந்த ப்ரார்த்தனையை பண்ணணும். பகவான் கடைசி நேரத்துல வந்து நம்மள கைவிடாம காப்பாத்தணும்னு, நம்மை அழைச்சிண்டு போகணும்’ ன்னு சொல்லிட்டு ஒருநாலு ஸ்லோகங்கள் கொடுத்து இருக்கார். இந்த ஸ்லோகங்கள் ஸனத்குமாரர் சம்ஹிதையில இருக்காம்.

सुलभा: योगतत्वज्ञा: सुलभा: ब्रह्मवादिन: |

सुलभा: कर्मीटा: लोके न गुहोपासकास्तथा ||

गुहात्तु न परो देव: गुहे सर्वं प्रतिष्ठितम् |

सर्व वेतान्ततात्पर्य विषयो गुह एव स: ||

गुहास्योपासनात् सर्वे देवास्तुष्यन्ति नेतारात् |

तुष्यन्ति पितरस्सर्वे सत्यं सत्यं वदाम्यहम् ||

कलौ गुहं परित्यज्य नृणां सर्वार्थसाधकम् |

अन्वेषते परं देवं मूढधीर्नात्र संशय: ||

ஸுலபா: யோகதத்வஞா: ஸுலபா: பிரம்மவாதின: |

ஸுலபா: கர்மிடா: லோகே ந குஹோபாஸகாஸ்ததா ||

குஹாத்து ந பரோதேவ: குஹே ஸர்வம் ப்ரதிஷ்டிதம் |

ஸர்வ வேதாந்ததாத்பர்ய விஷயோ குஹ ஏவ ஸ: ||

குஹஸ்யோபாஸனாத் ஸர்வே தேவா: துஷ்யந்தி நேதராத் |

துஷ்யந்தி பிதர: ஸர்வே ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம் ||

கலௌ குஹம் பரித்யஜ்ய குஹம் ஸர்வார்த்த சாதகம் |

அன்வேஷதே பரம் தெய்வம் மூடதீ: நாத்ர சம்ஷய: ||

‘ ஸுலபா: யோகதத்வஞா:’ உலகத்துல யோக தத்வம் தெரிஞ்சவாள், குண்டலினி யோகம் இன்னும், அஷ்டாங்க யோகம் தெரிஞ்சவாள்ளாம் இருப்பா, ஸுலபா: அவாள்ளாம் easy-யா கிடைப்பா. ‘ஸுலபா: பிரம்மவாதின:’ வேதாந்தம்  பேசறவாளும் நிறைய கிடைப்பா, ‘ ஸுலபா: கர்மிடா: லோகே’ கர்மா பண்றவா, யாகம் பண்றவாளும் நிறைய கிடைப்பா. ஆனா ‘ந குஹோபாஸகாஸ்ததா’ குகனிடத்தில்  உண்மையான பக்தி பண்றவா அவ்ளோ சுலபத்தில் கிடைக்க மாட்டா. அவா ரொம்ப கொஞ்சம் பேர்தான் இருப்பா-ன்னு சொல்றார்.

‘குஹாத்து ந பரோதேவ: குஹே ஸர்வம் ப்ரதிஷ்டிதம்’ முருகனுக்கு மேலான தெய்வம் இல்லை. முருகனிடத்திலேயே எல்லாரும் உறைத்திருக்கிறார்கள். ‘ஸர்வ வேதாந்ததாத்பர்ய விஷயோ குஹ ஏவ ஸ:’ வேத வேதாந்தத்தோட தாத்பர்யம் முருகப் பெருமான்தான். ‘குஹஸ்யோபாஸனாத் ஸர்வே தேவா: துஷ்யந்தி நேதராத்’ முருகப் பெருமானை வழிபட்டால் எல்லா தெய்வங்களும் திருப்தி அடையும். ‘துஷ்யந்தி பிதர: ஸர்வே ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்’ பித்ருக்களும் திருப்தி அடைவார்கள் சத்யமாகச் சொல்றேன் அப்படிங்கறார்.

‘கலௌ குஹம் பரித்யஜ்ய ந்ருணாம் ஸர்வார்த்த தாயகம் |

அன்வேஷதே பரம் தேவம் மூடதீ: நாத்ர ஸம்ஸய: ||

அப்படி எல்லாவற்றையும் கொடுக்கக் கூடிய முருகனை விட்டு வேறொரு தெய்வத்தை வணங்குபவர்கள் புத்தி கெட்டவர்கள்ன்னு அர்த்தம். ‘ஏக பக்திர் விஷிஸ்யதே’ன்னு கீதையில பகவான் சொல்றார். நமக்கு ஒரு தெய்வம். அந்த தெய்வத்துக்கிட்ட நாம மனசு வைக்கணும். ஒரு குலமகள் எப்படி தன் கணவனைத் தெய்வமா நினைக்கிறாளோ அந்த மாதிரி நமக்கு ‘ஒரு குரு, ஒரு தெய்வம்’. அந்த குரு காண்பிச்ச வழியில, அந்த தெய்வத்துக்கிட்ட பக்தி வைக்கணும்ன்னு என்ற நோக்கத்தில் இந்த ஸ்லோகங்களை சொல்றார். அந்த மாதிரி ஒரு தெய்வத்துக் கிட்ட மனசு வைச்சா நமக்கு சுலபமா அங்க மனசு ஒருமுகப்பட்டு அந்த தெய்வத்தோட அநுக்கிரகம் கிடைக்கும். அது எந்த தெய்வமாகவும் இருக்கலாம். நாம வேற தெய்வத்தை பழிச்சுப் பேசவே கூடாது. நம் இஷ்ட தெய்வத்துக்கிட்ட உருகி, ‘அஸக்ருத்’ திரும்பத் திரும்ப பிரார்த்தனை பண்ணனும். ‘பகவானே உன்னோட பாதங்கள்ல என்னை சேர்த்துக்கோ’ன்னு. அந்த மாதிரி பிரார்த்தனை பண்றதுக்கு திருப்புகழ்ல நிறைய பாடல்கள் இருக்கு.

“காலன் எனை அணுகாமல் உனதிரு காலில் வழிபட அருள்வாயே” ன்னு ஒரு பாட்டுல இருக்கு. ஸ்வாமிமலைத் திருப்புகழ்.

பாதி மதிநதி போது மணிசடை நாத ரருளிய …… குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய …… மணவாளா

காது மொருவிழி காக முறஅருள் மாய னரிதிரு …… மருகோனே

கால னெனையணு காம லுனதிரு காலில் வழிபட …… அருள்வாயே

ஆதி யயனொடு தேவர் சுரருலகாளும் வகையுறு …… சிறைமீளா

ஆடு மயிலினி லேறி யமரர்கள் சூழ வரவரு …… மிளையோனே

சூத மிகவளர் சோலை மருவுசுவாமி மலைதனி …… லுறைவோனே

சூர னுடலற வாரி சுவறிட வேலை விடவல …… பெருமாளே.

இந்த ‘காதும் ஒரு விழி காகமுற அருள்’ ‘காது, விழி’ ன்னு இருந்த உடனே காதுக்கும், கண்ணுக்கும் ஏதோ சம்பந்தம்ன்னு நினைச்சுண்டுடுவா. இந்த இடத்துல ‘காதும்’ன்னா ‘பிழை செய்தாலும்’ன்னு அர்த்தம். ஒரு காகம் தன்னிடத்தில் பிழை செய்த போதும் அதன் ஒரு கண்ணை மட்டும் எடுத்து, அதை உயிரோட விட்டார்ன்னு ராமரோட கதை. சீதாதேவி ஹனுமார் கிட்ட அடையாளமா சொல்றா இல்லையா, அந்த ‘காக வ்ருத்தாந்தம்’. ‘அருள் மாயன்’ அந்த ராமரோட,’அரிதிரு மருகோனே’ன்னு, முருகனை விஷ்ணுவோட மருகன்னு சொல்றதுக்காக அந்தக் கதையைச் சொல்றார்.

இன்றைக்கு நமக்கு கிட்டத்தட்ட 1300 பாடல்கள் திருப்புகழ்ல கிடைச்சிருக்கு. அதுல பாதிக்கும் மேற்பட்ட பாடல்கள்ல ‘உன்னுடைய பாதங்களை கொடு’ன்னுதான் இருக்கும். உன் பாத தர்சனம் வேணும். உன் பாதத்தை நான் புகழ்ந்து பாடணும். உன் பாதத்தை வணங்கணும்ன்னு இன்னிக்கு ஸ்லோகத்துல

ப்ரணம்யாஸக்ருத் பாதயோஸ்தே பதித்வா

ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்தயேனேக வாரம் |

நவக்தும் க்ஷமோஹம் ததானீம் க்ருபாப்தே

நகார்யாந்தகாலே மனாகப்யுபேக்ஷா ||

‘அப்ப நான் சொல்ல முடியாது . இப்பவே சொல்லி வெச்சுடறேன். முருகா! என்னை கை விட்டுடாதே’. ‘ததானீம் க்ருபாப்தே’, நான் பண்ணின பக்திக்கு பலனா நீ கருணை பண்ணனும்ன்னு கேட்கல. நீ ‘க்ருபாப்தி’ – நீ கருணைக் கடல். எனக்குத் தகுதி இல்லேன்னாலும் நீ க்ருபை பண்ணுவ. அந்த க்ருபையை என் மேல காண்பி. அது உனக்கு இயல்புன்னு சொல்றார்.

நவக்தும் க்ஷமோஹம் ததானீம் க்ருபாப்தே

ந கார்யாந்தகாலே மனாகப்யுபேக்ஷா

ன்னு சொல்றார். முருகனுடைய பாதங்களைப் பத்தி அருணகிரி நாதர் பாடின இன்னொரு ஸ்வாமிமலைத் திருப்புகழ் இருக்கு.

நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து …… தடுமாறி

ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி …… மெலியாதே

மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்து …… சுகமேவி

மாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்று …… பணிவேனோ

நான் உன்னுடைய பாதங்களை நின்று நிதானமாக வழிபட வேண்டும். உலகமே உன்னை புகழ்கிறது. ‘மாஜகம் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்து சுகமேவி’ – உன்னுடைய புகழில் சிலதை நானும் பாடி சந்தோஷப்பட்டு, ‘மாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்று பணிவேனோ’ – பாதபூஜை பண்றது பொறுமையாக பண்ணனும் னு சொல்றார்.

வாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு கின்ற …… குருநாதா

வாசவன் தருதிருவை யொருதெய்வா னைக்கி ரங்கு …… மணவாளா

கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து …… புடைசூழுங்

கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்த …… பெருமாளே

இந்த பிரார்த்தனையோட இன்னிக்கு பூர்த்தி பண்ணிப்போம். நாளைக்கு ஸ்லோகத்துல ‘மனக்கவலைகள் என்னை வாட்டுகிறது. அதுலேர்ந்து என்னை நீ விடுவிக்கணும் னு வேண்டிக்கறார். அதை நாளைக்கு பார்ப்போம்.

வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா

Series Navigation<< ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி ஒன்றாவது ஸ்லோகம் – உயிர் மங்கு பொழுது கடிதே மயிலின் மிசை வரவேணும்ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி மூன்றாவது ஸ்லோகம் – முருக பக்தியே மனக்கவலைக்கு மருந்து >>

3 replies on “ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி இரண்டாவது ஸ்லோகம் – நின் ஞான சிவமான பதம் அருள்வாயே”

Sir,

Looks Subramanya Bhujangam itself like a Ramayana. Soul touching explanation. Very blessed to read these articles.

Thanks,
Rajaraman A

ரொம்ப நன்னா இருக்கு.

இவ்வளவு அழகா எழுதியிருக்க – இன்னும் நிறைய எழுத ஆசீர்வாதம்,

சங்கரர் கூறிய பாடல்களுக்கு அருணகிரியார் பாடல்களை வைத்தே பொருள் புரிய வைக்கும் வழி மிகவும் அருமை.

Leave a Reply to மகாதேவன்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.