Categories
Mukunda Mala

முகுந்தமாலா 33, 34 ஸ்லோகங்கள் பொருளுரை

முகுந்தமாலா 33, 34 ஸ்லோகங்கள் பொருளுரை (15 minutes audio Meaning of Mukundamala slokams 33 and 34)

முகுந்தமாலையில நேத்திக்கு 31வது ஸ்லோகத்துல, ‘அல்ப புத்தி கொண்டவர்களும், அதமர்களான புருஷர்கள் கிட்ட போய் வேலை தேடி நிற்காதே. புருஷோத்தமனும், வாரி கொடுக்கும் வள்ளலும், எப்பவும் சலிக்காமல் கொடுக்கக் கூடிய, உலகத்துக்கெல்லாம் தலைவனான, லக்ஷ்மிபதியான ஸ்ரீமன் நாராயணனை வணங்கி அவனுடைய காரியத்தை நீ பண்ணு. அவன் உனக்கு எல்லாமே கொடுப்பான்’ ன்னு சொன்னார். அடுத்தது மதனனை விரட்டற மாதிரி ஒரு ஸ்லோகம் சொல்றார். ‘காமனே! நீ ஏற்கனவே ஒரு தடவை பரமேஸ்வரனுடைய கோபத்துக்கு ஆளாகி நெற்றிக் கண்ணால அவர் உன்னை சுட்டெரித்தார். என் மனசுல நான் முகுந்த பதாரவிந்தத்தை வெச்சுண்டிருகேன். அதனால நீ உன் திறமையை இங்க காண்பிக்காதே. ஓடிப் போயிடு! இல்லேனா முராரியினுடைய சக்ர பராக்ரமத்தை அடுத்து பார்க்க வேண்டி வரும்’ ன்னு சொன்னார்.

இதெல்லாம் நமக்கு மஹான்கள் சொல்ற உபதேசம். அதை ஒரு அழகா சொல்றா. நான் நேத்தி இந்த ஸ்லோகத்தை சொல்லும் போது

நாதே² ந:புருஷோத்தமே த்ரிஜக³தாமேகாதி⁴பே சேதஸா

ஸேவ்யே ஸ்வஸ்ய பத³ஸ்ய தா³தரி ஸுரே நாராயணே திஷ்ட²தி ।

யம் கஞ்சித்புருஷாத⁴மம் கதிபயக்³ராமேசமல்பார்த²த³ம்

ஸேவாயை ம்ருʼக³யாமஹே நரமஹோ மூடா⁴ வராகா வயம் ॥

ன்னு நாம யார் யார்கிட்டயோ போய் வேலைக்கு application போட்டுண்டிருக்கோமே. பகவானுடைய காரியத்தை பண்ணக் கூடாதா? முட்டாளா இருக்கோம் நாம். மட்டமானவர்களா இருக்கோம்னு சொல்றார் ன்னு சொன்னேன். ஆனா எத்தனை பேரால அந்த மாதிரி டக்குன்னு வேலையை விட முடியும்? அது சில நேரங்கள்ல தப்பாக கூட ஆயிடும். நம்மளை படிக்க வெச்ச அப்பா அம்மா ஏதோ எதிர்பார்க்கறான்னா அல்லது மனைவி, குழந்தைகள் இருந்தானா, நமக்கு கடமைகள் இருக்கு. ஸ்வாமிகள் மாதிரி வைராக்யத்தோட இருக்கிறவா, அது மாதிரி பகவானுடைய காரியத்தை பண்ணினா. கொஞ்சம் கொஞ்சமா அந்த வைராக்கியமும் வரணும். வைராக்கியம் வந்த பின்ன அந்த மாதிரி பகவானுடைய காரியத்தை பண்ணிண்டு உட்கார்ந்திருக்கலாம். அதுக்கு பகவான் என்ன கொடுக்கிறாரோ அதைக் கொண்டு நாம் ஜீவிக்கலாம்னு அந்த தைரியம் வரணும்.

ஸ்வாமிகள் கிட்ட 20, 25 வயசுல இருக்கிற 15, 20 இளைஞர்கள் வந்தா. ஸ்வாமிகள் கிட்ட எல்லாம் கத்துண்டா. ஸ்வாமிகளுடைய உயர்ந்த வைராக்யத்தையும், பக்தியையும் பார்த்து நாங்களெல்லாம் ரசிச்சோம். ஆனா அவர் யாரையுமே ஸன்யாசியாகவோ, இல்ல வேலையை விட்டுட்டு பகவானை பஜனம் பண்ணுன்னு சொல்லலை. தினமும் 1 மணி, 2 மணி நேரமாவது பகவானுடைய பஜனத்தை பண்ணுங்கோ. அந்த ருசி ஏற்பட்டு, அந்த ருசி மீதூறிப் போகும்போது உலக விஷயங்கள்ல பற்று தானாக விலகும் போது அதிகமா இன்னும் பஜனத்தை பண்ணி அப்படி evalutionary ஆ ஒவ்வொரு அடியா மெதுவா பார்த்து வெச்சு முன்னேற சொன்னார். ஏன்னா ஓர் அடி முன்னாடி வெச்சா பிறகு, பின்னாடி வைக்கக் கூடாது. பிறகு அது அவமானம். பகவானுடைய நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமா நாம வளர்த்துக்கணும் எங்கிறதுனால ஸ்வாமிகள் அவ்ளோ அழகா எல்லாருக்கும் வழி காண்பிச்சார். அந்த மாதிரி மஹான்கள் பண்ணுவா. வேற தப்பான ஆஸ்ரமங்கள்ல போய் சேர்ந்தா தான், என்னமோ எல்லாத்தையும் உதறிட்டு பெரிய ஞானி ஆயிட்டா மாதிரி மொட்டை அடிச்சுண்டு, ஒரு ஆறு மாசம் இருந்துட்டு அப்புறம் திரும்பவும் வந்து இங்க வேலைக்கு சேர்ந்துடுவா. அது மாதிரி தான் நிறைய இப்ப நடந்துண்டு இருக்கு. அப்படி மஹான்கள் பண்ண மாட்டா. குலசேகராழ்வாருடைய ஸ்லோகத்துல உயர்ந்த உண்மைகளையும், நம்முடைய பக்தியை வளர்த்துக்கறத்துக்கான உபாயங்களையும் அவர் சொல்றார். வழி காண்பிக்கறார். இந்த வழியில கொஞ்சம் கொஞ்சமா பொறுமையா போய் நாம் அந்த பக்தி முற்றும் போது ஒரு முயற்சி எடுக்காமல் பகவான் நம்மை பக்கத்தில் சேர்த்து அணைச்சுண்டிருவார். யாரும் அப்ப நம்மை குத்தம் சொல்ல மாட்டா. அடுத்த ஸ்லோகத்துல

तत्त्वं ब्रुवाणानि परं परस्मात् मधु क्षरन्तीव सतां फलानि ।

प्रवर्तय प्राञ्जलिरस्मि जिह्वे नामानि नारायणगोचराणि ॥ ३३॥

தத்த்வம் ப்³ருவாணானி பரம் பரஸ்மாத்

மது⁴ க்ஷரந்தீவ ஸதாம் பலானி |

ப்ரவர்தய ப்ராஞ்ஜலிரஸ்மி ஜிஹ்வே

நாமானி நாராயண கோ³சராணி ॥ 33 ॥

ஜிஹ்வே! என் நாவே ‘ப்ராஞ்ஜலிரஸ்மி’ – கை கூப்பி உன்னை வேண்டிக்கறேன் எங்கிறார். தன்னுடைய நாக்கு கிட்ட ‘உன்னை கும்பிட்டு ஒரு பிரார்த்தனை பண்ணிக்கறேன்’ ‘நாமானி நாராயண கோ³சராணி’ – நாராயணனுடைய சம்பந்தப்பட்ட நாமங்களை ‘ப்ராவர்தய’ – திரும்ப திரும்ப ஜபம் பண்ணுன்னு சொல்றார். பகவானுடைய நாமங்கள் என்னமா இருக்குன்னா, ‘மது⁴ க்ஷரந்தீவ ஸதாம் பலானி’ இது ஸாதுக்கள் விரும்பக் கூடிய பழமா இருக்கு. அதுல இருந்து தேன் பெருகுகிறது. ஒரு பலாப் பழம் நல்ல தித்திப்பா இருந்தா என்ன ருசியோ அது மாதிரி நூறு மடங்கு ருசி மஹான்கள் நாம ஜபத்துல அனுபவிக்கறா. இதுல அழகு என்னன்னா நாக்கை கூப்பிட்டு சொல்றார். நாக்கு ருசியை விரும்பற அவயவம். ருசிக்கு ஆசைப்படறது. நீ இந்த நாமத்தோட ருசியை பழகிக்கோ. அதை புரிஞ்சுக்கோன்னு சொல்றார். ஸாதுக்கள் இந்த பழத்தைதான் விரும்பறா. இதுதான் அவாளுக்கு தேனா ருசிக்கறதுன்னு சொல்றார். இந்த நாமங்கள் எல்லாம் ‘தத்த்வம் ப்³ருவாணானி பரம் பரஸ்மாத்’ ‘பரம் னா உயர்ந்ததுன்னு அர்த்தம். உயர்ந்ததை காட்டிலும் உயர்ந்த தத்துவத்தை இந்த நாமங்கள் சொல்லி கொடுக்கின்றன. இந்த நாமத்துல உனக்கு ருசி வந்துடுத்துன்னா, உயர்ந்த தத்துவங்கள் எல்லாம் தானா விளங்கும். அதனால நாராயண நாமத்தை பகவானுடைய நாமங்களைச் சொல்லி பழகு. ஹே நாவே உன்னை கைகூப்பி வேண்டிக்கறேன் என்கிறார்.

தத்த்வம் ப்³ருவாணானி பரம் பரஸ்மாத்

மது⁴ க்ஷரந்தீவ ஸதாம் பலானி |

ப்ரவர்தய ப்ராஞ்ஜலிரஸ்மி ஜிஹ்வே

நாமானி நாராயண கோ³சராணி ॥

இந்த மாதிரி பார்த்துக்கணும். நேத்தி ஸ்லோகத்துல பகவானுடைய காரியத்தைத் தான் பண்ணனும்னு சொன்னா கூட மஹான்கள், அதை அவசரப் பட்டு பண்ணி ஸ்ரமப்படக் கூடாதுன்னு ஸ்வாமிகள் சொல்லிக் கொடுத்திருக்கார்னு சொன்னேன். நமக்கு இந்த மாதிரி நாமத்தை சொன்னா பலாப் பழத்தை காட்டிலும் இந்த நாம ஜபம் இனிக்கறதான்னா, அப்ப நாம பகவானுடைய காரியத்தையே பண்ணிண்டிருக்கலாம். அந்த அளவுக்கு வரும் வரை நாம் பஜனத்தை அதிகமாக்கிண்டே போகணும். அப்போ அதுல ருசி ஏற்பட்டு உலக விஷயங்கள்ல ருசி குறைஞ்சுடுத்துன்னா, மீதியிருக்கிற நம்முடைய எளிமையான தேவைகளை சுலபமா பூர்த்தி பண்ணிக்கலாம். நாம் யாரையும் நாடாமல் இருக்கலாம். ஏன்னா, பகவானோட காரியத்தை பண்ணுங்கிறார். ‘சரி நான் ராமாயணம் படிக்கறேன். இந்த வேலையை விட்டுடறேன்னு விட்டுட்டு பிறகு இராமாயணத்தை நாம ஒரு விலை வைத்து விற்றோமானால், அது அதைவிட பெரிய பாவம். எந்த உயர்ந்த நோக்கத்துக்காக நாம பஜனம் பண்றோமோ, அது கிடைக்காம போயிடும். அதனால் நேத்திக்கு சொன்ன ஸ்லோகம் தெய்வசாதுக்களுக்கும், மஹான்களுக்கும் சொன்னது. பகவானுடைய காரியத்தையே பண்ணிண்டிரு. பகவான் உன்னை பார்த்துப்பார்னு. நமக்கு இன்னும் நிறைய பாமர புத்தி இருக்கு. அது போகிறதுக்கு தினம் ஒரு மணிநேரம் இரண்டு மணி நேரம் பகவானோட பஜனத்தை பண்ணி அதுல ருசியை வளர்த்துண்டு, இந்த ஸ்லோகத்துல சொல்ற மாதிரி ‘நாக்கே நீ நாராயணனுடைய நாமங்களை சொல். இந்த பழம் தேன் பெருகுகிறது. ஸாதுக்களுக்கு இந்த பழம்தான் ரொம்ப தித்திப்பா இருக்கு’ சொல்றார். அதுமாதிரி அந்த ஸாதுவாகவாவது நாம ஆகணும். அதுக்கு பிறகு நம்மை மேலே கூட்டிண்டு போறது பகவானுடைய பொறுப்பு.

இந்த பகவன் நாமத்தை சொல்லி பழகணும்ங்கிறதுதான் முக்யமான உபதேசமா மஹான்கள் சொல்றா. சுவாமிகளும் எனக்கு அதுதான் சொல்லியிருக்கார். குலசேகராழ்வாரும் எல்லாருக்கும் அதைத் தான் சொல்றார்.

அடுத்த ஸ்லோகத்துல

इदं शरीरं परिणामपेशलं पतत्यवश्यं श्लथसंधि जर्जरम् ।

किमौषधैः क्लिश्यसि मूढ दुर्मते निरामयं कृष्णरसायनं पिब ॥ ३४॥

இத³ம் ஶரீரம் பரிணாமபேசலம்

பதத்யவச்யம் ச்லத²ஸந்தி⁴ ஜர்ஜரம் ।

கிமௌஷதை:⁴ க்லிச்யஸி மூட⁴ து³ர்மதே

நிராமயம் க்ருʼஷ்ணரஸாயனம் பிப³ ॥ 34 ॥

ன்னு அழகான ஸ்லோகம். இந்த சரீரம் நீ என்னதான் பார்த்துண்டாலும் ‘பரிணாமபேசலம் பதத்யவச்யம் ச்லத²ஸந்தி⁴ ஜர்ஜரம்’ இது முதிர்ச்சியடைஞ்சு கட்டெல்லாம் தளர்ந்து ஒரு நாளைக்கு இல்லாம போகப் போறது. அதனால ‘மூட⁴ து³ர்மதே’ எங்கிறார். மூடனே துர்மதியே என்கிறார். பஜகோவிந்தம் பஜகோவிந்தம் கோவிந்தம் பஜே மூடமதேன்னு சொல்றார் சங்கரர். இவா மூடமதி ன்னு யாரை சொல்றான்னா இந்த உடம்பை நான்னு நினைச்சு உடம்புக்கான சுகத்தை தேடி நாம் ராப்பகலா அலையறோம். அந்த தேகத்தை ஆத்மான்னு பிரமிக்கறதைத் தான் மஹான்கள் மூட மதின்னு சொல்றா. இது என்ன நீ பண்ணினாலும் கீழ விழதான் போறது. ‘பதத்யவச்யம்’ இது ஒரு நாள் விழப் போறது. எடுத்துண்டு போய் காட்டுல வைக்கப் போறா. ‘ச்லத²ஸந்தி⁴ ஜர்ஜரம்’ இதுல எத்தனையோ ஓட்டைகள் இருக்கு. இனிமே இளமை திரும்பி, கட்டுக்கோப்பா இருக்கப் போறது இல்லை. அதனால ‘கிமௌஷதை:⁴ க்லிச்யஸி’ என்னமோ மருந்துகளை கொடுத்து இதை ஏன் நீ தொல்லை படுத்தறேன்னு கேட்கறார். பல மருந்துகள் கொடுத்து இந்த உடம்பை சரி பண்ண முடியாது. அஸ்வகந்தா சாப்பிட்டா நன்னா strong ஆ இருப்போம்ங்கிறது எல்லாம் ஒரு வயசு வரைக்கும் தான். நீ போட்டு தொல்லை பண்ணாதே, இந்த உடம்பை ‘நிராமயம்’ உனக்கு தீங்கும் பண்ணாது, உனக்கு பெரிய நன்மையை செய்யக் கூடிய ஸ்ரீ கிருஷ்ணன் என்ற அந்த ரசாயனத்தை ‘க்ருʼஷ்ணரஸாயனம் பிப³’ நீ பானம் பண்ணு. நீ கிருஷ்ணான்னு சொல்லு. கிருஷ்ணா ராமா கோவிந்தா ஹரே ராம கிருஷ்ணா கோவிந்தா ன்னு நீ பகவானோட நாமங்களை பாடினால் உடம்பு தானா நன்னாயிருக்கும்.

இங்கேயும், நாம மருந்தே சாப்பிட வேண்டாமானா, உடம்பு ஏதாவது தொல்லை பண்ணித்துன்னா, பஜனம் பண்றதுக்கு வேண்டிய அளவுக்கு கொஞ்சம் மருந்து சாப்பிட்டு உடம்பை பார்த்துக்கணும் தான். ஆனா மருந்து சாப்பிட்டு நூறு வயசு ஹடயோகம் பண்ணி வாழறதுக்காக நாம் இங்க வரலை. பகவானை அடையறதுக்கு தான் வந்திருக்கோம். பகவானை அடைஞ்சாச்சுனா உடம்புக்கு பிரயோஜனம் இல்ல. அப்பறம் தேவையில்லை. பகவானை அடையறதுக்கு உடம்பை பார்த்துக்கோ. ஆனா இந்த உடம்புல ஆசை வெக்காதே. இந்த உடம்பை நம்பாதே என்கிறார். உடம்பை நீ நம்பினால் ஏமாந்து போகப் போறே. அதனால பகவானுடைய நாமங்களை பாடி அந்த ருசியை வளர்த்துண்டா அதுவே அமிர்தம். அந்த அமிர்தம் உனக்கு எல்லா வியாதிகளையும் போக்கிடும்னு மஹான்கள், தங்களுடைய அனுபவத்தினால் கண்ட உண்மையை சொல்றா.

நாம் சிவன் சாரை பார்க்கலையா? முப்பது, நாற்பது வருஷம் ஸ்நானம் இன்றி ஒரு வாய் சாதம் சாப்டுண்டு, அது கூட ஏதோ newspaperல வந்து, கூட்டம் வந்து, தொல்லை பண்ணப் போறாங்கிறதுக்காக ஒரு வாய் சாதம் சாப்டுவார் அவர். மத்யானம் 12, 1 மணிக்கு ஒரே ஒரு வாய் சாதத்துல 1 ஸ்பூன் ரசத்தை விட்டுண்டு சாப்டுவார். யாரால அந்த மாதிரி முப்பது, நாற்பது வர்ஷம் ஒரு ஸ்பூன் சாதம் சாப்டுண்டு, தண்ணியே குடிக்காம இருக்க முடியும்? மத்யானம் நாலு மணிக்கு ஒரு ½ டம்ளர் coffee தான் குடிப்பார். மத்த வேளை எப்பவுமே தண்ணியே குடிக்க மாட்டார். அவருக்கு பசி, தாகம் போயிடுத்து. ஏன் நீங்க ஜலம் குடிக்கலேன்னா, தாகம் என்னை விட்டு போயிடுத்தும்பார். ஸ்நானம் வருஷக் கணக்கா பண்ண மாட்டார்.

மஹா பெரியவா இருக்கலையா? பொரியை சாப்பிட்டுண்டு தினம் 20 மைல் நடந்துண்டு இருந்தார். அதெல்லாம் அந்த நாமத்துடைய மகிமை தான். அவா பண்ணின சந்திரமௌலீஸ்வர பூஜை. சிவன் சாருக்கு கணபதியிடத்தில் இருந்த பக்தி. அப்படி அவா ஸித்தி அடைஞ்சுடறா. மஹான்கள் ஞானத்தை அடைஞ்சுடறா. பகவானாகவே ஆயிடறா. ஒரு மணி நேரம் சஹஸ்ரநாமம் சொன்னா நமக்கு tired ஆகிறது. ஸ்வாமிகள் கார்த்தால 5 மணில இருந்து ராத்திரி 10 மணி வரைக்கும், பாராயணம், ப்ரவச்சனங்கள்னு பண்ணுவார்.  மத்யானம் 20 நிமிஷம் தூங்குவார். ராத்திரி பத்து மணிக்கு மேல யாராவது வந்தா கூட அவாளுக்கு படிப்பார். இருக்கட்டும், இருக்கட்டும்னு சொல்லி இன்னும் கொஞ்சம் நேரம் இதை படிச்சு முடிச்சுடறேன்னு ஆசையா மேல மேல படிப்பார். அப்படி அவாளால எப்படி பண்ண முடிஞ்சுது. இந்த மாதிரி மஹான்களை பார்த்ததுனால இந்த ஸ்லோகம் புரியறது. கொஞ்சூண்டு சாப்டுண்டு, மஹான்கள் இருந்திருக்கா. பசி, தாகத்துக்குகெல்லாம் மேல இந்த பகவானோட நாமா சக்தியை கொடுக்கும். மருந்துகளுகெல்லாம் மேல இதுங்கிறதுனால, அவா ஞாபகம் படுத்தறா. இப்படி ஒண்ணு இருக்கு. தெரிஞ்சு வெச்சுக்கோங்கிற மாதிரி சொல்றா. ஒரு நாள் நமக்கும் அந்த அனுபவம் வரணும். அதுக்கு விடாம நாமத்தை சொல்லிப் பழகணும்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்….கோவிந்தா கோவிந்தா

Series Navigation<< முகுந்தமாலா 31, 32 ஸ்லோகங்கள் பொருளுரைமுகுந்தமாலா 35, 36 ஸ்லோகங்கள் பொருளுரை >>

One reply on “முகுந்தமாலா 33, 34 ஸ்லோகங்கள் பொருளுரை”

நாராயணா எனா நாவென்ன நாவே
என்று சொல்கிறார் கவி !
நாம ஜெபம் என்பது உலக பசு பாச பந்தன்களினின்று மெதுவாக ஆனால் ஸ்திரமாக விடுபடச் செய்யும் ஒர் எளிய சாதனம் ! நம் மனதை, வாக்கை எளிய வழியில் சுத்தப் படுத்தும் முறை !
ஒரு பைசா செலவற்று, இடம் தனியாகத் தேடாமல் மனதில் எப்போதும் பகவத் சிந்தனை கொண்டு நாம ஜெபம் செய்வது செலவில்லாத எளிய பக்தி மார்க்கம் !
அமெரிக்காவில் வெள்ளையர்கள் கூட ஹரே ராம இயக்கம் நடத்துவதுதான், மார்கழி மாதம் திருப்பாவை முழுதும் சொல்லி ஆண்டாள் முகுந்தன் வழிபாடு செய்வதை நான் பார்த்திருக்கிறேன்!
ஜெபம் செய்யும்போது நாம் கையை மறைத்து செய்வது போல் அவர்களும் கையுறை போட்டு மறைத்துச் செய்வது ரம்யமான காட்சி!
ராம ஜெபம் செய்து உய்வோமாக!
ஹரே ராம ராம…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.