Categories
Govinda Damodara Swamigal

ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – பால காண்டம்

பாலகாண்டம்

  1. பகவான்னு ஒருத்தர் இருக்கார். அவர் கருணாமூர்த்தி’ என்பதை மஹான்கள் நமக்கு உணர்த்துகிறார்கள்

வால்மீகி முனிவர் நாரத மஹரிஷியிடம் ’இந்த உலகத்தில் சத்யம், தர்மம், கல்வி, கேள்வி, வீரம், அழகு, ஒழுக்கம், பணிவு, இப்படி எல்லா நல்ல குணங்களும் கொண்ட மனிதர் யாராவது உண்டா?’ என்று கேட்கிறார். நாரதர் ராமர் என்ற இக்ஷ்வாகு குல மன்னர் அப்படிப் பட்டவர் என்று அவருடைய சரிதத்தை சொல்கிறார்.

பிறகு வால்மீகி முனிவர், ப்ரம்ம தேவரின் ஆணையின்படி அந்த ராம சரித்திரத்தை ஞான திருஷ்டியால் கண்டு, விஸ்தாரமாக ஒரு காவியமாய் படைக்கிறார். அவர் அந்த ராமாயணத்தை லவ குசர்களுக்கு சொல்லித் தருகிறார். அவா ரெண்டு பேரும் ராமருக்கே அதை அச்வமேத யாக மண்டபத்தில் பாடிக் காண்பிக்கிறார்கள்.

தசரதரின் நீதி தவறாத ஆட்சி, மக்களுடைய மேன்மைக் குணங்கள் இவற்றை முதலில் சொல்லி, தசரதர் ரிஷ்யச்ருங்கரை அழைத்து வந்து அச்வமேத யாகமும் புத்ரகாமேஷ்டியும் செய்து, அதன் முடிவில் பாயஸப் ப்ரஸாதம் பெற்று கௌஸல்யை, ஸுமித்ரை, கைகேயி என்ற மூன்று மனைவிகளுக்கு அதை பகிர்ந்து அளித்ததையும் சொல்கிறார்.

விஷ்ணு பகவான் தேவர்களுக்கு ராவணனிடமிருந்து அபயம் குடுத்து, அதன்படி, துஷ்ட சம்ஹாரம் சிஷ்ட சம்ரக்ஷணம் செய்வதற்காக, கர்ப்பவாசம் இருந்து பூமியில், ராம லக்ஷ்மண பரத சத்ருக்ணர்களாய் அவதாரம் செய்கிறார். அவருக்கு ஸஹாயம் பண்ணுவதற்காக தேவர்கள், வானரர்களையும் கரடிகளையும் ச்ருஷ்டி பண்ணுகிறார்கள். ராமாவதாரம் முடிஞ்சாலும், அதை எல்லாரும் இன்னிக்கும் படிச்சுக் கேட்டுக் கடைத்தேற வேண்டி, கருணையோடு, வால்மீகி முனிவர் வாயிலாக அதை ராமாயண காவ்யமாக வௌப்படுத்தி இருக்கார்.

———————————————-

நான் சின்ன வயசுலேர்ந்து எல்லாத்தையும் question பண்ணுவேன். Agnostic. பகவத் விஷயமாக பல புஸ்தகங்கள் படித்தேன். பல பெரியவர்களிடம் பல கேள்விகள் கேட்டேன். எனக்கு த்ருப்தியான பதில் கிடைக்கவில்லை. தெய்வீகத்தை சாமர்த்யத்தால் புரிந்து கொள்ள முடியாது என்பதை மட்டும் உணர்ந்தேன். ஸ்வாமிகள் கிட்ட பழகின புதுசுல பல கேள்விகள் இந்த மாதிரி  கேட்டிருக்கேன். “பகவான் கருணைக் கடல் என்றால் ஏன் எனக்கு இவ்வளவு கஷ்டம் வரது?” னு கேட்டேன். “கடலை பார்த்தவா அப்படி சொல்றா. டெல்லிக்காரா, பீச்சே பார்க்காதவாளுக்கு அது சொன்னாப் புரியுமா? ஒனக்கு வேணும்னா பக்கத்துல வந்து பாரு. அப்ப புரியும்” என்றார். அவருக்கு பகவானைப் பத்தி ஸந்தேகமற தெரிந்து இருந்தது. ஓரளவு humble ஆக sincere ஆக கேட்டால் நமக்கும் புரிய வைக்க try பண்ணினார். “வாலி வதம் பண்ணினது சரியா?” என்று கேட்டேன். “இந்த மாதிரி மேலோட்டமாக question பண்றவாளுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன். ஒனக்கு வேணும்னா பக்தியோடு ராமாயணத்தை முழுக்க படி. அப்பறம் கேளு சொல்றேன்.” என்றார்.

அவர் சொன்னபடி கேட்டு பணிவோடு நெருங்கியதில் ‘பகவான் என்று ஒருத்தர் இருக்க வேண்டும், அவர் கருணை கிடைத்து விட்டால் வாழ்க்கை அவ்வளவு பாரமாய் இல்லாமல் தள்ளி விடலாம்’ என்று லேசாய் புரியறது. ஏனென்றால் ஸ்வாமிகள் னு ஒருத்தர் இருந்தார். அவர் ஸத்தியமே வடிவமாக இருந்தார். எங்கிட்ட ரொம்ப கருணையோடும் இருந்தார். அதை நினைத்தால் இன்னிக்கும் ரொம்ப ஆறுதலாகவும் தைரியம் குடுப்பதாகவும் இருக்கிறது.

நான் ஏன் என்னைப் பற்றி சொல்கிறேன் என்றால், I am a sample of this generation. English educated, trained in scientific querying, greedy. Each of this is a hindrance to spiritual progress. பணப் பெருக்கமும், நவீன விக்ஞானமும் இக்காலத்தில் தெய்வத்தை முகாந்திரத்தோடு உணர முடியாமல் செய்துவிட்டது. புண்ய கார்யங்கள் எல்லாம் commercialize  ஆகி விட்டன. ஏதோ பாக்ய வசத்தால், நல்ல அம்மா அப்பாவுக்கு பிள்ளையாய் பிறந்து, அவா பணத்தில் உயரத்தான் மனித வாழ்க்கை என்பது போல, பேராசை எனும் பிணியில் பிணிபட்டு அலைபவர்களாய் இல்லாமல், தெய்வ பக்தியை கடமையாய் செய்து, அதன் மூலம் ஒரு சந்துஷ்டியோடு விளங்குவதைப் பார்த்து, இதுவே இவ்வளவு ஆனந்தமாக இருக்குமானால், இதன் முடிந்த முடிவான நிலை எப்படி இருக்கும் என்று தேடும் போது, எனக்கு கிடைத்த பதில் நம் ஸ்வாமிகள். உன்னத பக்தியால், பகவானுடைய சரித்ரம், ரூபம், நாமம் இவற்றின் மூலமே ‘இதோ தெய்வம்’ என்று நினைக்கும் அளவுக்கு தெய்வ பாசத்தில் மூழ்கி இருந்த அவர் தர்சனத்தால் தான் எனக்கும் கூட தெய்வ நம்பிக்கை ஏற்பட்டது.

என்னைப் பொறுத்த வரை கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் நாம் கடைத்தேற அவதாரித்த மகான். சுகர் வ்யாசரைப் போல விஷ்ணு பகவானின் அம்சம். ராமாயண பாகவதம் படிச்சுண்டு இருந்ததால் அப்படி சொல்றேன். அரசடி கற்பக விநாயகர், அண்ணாமலையார், காமாக்ஷித் தாயார், திருத்தணி முருகன், பார்த்தஸாரதி, ப்ரத்யக்ஷ தெய்வமான ஸூர்ய பகவான் எல்லாம் அவர் தான். ‘सर्व दॆव नमस्कार: कॆशवम् प्रति गच्छति’ என்பது போல, இதில் எந்த தெய்வத்தைப் ப்ரீதி செய்தாலும் அவர் ஸந்தோஷப் படுவதைப் பார்த்திருக்கிறோம்.

அவரை தரிசித்தவர்கள் பாக்யசாலிகள். அவருடைய கதையை பேசினால் ராமகதையினால் எப்படியோ அப்படி பாபம் போகும். புண்யம் வரும். இந்த கலியில் இவ்வளவு தான் impact, வெளியில தெரியற மாதிரி காமிக்கலாம் என்பதால் அவர் அப்படி இருந்துட்டு போயிட்டார். ஆனா அதைப் புரிஞ்சுண்டு, நாம் கிடைச்ச வாய்ப்பை நழுவ விடாமல், இங்கிருக்கும் போது அவரை அநுபவித்து விட்டு, முடிவில் அவர்கிட்ட போயிடணம் என்பது என் ப்ரார்த்தனை.

ஒரு மஹானின் ஸங்கம் எவரையும் தூய்மைபடுத்தும். தன்னலமற்ற உத்தமர்களான ஸாதுக்கள், அவரை வணங்கி, அவர் சொல்படி நடந்து, தூய்மையில் உயர்ந்து ஸித்தி அடைவார்கள். விவேகிகள், மஹானுடைய மேன்மையை உணர்ந்து அவரிடம் பக்தி செய்து, தன்னலத்தை விட்டு ஸாதுக்களாவார்கள். பாமரர்களும் பாபிகளும் கூட, ஒரு மஹானிடம் பழகும் போது, தம் பாபச் செயல்களை விடமுடியவில்லையானாலும், அவரிடமும், அவர் செய்த ஸதுபதேசத்திலும் உதாசீனமாக இருந்தாலும் கூட, அவருடைய தர்சனத்தால், அவரை வணங்கியதால், சில தீய வினைகள் விலகி, நன்மைகளை அடைவார்கள். அப்படி அவரோடு பழகும் போதும், இப்போதும் பக்தியோ, படிப்போ, ஆசாரமோ, பணிவோ, ஸத்யமோ  எதுவுமே இல்லாத போதும், அவரைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தால் பகவான் வழிகாட்டுவார், என்று நம்பிக் கொண்டு, ஸ்வாமிகளின் கருணையின் மேல் நம்பிக்கையோடு, வெறும் ஆசையினால் அவரைப் பேசுகிறேன். ஏனென்றால்,

तदेव सत्यं तदु हैव मङ्गळं तदेव पुण्यं भगवद्गुणोदयम् ।

तदेव रम्यं रुचिरं नवं नवं तदेव शश्वन्मनसो महोत्सवम् ॥

तदेव शोकार्णव शोषणं नृणां यदुत्तमश्लॊक यशोऽनुगीयते ।

  1. முயற்சித் திருவினையாக்கும்; குரு அனுக்ரஹம் இருந்தால் தெய்வ பலம் கூடி அரிய கார்யங்கள் எளிதில் கைகூடும்.

விச்வாமித்ரர் ஒரு யாகத்தை ராக்ஷஸர்கள் ஹிம்ஸையால் முடிக்க முடியவில்லை. தசரதர் கிட்ட யாகத்தை ரக்ஷிக்க ராமனைத் தரும்படி கேட்டு, கோச்சுக்கற மாதிரி நடிச்சு, ராமரைப் பெற்றுக் கொண்டு, அவருக்கு பலை அதிபலை மந்த்ரங்களை சொல்லி வெச்சு, ராமர் தாடகை வதம் செய்த பின், அவருக்கு அஸ்த்ர வித்யைகளை சொல்லிக் குடுத்து, தன் யாகத்தை முடித்து சித்தி அடைகிறார்.

ஸித்தாஸ்ரமத்திலிருந்து கிளம்பி மிதிலை செல்லும் வழியில் கங்கைக் கரையில் விச்வாமித்ரர் குழந்தைகளுக்கு குமார ஸம்பவம், பகீரதன் தபஸ், க்ஷீராப்தி மதனம் முதலிய கதைகளை சொல்கிறார்.

பகீரதன் வெகு முயற்சி பண்ணி, கங்கா தேவியை பூமிக்கும் பாதாளலோகத்துக்கும் கொண்டு போய் தன் முன்னோர்களான ஸகர புத்திரர்களை கரை சேர்க்கிறான். பகீரதன் தபஸில் மகிழ்ந்த பரமேச்வரன், கங்கையின் வேகத்தை தன் தலையில் தாங்கி பூமியில் விடுகிறார். அவன் முயற்சியால் நமக்கு புனித கங்கை நதி கிடைத்தது.

தேவர்கள் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெறுகிறார்கள். பரமேச்வரன் ஹாலாஹல விஷத்தை சாப்பிட்டு மூவுலகையும் காக்கிறார். விஷ்ணு பகவான் கூர்ம அவதாரம், மோஹினி அவதாரம் எடுத்து தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்கும்படியாகச் செய்கிறார்.

———————————————-

ஸ்வாமிகள் இந்த மூன்றாவது அத்யாயத்தில் சொல்லப் போகும் (தூய்மையில் உயர இடையறாது பகவானை பஜித்தல்) என்ற கார்யத்தில் life long ஈடுபட்டு இருந்தார். ஆனா விச்வாமித்ரர் ப்ரஹ்மரிஷி ஆன பின்பும் ஒரு particular யாகம் பண்ணி சித்தி அடைய வேண்டும் என்று வ்யாஜம் ஏற்படுத்திக் கொண்டு, அதற்கு ஹேதுவாக ராமரைப் கேட்டு வாங்கிண்டு, அவருக்கு அஸ்த்ர வித்தைகளை சொல்லிக் குடுத்து, பின் யாகரக்ஷணத்துக்கு ப்ரதியாக ஸீதாதேவியை ராமபிரானோடு சேர்த்து வெச்சுட்டு, அப்பறம் பகவானிடம் கலந்து விடுகிறார்.

அது போல, ஸ்வாமிகள், தன் வாழ்நாள் முழுவதும் பகவானை வழிபட்டு வந்தார். அதற்கு ஆதரவு காட்டி, அண்டி வணங்கின பேருக்கு, எத்தனை முறை, நம் உலகியல் முயற்சிகளுக்கு தெய்வ பலத்தை சேர்த்து வெச்சுருக்கார்! – எனக்கு வேலை கிடைக்கிறத்துக்கு, நான் PMP பாஸ் பண்றத்துக்கு, கல்யாணம் ஆகிறத்துக்கு, குழந்தை பிறக்கறத்துக்கு, அவாளை ஸ்கூல் சேக்கறதுக்கு. I am sure many of you can list such events where Swamigal’s grace made the difference. Please list them down and talk about it to your children, dear and near ones. We owe it to ourselves.

அவர் இருக்கும் போதே ‘குருவை நேராகவே ஸ்தோத்ரம் பண்ணலாம்’ என்ற சாஸ்த்ரப்படி நாம் அவரை கொண்டாடி இருக்க வேண்டும். அப்ப நமக்கு பண்ணத் தெரியவில்லை. ஆனால் இப்ப பண்ணுவோம். அது நம் கடமை. அவர் ஞானி ஆனதால், பாப புண்யங்கள் அவருக்கு ஒட்டாது. அவரை ஸ்தோத்ரம் பண்ணினால், அவருடைய அபார புண்யத்திலிருந்து கொஞ்சம் நமக்குக் கிடைக்கும். அது நமக்கு எல்லாமே குடுக்கும். ஆனா இதுல ஒரு விஷயம் ஜாக்ரதையா இருக்கணம். வீடு கட்டினா, ஒரு மணி நேரம் வீட்டுப் பெருமையை பேசிட்டு, tour எல்லாம் முடிச்சுட்டு, ஒரு வார்த்தை ‘எல்லாம் ஸ்வாமிகள் அருள்’ னு சொன்னா போறாது. அவர் மஹிமையை பேசும் போது அவர் மஹிமையை நிறைய பேசணம். அது கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ஸ்தோத்ரமா இருக்கணம். நம்ம ஸ்தோத்ரமா ஆகிவிடக் கூடாது.

ஸ்வாமிகளுடைய அதிஷ்டானம் உருவாகி, பூஜைகள், ஆராதனைகள் நடக்கும் விதத்தை நினைத்துப் பார்த்தால் – மனித முயற்சிக்கு மேல் தெய்வ பலம் என்பது கண்கூடாகப் புரியுமே! காவேரிக் கரையில் தாமே தம் அதிஷடானத்துக்கு இடம் குறித்ததும், யாரையும் கேட்காமல் பணம் வந்து சேர்ந்ததும், ஸ்வாமிகளை பார்த்தே இராத ஒரு ஸ்தபதி கனவில் கண்டபடி ஷட்கோண மண்டபம் அமைத்து யோகிகளின் சித்திரங்கள் வரைந்து குடுத்ததும், பழூர் ஜனங்கள் பக்தியோடு அவரை பூஜிப்பதும், வரும் பக்தர்களை அவர்கள் அன்போடு உபசரிப்பதும், அந்த மஹானின் மஹிமையை இன்றும் உலகிற்கு பறைச்சாற்றுகிறதே!

  1. மனிதப் பிறப்பின் பயன் தூய்மையில் உயர்வது தான், அதற்கு நாம் செய்யக் கூடிய புருஷப் ப்ரயத்னம் பகவத் பஜனம் மட்டுமே.

அஹல்யையும் இந்த்ரனும் அழகும் பதவியும் இருக்கும் மோஹத்தில் தப்பு பண்ணி கௌதமர் கோபத்துக்கு ஆளகிறார்கள். ராமர் திருவடி பட்டு அஹல்யை சாப விமோசனம் பெறுகிறாள்.

விச்வாமித்ரர் கடும் தவம் செய்து, காமக் க்ரோதங்களை ஜெயித்து, படிப்படியாக தூய்மையில் உயர்ந்து ப்ரஹ்மரிஷி ஆகிறார்.

ஸீதா தேவி ராமபிரானை கணவனாக, குருவாக அடைந்து அந்த ஸம்ஸ்காரத்தால் தூய்மை அடைகிறாள். (ப்ரஹ்மசாரிக்கு உபநயனம் போல கன்னிகைக்கு விவாஹம்).

பரசுராமர் தன் ஆவேசத்தை ராமரிடம் சமர்ப்பித்து மீண்டும் சாந்தமான ரிஷி ஆகிறார். (விஷ்ணுவின் ஆவேசம் அவருக்குள் புகுந்ததால் அதை ஒரு ஆவேச அவதாரம் என்பார்கள்)

———————————————-

“जीवस्य तत्व जिज्ञासा” – “உண்மைப் பொருளை உணர்வது தான் வாழ்வின் பயன்” என்று இந்த உபநிஷத் வாக்யத்தை நிறைய தடவை ஸ்வாமிகள் சொல்லி இருக்கார். சிவன் ஸார் அதையே ’மனிதப் பிறவி தூய்மையில் உயர்வதற்காக அருளப்படுகிறதே அன்றி பணத்தில் உயர்வதற்கு அல்ல’ என்று சொல்வார்.

அதற்கு இக்கலியில் பகவத் பக்தியே போதும், யோக யாகமெல்லாம் வேண்டாம், முடிந்த முடிவான ஞானம் அடையலாம் என்பதை ஸ்வாமிகள் நிரூபித்துக் காட்டினார். “கமலாம்பாம் பஜரே, கல்பித மாயா கார்யம் த்யஜரே” என்று தீக்ஷிதர் பாடியது போல, வாழ்க்கையின் கேந்திர பாடமான “பகவானை வழிபடுவதைத் தவிர மற்ற அனைத்தும் பயனற்றவை” என்பதை ஸ்வாமிகள் தம் வாழ்வின் மூலம் நமக்கு உணர்த்தினார். அவர் வேலையை விட்டுட்டு ராமாயண பாகவதமே படிச்சுண்டு இருக்கலாம் என்று தீர்மானம் பண்ணின போது அவருக்கு நிலபுலம், சொத்து ஒண்ணும் கிடையாது. சுத்தி இருக்கறவாளும் வசதி படைத்தவா கிடையாது. ராமர் காப்பாத்துவார், இது தான் கர்தவ்யம் (பண்ண வேண்டிய கார்யம்) னு எவ்வளவு strong நம்பிக்கை இருந்தா அந்த முடிவு எடுத்திருக்க முடியும்! அந்த முடிவிலிருந்து திரும்ப உலகியலுக்கு போகவே இல்லையே!

ஆனால் கருணையினால் தம்மிடம் உலகியல் ப்ரார்த்தனைகளோடு வந்தவர்களின் முயற்சிகளுக்கு, தெய்வ பலத்தைக் கூட்டி வைத்தார். அதோடு “பக்தி விரக்தி ஞான த்வார முக்தி அளிக்கும் ராம க்ருஷ்ண கோவிந்த என்ற நாமப் ப்ரயாகையில் ஆனந்தமாய் ஸ்னானம் செய்யுங்கள்” என்று தம்மை வணங்கின எவருக்கும், பணத்தால் பாராபட்சம் பார்க்காமல், தான் கடும் தவம் செய்து, ஸ்வாநுபவத்தால் உணர்ந்த அந்த உண்மையையும் கூடவே உபதேசித்தார்.

விச்வநாத ஐயர் கடைசி காலத்தில் ச்ரமப் பட்டு படியேறி வருவார். ஸ்வாமிகள் ‘நீங்க தான் நிறைய தடவை ராமாயணம் கேட்டுருக்கேளே. நீங்களே படிச்சுண்டு இருந்தாலே போறுமே? ஏன் ச்ரமப்படறேள்?’ என்று கேப்பார். விச்வநாத ஐயர் சொல்வார் – ‘நான் வரது ஒங்களோட zeal, faith இதெல்லம் பார்க்கத் தான். பாடம் கேக்க மட்டும் இல்லை’ என்பார்.  The zeal and faith Swamigal had in the very process of repeatedly reading the holy scriptures, to purify himself and reach God,  was something amazing and beautiful to watch. It was one of a kind phenomenon. – न भूतॊ न भविश्यति

ஒரு முறை ஸ்வாமிகள் மூகபஞ்சசதீ படிச்சுண்டு இருந்தார். ‘காமாக்ஷியின் கடாக்ஷம், மாணிக்க குண்டலங்களின் ஔ என்ற காஷாயம் அணிந்து, காதுவரை நீண்டு (ச்ருதியின் முடிவான உபநிஷத்துக்களை படித்துக்கொண்டு என்று ஒரு அர்த்தம்), அஹங்கார மமகாரம் உள்ளவர்களை நெருங்க விடாமலும், ஒரு யதீச்வரரைப் போல விளங்குகிறது’ என்ற ஸ்லோகம் படித்து முடித்தபோது நாராயணய்யர், சிவன் ஸாரை தரிசித்து விட்டு அங்கு வந்தார். சிவன் ஸார் ‘ஸ்வாமிகளை சாதாரண ஸந்நியாஸி என்று நினைச்சு விட வேண்டாம். அவர் ஒரு யதீந்த்ரர். அவருக்கு என் நமஸ்காரத்தைச் சொல்லுங்கோ’ என்று சொன்னதாகச் தெரிவித்துக் கொண்டார். ஸ்வாமிகள் தன் வாழ்வின் பயனை அடைந்தார் என்பதற்கு இதற்கு மேல் என்ன proof வேண்டும்!

Series Navigation<< ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – முன்னுரைஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – அயோத்யா காண்டம் >>

One reply on “ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – பால காண்டம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.