Categories
Subramanya Bhujangam

ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி ஆறாவது ஸ்லோகம் – தலையே நீ வணங்காய்

ஸுப்ரமண்ய புஜங்கம் இருபத்தி ஆறாவது ஸ்லோகம் (10 min audio file. Same as the script above)

ஸுப்ரமண்ய புஜங்கத்துல நேத்திக்கு திருச்செந்தூர்ல பன்னீர் இலையில வெச்சு கொடுக்கற விபூதியோட மஹிமையைப் பத்தி பார்த்தோம். ஆச்சார்யாள் விபூதி இட்டுக்கறதை விசேஷமா சொல்றார் என்கிறதே மனசுல வாங்கிக்க வேண்டிய விஷயம். ‘மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு’ அப்படீன்னு தேவாரத்துலேயும் இருக்கு. மாணிக்க வாசகர் ஒரு பாட்டு பாடறார்.

பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்

துணிநிலா அணியி னான்தன் தொழும்பரோ டழுந்தி அம்மால்

திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு

அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

ன்னு சொல்றார். சிவ பக்தர்கள் விபூதி இட்டுண்டு இருக்கறவா கிட்ட எனக்கு பயம் இல்லாம இருக்கு. பாக்கி யாரைப் பார்த்தாலும் எனக்கு பயமா இருக்கு. அச்சப்பத்து-ன்னு ஒரு பத்துப் பாடல், பகவானோட நெருக்கம் ஏற்பட்ட பின்ன, உலக விஷயங்களைப் பார்த்தாலே பயமா இருக்குன்னு ஒரு பத்து பாடல்கள். அதுல இந்த மாதிரி ஒண்ணு சொல்றார். அந்த மாதிரி விபூதி இட்டுண்டவா போரும். வெண்ணீறு அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சுமாறே ன்னு சொல்றார். விபூதிக்கு அவ்வளோ மஹிமை. ஒருத்தன் விபூதி இட்டுண்டே வந்தான்னா பஞ்சமா பாதங்களும் போகும், கைலாசம் போவான்னு புராணங்களில் எல்லாம் இருக்கு.

இன்னிக்கு இருப்பத்திஆறாவது ஸ்லோகம்

दृशि स्कन्दमूर्तिः श्रुतौ स्कन्दकीर्ति-

र्मुखे मे पवित्रं सदा तच्चरित्रम् ।

करे तस्य कृत्यं वपुस्तस्य भृत्यं

गुहे सन्तु लीना ममाशेषभावाः ॥ २६॥

த்ருசி ஸ்கந்த மூர்த்தி: ச்ருதெள ஸ்கந்தகீர்த்தி:

முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம் |

கரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்தஸ்ய ப்ருத்யம்

குஹே ஸந்து லீனா மமாசேஷ பாவா: ||

ன்னு ஒரு ஸ்லோகம். இதோட அர்த்தம் சொல்றேன்.

‘த்ருசி’ -ன்னா – என் கண்களுக்கு எதிரில் ன்னு அர்த்தம், ‘ஸ்கந்த மூர்த்தி:’ முருகப் பெருமானுடைய உருவம். ‘ச்ருதெள’ – என்னுடைய காதுகளில் ‘ஸ்கந்த கீர்த்தி:’ எப்போதும் முருகப் பெருமானுடைய கதைகளையே நான் கேட்க வேண்டும். ‘முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம்’ நான் ஏதாவது பேசினேன்னா, எல்லாரையும் தூய்மை படுத்தக்கூடிய, பேசறவா உட்பட எல்லரையும் தூய்மை படுத்தக் கூடிய முருகப் பெருமானுடைய அந்த திவ்ய சரித்திரத்தை மட்டுமே நான் பேச வேண்டும். ‘கரே தஸ்ய க்ருத்யம்’ கையை வச்சுண்டு முருகப் பெருமானுடைய அர்ச்சனையை பண்ண வேண்டும். ‘வபுஸ்தஸ்ய ப்ருத்யம்’ என் உடம்பு அவனுக்கு அடிமை தொழில் செய்ய வேண்டும் . ஸ்வாமி தூக்கறா இல்லையா! அந்த மாதிரி பகவானோட காரியத்தைத் தான் என் உடம்பு பண்ணனும். ‘குஹே ஸந்து லீனா: மமாசேஷ பாவா:’ மம அசேஷ பாவா:, என்னுடைய எல்லா காரியங்களும் ‘குஹே ஸந்து லீனா’ முருகப் பெருமானிடத்துலேயே லயித்திருக்க வேண்டும், அப்படீன்னு ஒரு ப்ரார்த்தனை.

நமக்கு மனசு அவ்வளவு சலிக்கறது. உடம்பு, புலன்கள் அவ்ளோ தீனி கேட்கறது. பாதாம் அல்வா கொண்டு வாங்கறது, டிவி பார்க்கணுங்கறது அதையெல்லாம் எப்படித் தான் மாத்தறது? அதுலேருந்து எப்படி விடுபடறதுன்னா, forceful-ஆ கிளம்பி கோயிலுக்கு போயிடணும். அங்க போய் பக்தர்களோட சேர்ந்து எல்லாருமா பகவானை பூஜை பண்றதை பார்த்தோம்னா மனசு அங்கே திரும்பும். அப்படி மனசை மெதுவா உலக விஷயங்கள்லேர்ந்து திருப்பி பகவான்கிட்ட கொண்டு போய் ஓட்ட வைக்கணும். அதுக்கு, இந்த மாதிரி எல்லா புலன்களையும் அவனோட காரியங்கள்ல ஈடுபடுத்தி, அது மூலமா மனசு பகவான் கிட்ட போறதுக்கு எல்லா மஹான்களும் ப்ராத்தனை பண்ணியிருக்கா. திரு அங்க மாலை ன்னு தேவாரத்துல அப்பர் பெருமான் ‘தலையே நீ வணங்காய்’, அப்படீன்னு ஆரம்பிச்சு

தலையே நீவணங்காய் – தலைமாலை தலைக்கணிந்து

தலையாலே பலி தேருந் தலைவனைத் தலையே நீவணங்காய்

கண்காள் காண்மின்களோ – கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை

எண் தோள் வீசி நின்றாடும் பிரான் தன்னைக் கண்காள் காண்மின்களோ

செவிகாள் கேண்மின்களோ – சிவன் எம் இறை செம்பவள

எரிபோல் மேனிப் பிரான் திறம் எப்போதுஞ் செவிகள் கேண்மின்களோ

மூக்கே நீமுரலாய் – முது காடுறை முக்கணனை

வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீமுரலாய்

வாயே வாழ்த்துகண்டாய் – மத யானை யுரிபோர்த்துப்

பேய்வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தன்னை வாயே வாழ்த்துகண்டாய்

நெஞ்சே நீநினையாய் – நிமிர் புன்சடை நின்மலனை

மஞ்சாடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீநினையாய்

கைகாள் கூப்பித்தொழீர் – கடி மாமலர் தூவிநின்று

பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் கைகள் கூப்பித்தொழீர்

ஆக்கை யாற்பயனென் – அரன் கோயில் வலம்வந்து

பூக்கையால் அட்டிப் போற்றி என்னாத இல் ஆக்கையால் பயன் என்

கால்களால் பயன் என் – கறைக்கண்டன் உறைகோயில்

கோலக் கோபுரக் கோகரணம் சூழாக் கால்களால் பயன் என்

உற்றார் ஆர் உளரோ – உயிர் கொண்டு போம்பொழுது

குற்றாலத்து உறை கூத்தனல்லால் நமக்கு உற்றார் ஆருளரோ

இறுமாந்து இருப்பன்கொலோ – ஈசன் பல்கணத்து எண்ணப்பட்டுச்

சிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ்ச்சென்று அங்கு இறுமாந்து இருப்பன்கொலோ

தேடிக் கண்டுகொண்டேன் – திருமாலொடு நான்முகனுந்

தேடித் தேட ஒணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டுகொண்டேன்

ன்னு பாடறார். அப்படி என் உடம்பு உன்னுடைய காரியத்தையே பண்ணணும்னு வேண்டிக்கறார்.

‘நிலையேறுமாறு யெண்ணுதியேல் நெஞ்சே நீ வா’ ன்னு ஒரு பதிகத்துல உன்னுடைய கோவிலுக்கு வந்து அந்த கோயிலை பெருக்கி மொழுகி துடைச்சு, பூக்கள் பறிச்சிண்டு வந்து, அதை மாலையாக கட்டி, உனக்கு போட்டு, உன் முன்னாடி தலை மேல கையை வைத்து கும்பிட்டு ‘சங்கரா ஜய போற்றி போற்றி’ ன்னு ஆடி பாடணும். அப்படி பண்ணா தானா மனசு அடங்கும் ன்னு ஒரு பாட்டுல சொல்லியிருக்கார் இல்லையா?

அந்த மாதிரி, மஹான்கள் ப்ரார்தனை பண்றா. மஹா பெரியவா மாதிரி ஞானிகளே கூட கடைசி வரைக்கும், பூஜை பண்றதுல, பகவானோட கதைகளை கேட்கறதுல சந்தோஷ படுவான்னு பாகவத்துல வர்ற கூடிய இடத்தை, ஸ்வாமிகள் சொன்ன போது மஹா பெரியவா, பூஜை பண்ணுவது போல அபிநயம் பண்ணினாளாம். ‘கிருஷ்ணாய நம:, கமலநாதாய நம:, வாசுதேவாய நம: அப்படீன்னு அர்ச்சனை பண்ணனும்னு ஆசைப் படறா இல்லையா?’ ன்னு பெரியவாளுக்கு அத்தனை வருஷம் சந்த்ரமௌலீஸ்வரர் பூஜை பண்ணி, பண்ணி, அர்ச்சனை பண்ணி சந்தோஷப்பட்டதுனால, அந்த மாதிரி காண்பிச்சாளாம். ஸ்வாமிகள் சொல்லி சொல்லி சந்தோஷப் படுவார்.

‘முகுந்த மாலை’ன்னு குல சேகராழ்வார் ஒரு அற்புதமான ஸ்தோத்ரம் பண்ணியிருக்கார். அதுலேயும் இதே மாதிரி ஒரு பிரார்த்தனை வர்றது.

ஜிஹ்வே கீர்தய கேசவம் முரரிபும் சேதோ பஜ ஸ்ரீதரம்

பாணி த்வந்த்வ ஸமர்சயாச்யுதகதா: ச்ரோத்ரத்வய த்வம் ச்ருணு ।

க்ருஷ்ணம் லோகய லோசனத்வய ஹரேர்கச்சாங்க்ரியுக்மாலயம்

ஜிக்ர க்ராண முகுந்த பாத துலஸீம் மூர்தன் நமாதோக்ஷஜம் ||

‘ஜிஹ்வே கீர்தய கேசவம்’ – ஹே நாக்கே! நீ கேசவனை பாடு

‘முரரிபும் சேதோ பஜ’ மனசே! – முரனை கொன்ற அந்த விஷ்ணு பகவானை வழிபடு

‘ஸ்ரீதரம் பாணி த்வந்த்வ ஸமர்ச்சயா’ – லஷ்மியை மார்பில் தரித்திருக்கும் விஷ்ணு பகவானை, ‘என் ரெண்டு கைகளே அர்ச்சனை பண்ணுங்கோ’

‘அச்யுத கதாம் ச்ரோத்ர த்வய த்வம் ச்ருணு’ -என் காதுகள் இரண்டும் அச்சுதன் கதையைக் கேட்கட்டும்.

‘க்ருஷ்ணம் லோகய லோசனத்வய’ – என் கண்கள் இரண்டும் கிருஷ்ணனைப் பார்க்கட்டும்.

‘ஹரே: கச்சாங்க்ரி யுக்மாலயம்’ – ஹரியினுடைய கோவிலுக்கு என்னுடைய பாதங்கள் நடந்து போகட்டும்

‘ஜிக்ர க்ராண முகுந்த பாத துலஸீம்’ – முகுந்தனுடைய பாதத்தில் அர்ச்சனை செய்த துளசியை எடுத்து நான் மூக்கால் நுகருகிறேன்.

‘மூர்தன் நமாதோக்ஷஜம்’ -அதோக்ஷஜனை என் தலை வணங்கட்டும்.

ன்னு தன்னோட உடம்புல இருக்கிற ஒவ்வொரு அங்கத்துக்கும் ஆர்டர் போடறார். ‘ஹே நாக்கே, நீ கேசவனைப் பாடு. ஹே மனசே, முரரிபுவை பஜனம்பண்ணு. ‘ அப்படின்னு சொல்றார்.

அருணகிரி நாதரும்,

“கோடாத வேதனுக்கு யான்செய்த குற்றமென் குன்றெறிந்த

தாடாளனே தென்தணிகைக் குமர நின் தண்டையந்தாள்

சூடாத சென்னியு நாடாத கண்ணுந் தொழாத கையும்

பாடாத நாவுமெனக்கே தெரிந்து படைத்தனனே. “

(கந்தர் அலங்காரப் பாடல்)

அப்படி தன்னோட குறையைச் சொல்றார். கொடுத்த உடம்பை வச்சிண்டு நான் என்னென்னவோ பண்றேனே. நான் அப்படி என்ன பாவம் பண்ணிட்டேன் அந்த ப்ரம்மன் கிட்ட? இப்படி என்னை படைச்சிருக்கானே. அப்படின்னா என்ன அர்த்தம். ‘எனக்கு முருகனுடைய தண்டையந்தாளை சூடக் கூடிய சென்னியும், அவனை நாடும் கண்களும், அவனைத் தொழும் கைகளும், அவனைப் பாடும் நாவும் கொடு’ன்னு பிரார்த்தனை பண்றார்.

இந்த கை கால்களைக் கொண்டு பகவானுடைய வழிபாடு பண்றது. அவனுடைய காரியங்களையே எப்பவும் பண்றதுங்கறது முடியாமல் போகலாம். எப்பவும் முடிஞ்சது நம்முடைய நாக்கால அவன் நாமத்தைச் சொல்றது. அது நம்ம கூட எப்பவும் இருக்கு. எந்த ஒரு ஸ்ரமமும் இல்ல. ஊமையா இல்லாத பட்சத்தில பகவானுடைய கதைகளைப் பேசலாம். நாமத்தை சொல்லலாம். இருக்கிறதுக்குள்ள இது ரொம்ப சுலபமானது. ஒரு அர்ச்சனை பண்ணனும்னாக் கூட புஷ்பம் வேணும். அப்படி இல்லேன்னாக் கூட ‘ஸ்தவைஹி அர்ச்சேந் நரஸ் ஸதா’ அப்படின்னு பீஷ்மாச்சார்யாள் சொன்ன மாதிரி இந்த ஸ்தோத்ரத்தினாலேயே பகவானை அர்ச்சனை பண்ணலாம். அதுல அதிகமா திருப்தி ஆகிறார்ன்னு வேற சொல்றார். அருணகிரி நாதரும்,

“ஆசைகூர் பத்தனேன் மனோ பத்ம

மான பூ வைத்து …… நடுவேயன்

பான நூலிட்டு நாவிலே சித்ர

மாகவே கட்டியொரு ஞான

வாசம் வீசி ப்ரகாசியா நிற்ப

மாசிலோர் புத்தி யளிபாட

மாத்ருகா புஷ்ப மாலை கோல ப்ர

வாள பாதத்தில் அணிவேனோ ………

ன்னு ஒரு அழகான பாடல். என்னுடைய ஆசையோடு கூடிய ‘மனசு’தான் தாமரை. அந்தப் பூவை வச்சுண்டு ‘அன்பு’ என்கிற நூலிட்டு (என்னோட அன்புதான் நூல்), என் நாக்கைக் கொண்டு மாலையாகக் கட்டறேன். சித்ரக் கவி மாலையாக அதைக் கட்டி, ஞானம் தான் அதோட வாசனை, ‘மாசிலோர் புத்தியளி பாட’, தூய்மையான புத்தி உள்ளவர்கள் என்ற தேனீக்கள் இந்த மாலையில வந்து குடி இருக்கிறார்கள். மாத்ருகா புஷ்ப மாலை. 51 அக்ஷரங்களுக்கு மாத்ருகா அக்ஷரங்கள் ன்னு பேரு. அந்த மாத்ருகா அக்ஷரங்களைக் கொண்டு ஒரு புஷ்ப மாலை பண்ணி ‘கோல ப்ரவாள பாதத்தில் அணிவேனோ’ உன்னோட அழகான பாதத்தில நான் போட மாட்டேனா’ அப்படின்னு இங்க வேண்டிக்கறார்.

கந்தர் அநுபூதியில ‘நெஞ்சக் கனகல்லு’ ன்னு ஆரம்பிச்சு 51 பாடல்கள் இருக்கு. அந்த 51 பாடல்களும், இந்த 51 மாத்ருகா அக்ஷரங்களைக் கொண்டு செய்தது. ஒவ்வொரு பாட்டுலயும் ஒரு பீஜாக்ஷரம் இருக்குன்னு மஹான்கள் சொல்லுவா. முன்ன வேண்டிண்ட மாதிரியே அருணகிரி நாதர் அந்த கந்தர் அநுபூதியைப் பாடி, மாத்ருகா புஷ்ப மாலையை முருகப் பெருமானுடைய கோல ப்ரவாள பாதத்தில் அணிவித்தார் ன்னு மஹான்கள் சொல்லுவா. பாக்கி பாடலையும் பாடிடறேன்.

மூசுகா னத்து மீதுவாழ் முத்த

மூரல்வே டிச்சி …… தனபார

மூழ்குநீ பப்ர தாபமார் பத்த

மூரிவே ழத்தின் …… மயில்வாழ்வே

வீசுமீ னப்ப யோதிவாய் விட்டு

வேகவே தித்து …… வருமாசூர்

வீழமோ திப்ப ராரைநா கத்து

வீரவேல் தொட்ட …… பெருமாளே. “

அப்படி மஹான்கள் எல்லாருமே, ‘பண்ண வேண்டிய காரியம் முருகனுடைய வழிபாடு’ ன்னு சொல்றா. நமக்கும் ஒரு நாள் அதோட பெருமை புரியணும், ஈடுபட்டு பக்தி பண்ணனும்ன்னு வேண்டிப்போம்.

வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா

Series Navigation<< ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி ஐந்தாவது ஸ்லோகம் – நோய்கள் எனை நலியாதபடி உன தாள்கள் அருள்வாயேஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி எழாவது ஸ்லோகம் – என்னையும் அடியனாக்கி இருவினை நீக்கி ஆண்ட பன்னிரு தடந்தோள் வள்ளல் >>

2 replies on “ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி ஆறாவது ஸ்லோகம் – தலையே நீ வணங்காய்”

பல மேற்கோள்களுடன் விளக்கம் கொடுத்தது மிக அருமை. இந்த உடலே அவன் திருப்பணிக்கே !

Leave a Reply to mageshCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.