Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 7, 8 ஸ்லோகங்கள் பொருளுரை


சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் 7, 8 தமிழில் பொருள் (15 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 7 and 8)

சிவானந்த லஹரியில ஆறு ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். இன்னிக்கு 7 ஆவது 8 வது ஸ்லோகங்களுடைய அர்த்தத்தை பார்ப்போம். 5ஆவது ஸ்லோகத்துல ‘ஏதோ ஒண்ணு இரண்டு வித்தைகளை கத்துண்டு, அதை வெச்சு ஒரு ராஜாவை திருப்தி பண்ணி பிழைப்பு நடத்தலாம்னு நினைக்கிறேயே? நீ பகவானுடைய பஜனம் பண்ணினா, அவர் பசுபதி. அவருடைய கருணையினால நீ ரொம்ப க்ஷேமமா இருப்பே’ ன்னு சொன்னார். அடுத்தது இந்த புத்தியைக் கொண்டு தர்க்கம் பண்ணாதே

வ்ருʼதா² கண்ட²க்ஷோப⁴ம் வஹஸி தரஸா தர்கவசஸா

பதா³ம்போ⁴ஜம் சம்போ⁴ர்ப⁴ஜ பரமஸௌக்²யம் வ்ரஜ

ஸுதீ:⁴ – புத்தி இருக்கு உனக்கு. அதைக் கொண்டு தர்க்காம் பண்ணிண்டு இருக்காம பரமேஸ்வரனுடைய பாத தாமரைகளை வழிபடு. உனக்கு பரம சௌக்யம் ஏற்படும்னு சொன்னார். இந்த மாதிரி பண்றதுக்கு, மனசை பகவானிடத்தில் வெச்சு சிவபக்தி பண்றது, பஜனம் பண்றதுன்னா எப்படி பண்ணனும்கிறதை இந்த 7 ஆவது ஸ்லோகதுல விளக்கி சொல்றார். நம்முடைய மனஸ், புத்தி, கை, கால் எல்லா அவயங்களையும் பகவானுடைய காரியத்துலயே செலுத்த வேண்டும்னு சொல்றார்

मनस्ते पादाब्जे निवसतु वचः स्तोत्रफणितौ
करौ चाभ्यर्चायां श्रुतिरपि कथाकर्णनविधौ ।
तव ध्याने बुद्धिर्नयनयुगलं मूर्तिविभवे
परग्रन्थान् कैर्वा परमशिव जाने परमतः ॥ ७ ॥

மனஸ்தே பாதா³ப்³ஜே நிவஸது வச: ஸ்தோத்ரப²ணிதௌ
கரௌ சாப்⁴யர்சாயாம் ச்ருதிரபி கதா²கர்ணனவிதௌ⁴ ।
தவ த்⁴யானே பு³த்³தி⁴ர்நயனயுக³லம் மூர்திவிப⁴வே
பரக்³ரந்தா²ன் கைர்வா பரமசிவ ஜானே பரமத: ॥ 7 ॥

என்னுடைய மனம் உன்னுடைய பாதத் தாமரைகளிலேயே வசிக்கட்டும். வச: – என்னுடைய வாக்கு ஸ்தோத்ர பணித: – உன்னுடைய ஸ்தோத்ரம் பண்றது என்று உன்னுடைய பேச்சையே பேசட்டும் கரௌ சாப்⁴யர்சாயாம் – என்னுடைய கைகள் உன்னுடைய பூஜையையே செய்யட்டும் ச்ருதிரபி கதா²கர்ணனவிதௌ⁴ – என்னுடைய காதுகள் உன்னுடைய கதைகளையே கேட்கட்டும் தவ த்⁴யானே பு³த்³தி⁴: – என்னுடைய புத்தி உன்னுடைய த்யானத்திலேயே இருக்காட்டும் நயனயுக³லம் மூர்திவிப⁴வே – என்னுடைய கண்கள் உன்னுடைய மூர்த்தியினுடைய அழகை பருகட்டும். நடராஜா மூர்த்தியை பார்த்துண்டு இருந்தா கண்கள் கிடைச்ச பயன் அதுதானே. இப்படி இருந்துட்டா பரக்³ரந்தா²ன் கைர்வா – அப்புறம் வேற கிரந்தங்களை, வேற புஸ்தகங்களை நான் ஏன் படிக்கணும்? பரமசிவ ஜானே பரமத: – வேற மதங்கள், வழிகள் இருக்குன்னு எனக்கு தெரியக் கூட வேண்டாமேன்னு சொல்றார்.

திருவாசகத்துல திருவெம்பாவையில “எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க” ன்னு பாடினார் மாணிக்கவாசகர். “இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல். எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்” அந்த மாதிரி இருந்தா சூரியன் கிழக்குல உதிச்சா என்ன? மேற்குல உதிச்சா என்ன? என் கைகள் உன்னுடைய காரியத்தையே பண்ணட்டும். என்னுடைய கண்கள் வேற எதையுமே பார்க்க வேண்டாம். உன்னுடைய மூர்த்தியையே பார்த்துண்டு இருந்தால் எனக்கு வேற ஒண்ணுமே வேண்டாம். இந்த ஒரு பாக்யத்தை எனக்கு கொடுன்னு கேட்டார்.

அந்த மாதிரி இங்க ஆச்சார்யாள் கேட்கறார். என்னுடைய எல்லா புலன்களும் மனசும் புத்தியும் உன்னுடைய காரியத்திலேயே இருக்கட்டும் என்கிறார். இந்த பஞ்ச புலன்களையோ, மனசயோ அடக்கறதுங்கிறது முடியாத காரியம். புத்தி இருக்கு. புத்தியை கொண்டு பல விஷயங்களை தெரிஞ்சுக்கறோம். மனசுக்கு பலவிதமான பூர்வ வாசனைகள் இருக்கு. அதனால இந்த புலன்களை செலுத்தி உலகத்துல இன்பத்தை அனுபவிக்கணும் எங்கிறதுதான் அதனுடைய பழக்கமா இருக்கு. அந்த பழக்கத்துல இருந்து அதை மாத்தறதுங்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு. அதனால மஹான்கள் என்ன சொல்றா? நீ அதுக்கு முயற்சி பண்ணாதே. நீ மனசை அடக்க முடியாது.

வேடிக்கையா ஒரு கதை கூட சொல்வா. ஒரு குரங்கு நான் தியானம் பண்ணப் போறேன்னு Meditation class க்குப் போயிட்டு வந்து தியானம் பண்ண உட்கார்ந்துதாம். தியானம் பண்ணி முடிச்சா பசிக்கும்னு சொல்வாளேன்னு சொல்லி கொஞ்சம் வாழைப்பழம் எடுத்துண்டு பக்கத்துல வெச்சுண்டுதாம். நான் தியானம் பண்ணி முடிச்ச உடனே ரொம்ப tired ஆ போயிட்டா என்ன பண்றதுன்னு வாழை பழத்தை கையில வெச்சுண்டுதாம். அப்புறம் எனக்கு மயக்கம் வந்தா என்ன பண்றது ன்னு வாய் கிட்ட வெச்சுண்டுதாம். வாழைப்பழத்தை சாப்பிட்டுதாம். இது நன்னாயிருக்கு. நமக்கு என்னதுக்கு தியானம்னு பழங்கள் எல்லாம் சாப்பிட்டு முடிச்சுதுன்னு ஒரு கதை. அப்படி இருக்கு நம்ம கதி. ஒரு phone ஐ பக்கத்துல வெச்சுண்டு தியானம் பண்ணும் போது phone ஐ கையில எடுத்துட்டா முடிஞ்சு போச்சு. அதனால ஒரு ஸ்தோத்திரம் படிக்கணும். ஒரு 10 ஆவர்த்தி சஹஸ்ரநாமம் பண்ணனும். சிவானந்த லஹரி முழுக்க பிரதோஷ காலத்துல பாராயணம் பண்ணனும்னு இப்படி நியமமா வெச்சுண்டு, முடிச்சாதான் அடுத்த காரியம் அப்படீன்னா அந்த அரை மணி தானா தன்னுடைய வாக்கினாலும், மனசினாலும், புத்தியினாலும் அந்த பகவானோட காரியத்தை பண்ணனும்னு ஒரு கட்டுப்பாடு கொண்டு வந்தா, அது நடக்கும். அதுல இருந்து தான் அந்த ருசி ஏற்படறது.

மூக பஞ்சசதியை ஸ்வாமிகள் எனக்கு படிப்பார். மூக பஞ்சஸதியில ஸ்துதி சதகத்துல 21 ஆவது ஸ்லோகம்

सरसवचसां वीची नीचीभवन्मधुमाधुरी

भरितभुवना कीर्तिर्मूर्तिर्मनोभवजित्वरी ।

जननि मनसो योग्यं भोग्यं नृणां तव जायते

कथमिव विना काञ्चीभूषे कटाक्षतरङ्गितम् ॥ २१॥

ஸரஸவசஸாம் வீசீ நீசீப⁴வன்மது⁴மாது⁴ரீ

ப⁴ரிதபு⁴வனா கீர்திர்மூர்திர்மனோப⁴வஜித்வரீ ।

ஜனனி மனஸோ யோக்³யம் போ⁴க்³யம் ந்ருʼணாம் தவ ஜாயதே

கத²மிவ வினா காஞ்சீபூ⁴ஷே கடாக்ஷதரங்கி³தம் ॥ 21॥

ன்னு ஒரு ஸ்லோகம். இதுல “அம்மா காமாக்ஷி, உன்னுடைய கடாக்ஷம் ஒருத்தனுக்கு கிடைச்சுதுன்னா அவனுக்கு இந்த உலகத்துல, அவன் மனசுல ஆசைப் படற எல்லா விதமான யோக்யமான போகங்கள் எல்லாம் கிடைக்கும். நல்ல வாக்கு வரும். தேனை பழிக்கக் கூடிய இனிமையான வாக்கு வரும். மன்மதனை பழிக்கக் கூடிய அவ்ளோ அழகான சரீரம் ஏற்படும்” ன்னு சொல்றார். நாங்க ரெண்டு பேரும் ஒரே புஸ்தகத்தை வெச்சுண்டு படிச்சிண்டு இருந்தோம். ஸ்வாமிகள் இந்த ஸ்லோகத்தை படிச்சிட்டு, அடுத்த பக்கம் திருப்பிட்டார். திருப்பிட்டு என்கிட்ட பேசிண்டு இருந்தார். வேற ஒரு அனுபவத்தை பகிர்ந்துண்டார். அவர் பேசும் போது நான் pageஐ திருப்பல. அவர் திருப்பிட்டார். அவர் அடுத்தது

“ப்⁴ரமரிதஸரித்கூலோ நீலோத்பலப்ரப⁴யாऽऽப⁴யா” ன்னு ஆரம்பிச்சார். நான் அந்த page ஐ திருப்பாததுனால இந்த “ஸரஸ வசஸாம்” படிக்கணுமேன்னு கேட்டேன். அவர் என்ன பண்ணார் page ஐ பின்னாடி திருப்பி

ஸரஸவசஸாம் வீசீ நீசீப⁴வன்மது⁴மாது⁴ரீ

ப⁴ரிதபு⁴வனா கீர்திர்மூர்திர்மனோப⁴வஜித்வரீ ।

ஜனனி மனஸோ யோக்³யம் போ⁴க்³யம் ந்ருʼணாம் தவ ஜாயதே

கத²மிவ வினா காஞ்சீபூ⁴ஷே கடாக்ஷதரங்கி³தம் ॥ 21॥

ன்னு படிச்சார். இரண்டாவது தடவை அவர் படிச்சபோது காதுல விழுந்ததுனால காதுக்கு memory இருக்கு. அதுனால “இதை நீங்க படிச்சுட்டேள்”னு சொன்னேன். “ஆமாம். நான் படிச்சிட்டேன்னு தெரியும். நீ கேட்டியேன்னு சொல்லி இன்னொரு வாட்டி படிச்சேன். எனக்கு diabetes இருக்கு. எனக்கு பாதம் ஹல்வா, திரட்டிப்பால் எல்லாம் சாப்பிட முடியாது. இந்த ஸ்தோத்திரத்தை படிக்கறது தான் எனக்கு திரட்டுப்பால்” ன்னார். அப்படி இந்த ஸ்தோத்திரத்தை படிக்கறதே அவருக்கு பாதாம் ஹல்வாவா இருந்தது. அப்படி அந்த பகவானோட பஜனத்துலயே ருசி கண்டவா மஹான்கள். அவாளுக்கு இது மூலமா பகவான் பணத்தை கொடுத்து, இல்ல புகழைக் கொடுத்து அது மூலமா சந்தோஷம்ன்னு இல்லாம இந்த பகவத் பக்தி, அதுல especially இந்த ஸ்தோத்திர பாராயணத்துல ருசி ஏற்படறது ஒரு மனப் பழக்கம். அதை அவர் கிட்ட பார்த்தேன். அது வரணும்னு நான் வேண்டிக்கறேன். அவ்ளோ விரும்பி ஸ்வாமிகள் enthusiastic ஆ அந்த பாராயணங்களையும் பிரவச்சனங்களையும் பண்ணுவார். அது தான் பக்திக்கு வித்து. அவர் அதை பண்ணிப் பண்ணி பக்தியில பழுத்தப் பழமா இருந்தார். அதை பார்த்து பார்த்து நான் ரொம்ப ரசிச்சிண்டு இருந்தேன்.

அப்படி பகவானோட ஸ்தோத்திரம் பண்ணா என்னனா, எப்பவுமே நமக்கு பிரியமான ஒரு மனுஷாளோ, பிரியமான ஒரு விஷயமோ இருந்தா அதுல எல்லா detailsம் நாம தெரிஞ்சுக்கறோம். ஒரு புதுஸா friend கிடைச்சா அவாளை பிடிச்சிருந்துன்னா, அவாளைப் பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கறோம். நிச்ச்சயதார்ததுக்கும் கல்யாணத்துக்கும் நடுவுல எவ்வளோ பேசறா! ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்க பாக்காறா! சின்ன குழந்தைகள் எல்லாம் சினிமாவுலயும், cricketலேயும் எவ்ளோ details தெரிஞ்சுக்கறா. அந்த மாதிரி பகவானை பத்தி நாம தெரிஞ்சுக்கணும்னா அவருடைய ஸ்தோத்திரங்களை படிச்சாதான் அவரோட வைபவங்கள் தெரியும். அவரோட மஹிமை புரியும். அப்பதான் மனசுல அவர் வருவார். அதனாலதான் விடாம ஸ்தோத்திரம் படியுங்கோ. constancy முக்கியம் பஜனத்துலன்னு ஸ்வாமிகள் சொல்வார். தினமும் ஒரே இடத்துல உட்கார்ந்துண்டு ஒரே ஸ்தோத்திரத்தை படிக்கணும். நிறைய ஆவர்த்தி படிங்கோ. உரு ஏற திரு ஏறும்னு சொல்லிக் கொடுப்பார். எல்லா மகான்களும் இதை சொல்லி இருக்கா. தலையே நீ வணங்காய் , தலைமாலை தலைக்கணிந்து ன்னுஆரம்பிச்சு திருநாவுகரசர் தேவாரத்துல பாடியிருக்கார். அந்த மாதிரி பகவானுடைய பஜனம் பண்றது இந்த மனசை புத்தியை வேற வித்தைகள்லேயிருந்தும், தர்க்கத்துலேயிருந்தும் எடுத்து பகவான்கிட்ட வைக்கறதுக்கு முதல்படி.

அடுத்த ஸ்லோகத்துல

यथा बुद्धिः शुक्तौ रजतमिति काचाश्मनि मणि-
र्जले पैष्टे क्षीरं भवति मृगतृष्णासु सलिलम् ।
तथा देवभ्रान्त्या भजति भवदन्यं जडजनो
महादेवेशं त्वां मनसि च न मत्वा पशुपते ॥ ८ ॥

யதா² பு³த்³தி:⁴ சுக்தௌ ரஜதமிதி காசாஸ்மனி மணி:
ஜலே பைஷ்டே க்ஷீரம் ப⁴வதி ம்ருʼக³த்ருʼஷ்ணாஸு ஸலிலம் ।
ததா² தே³வப்⁴ராந்த்யா ப⁴ஜதி ப⁴வத³ன்யம் ஜட³ஜனோ
மஹாதே³வேசம் த்வாம் மனஸி ச ந மத்வா பசுபதே ॥ 8 ॥

ன்னு சொல்றார். இந்த ஸ்லோகத்துக்கு என்ன அர்த்தம்னா எப்படி புத்தியானது சுக்தௌ – சிப்பி மேல வெயில்பட்டுதுன்னா வெள்ளி மாதிரி டால் அடிக்கும். ஓ! இது வெள்ளியான்னு கையில பொறுக்குவா. அடச்சே இது சிப்பின்னு சொல்வா. அது மாதிரி ரஜதமிதி காசாஸ்மனி மணி:
– இன்னொரு கல்லு இருக்கு. அந்த ரத்னம் மாதிரி இருக்கும். அதை பார்த்த உடனே ஆஹா ரத்னம்னு நினைப்பா. அது வந்து வெறும் கல்லுதான். கடையில போயி கேட்டா இதுக்கு ஒண்ணும் value இல்லேம்பான் ஜலே பைஷ்டே க்ஷீரம் ப⁴வதி – மாவுல ஜலத்தை கலந்து வச்சிருந்தா பால் மாதிரி இருக்கும். இது பாலான்னு நினைப்பா.அது மாதிரி ம்ருʼக³த்ருʼஷ்ணாஸு ஸலிலம் – ம்ருக த்ருஷ்ணாங்கிற வார்த்தைக்கு கானல் நீர்னு பாலை வனத்துல தண்ணி இருக்கிற மாதிரி தெரியும். கிட்ட போனா தண்ணி இருக்காது. ஒரு காட்சிதான் அது. அப்படி புத்தி வந்து தடுமாறர்து. அந்த மாதிரி ஜடஜன: – மூட ஜனங்கள் என்ன பண்றான்னா மஹாதே³வேசம் த்வாம் மனஸி ச ந மத்வா பசுபதே – எல்லாத்துக்கும் மேலான தெய்வம். ஹே பரமேஸ்வரா. நீ இருக்கே. தே³வப்⁴ராந்த்யா ப⁴ஜதி ப⁴வத³ன்யம் – உன்னை நினைக்காம வேற ஏதேதோ தெய்வங்களை பஜிக்கறா. வாரா வாரம் magazine வாங்கறா. அதுல குபேரயந்த்ரம் ன்னா அதை பூஜையில வைக்கறா. சனிப் ப்ரீத்தி மந்த்ரம் நா அதை சொல்றா. “பரமேஸ்வரான்னு சொல்லி உன்னிடத்தில் மனஸை வைக்கத் தெரியலயேன்னு சொல்றார். ஒரு இடத்துல மனசை வைக்கணும். அது மாதிரி குருன்னாலும் ஒரு குரு. அந்த குரு காண்பிச்ச வழி. அவர் சொன்ன தெய்வம்னு மனசை ஒருமைப் படுத்தறது தான் பக்தியில அடுத்த step. பஜனம் பண்ணனும்.விடாமல் ஸ்தோத்திர பாராயணம் பண்ணனும். பகவானோட கதைகளை கேட்கணும். பகவானை தரிசனம் பன்னனும்கிறது first step. அடுத்த step ‘அந்நிய தெய்வத்தை நினைக்காம ஏகபக்தி பண்ணனும்.

वेधा: कथं हरि: कथं इति प्रश्ने वयं मूका: |

शिवमेकं जानीम: तस्मादन्यं न जानीम: ||

வேதா: கதம் ஹரி: கதம் இதி பிரச்னே வயம் மூகா: |

சிவமேகம் ஜானீம: தஸ்மாதன்யம் ந ஜானீம: ||

ன்னு நீலகண்ட தீக்ஷிதர் சொன்னார். வேதா:ன்னா பிரம்மா. ஹிரி:ன்னா விஷ்ணு. அவா எப்படின்னு கேட்டா ‘இதி பிரச்னே வயம் மூகா:’ – நாங்க ஊமைகள் ஆயிடுவோம். ஒண்ணும் பேசமாட்டோம். எங்களுக்கு அந்த discussion வேண்டாம்ங்கிறார். ‘சிவமேகம் ஜானீம: தஸ்மாதன்யம் ந ஜானீம:’ – எங்களுக்கு பரமேஸ்வரன் ஒருத்தரைத் தான் தெரியும். அந்த மாதிரி மஹா பெரியவாளைப் பத்தி கேட்கும்போது எங்களுக்கு அவரைத் தெரியும். பெரியவாளைப் பத்தி பேசறோம்னு சொல்லணும். இன்னொருத்தரைப் பத்தி அவா எப்படி?இவா எப்படி?ன்னா மௌனம். எனக்கு தெரியாது. எனக்கு பெரியவாளைதான் தெரியும். அவர் காண்பிச்ச வழி தான் எனக்கு எங்கறது தான் பக்தின்னு இந்த ஸ்லோகதுல ஏக பக்தியை சொல்றார் ஆசார்யாள். சிவ பெருமானைக் காட்டிலும் மேலான தெய்வம் இல்லை. நமக்கு கிடைச்ச நம்முடைய குரு காண்பிச்ச அந்த தெய்வத்தினிடத்தில் பக்தி பண்ணினா சுலபமா நம்ம மனசை அதுல லயிச்சு அது மூலமா அனுக்ரஹம் கிடைக்கும்னு சொல்றார்.

இந்த 2 ச்லோகத்தையும் இன்னிக்கு பார்த்தோம். நாளைக்கு “கபீரே காஸாரே” ன்னு “பல இடங்கள்ல புஷ்பங்களை தேடாதே. உன் கிட்டேயே ஒரு புஷ்பம் இருக்கு அதை பகவானுக்கு சமர்ப்பணம் பண்ணு. அது என்னன்னா உன்னோட மனத் தாமரைதான்னு ஒரு ஸ்லோகம். ரமணர்க்கு ரொம்ப பிடிச்ச ஸ்லோகம். அதை நாளைக்குப் பார்ப்போம்.

நம:பார்வதீ பதயே…ஹர ஹர மஹாதேவ

Series Navigation<< சிவானந்தலஹரி 5, 6 ஸ்லோகங்கள் பொருளுரைசிவானந்தலஹரி 9, 10 ஸ்லோகங்கள் பொருளுரை >>

2 replies on “சிவானந்தலஹரி 7, 8 ஸ்லோகங்கள் பொருளுரை”

பரமேஸ்வரனை பஜனம் செய்வதொன்றே பரம உத்தமமானது, என்று ஸ்ரீ பகவத் பாதர் அருளியிருக்கிறார். அதில் பஞ்சேந்திரியங்களும் பரமனுக்கே பணி செய்ய சொல்லி ஒரு பிரார்த்தனை.
குரங்கு meditation உதாரணம், இன்றைய சூழலில் mobile phone distraction சரியான, நகைச்சுவையான ஒப்பீடு.
மாணிக்க வாசகர் திருவெம்பாவை உதாரணம் கூறி, எது என்ன ஆனாலும் பகவானின் திருப்பாதங்களை மட்டுமே வணங்கி இருக்க வழி காட்டுகிறார்.
பகவானைப் பற்றி அறிய அளவில்லா ஆவல் வேண்டும் என்று கூறியது,
ஸ்ரீ ஸ்வாமிகள் ஸ்தோத்திர பாராயணம் தொடர்ந்து செய்வது (constancy) பஜனத்திற்கு உயர்வான வழி என்பதை வலியுறுத்தி சொன்னது, ஏனைய பகவத் பக்தி செய்ய யுக்திகள், நீலகண்ட தீக்ஷிதரும் ஒரே பகவானிடம் மாறாத பக்தி, ஏக பக்தி செய்ய சொல்லி,ஏக குருவாக மஹா பெரியவாளையும் வணங்கி வழிபடும் விதம் மொத்தத்தில் பக்தியில் தோய்ந்து, நனைந்து இருக்கக் காட்டும் விளக்கம் மிக அழகு. இவை அனைத்தும் ஒன்றிணைந்து பகவத் பஜனம், பக்தியையும் அருள, அந்த எல்லாம் வல்ல பரமேஸ்வரனையும், ஸ்ரீ மஹா பெரியவாளையும், ஸ்ரீ சாரையும், ஸ்ரீ ஸ்வாமிகளையும் வேண்டிக்கொள்கிறேன்.
🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇

ஹே பரமசிவ, தங்களுடைய தாமரை போன்ற மலர்ப் பாதங்களில் என் மனம் லயிக்கட்டும்! வாக் இந்த்ரியங்கள் எல்லாம் தங்கள் ஸ்துதி செய்வதிலேயே நிலைபெற்றிருக்க வேண்டும். எனது கைகள் தங்களுக்கு அர்ச்சனை செய்வதில், பூஜை செய்வதிலேயே நிலைத்திருக்கட்டும்.. காது தங்கள் ஸ்தோத்ரம் , கதைகள் கேட்பதில் ஈடுபடட்டும். என் புத்தி தங்கள் த்யானத்தில் நிலை பெற்றிருக்க வேண்டும். இரு கண்களும் தங்கள் சோபையைப் பார்க்க, பருகுவதில் ஈடுபடட்டும்.இப்படியாக எல்லா இந்த்ரியங்களும் தங்கள் சேவையில் ஈடுபட்டு விட்டால், மற்ற விஷயங்களைக் கூறும் எதிலும் என் மனம் ஈடுபடாதல்லவா என்று சங்கரர், ஈஸ்வரனிடம் கேட்கிறார்!
பக்தியின் எல்லை இந்த ஸ்லோகம்!
ஜய ஜய சங்கரா..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.