Categories
Stothra Parayanam Audio

திருப்பாவை திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி ஒலிப்பதிவு; Thiruppavai Thiruvembavai Thiruppalliezhuchi audio mp3

இன்று மார்கழி முதல் நாள். எங்கள் தகப்பனார் மஹாபெரியவா திருப்பாவை திருவெம்பாவை மாநாடு நடத்திய வருடத்திலிருந்து மார்கழி மாதம் 30 நாட்களும் விடியற்காலையிலேயே சிவ பூஜையை முடித்துவிட்டு திருப்பாவை திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி  எல்லா பாடல்களையும் படிப்பார். அதனால் எங்களுக்கும் அவற்றை படிக்கும் பாக்யம் கிடைத்தது.

திருவெம்பாவை, திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி ஒலிப்பதிவு இங்கே.

திருவெம்பாவை இருபது பாடல்கள் ஒலிப்பதிவு

திருப்பாவை முப்பது பாடல்கள் ஒலிப்பதிவு

திருப்பள்ளியெழுச்சி பத்து பாடல்கள் ஒலிப்பதிவு

திருவெம்பாவை

1. ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே

ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்

 

2. பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்

பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே

நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்

சீசி இவையுஞ் சிலவோ விளையாடி

ஏசும் இடமீதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்

கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்

தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்

ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்

 

3. முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிர் எழுந்தென்

அத்தன் ஆனந்தன் அமுதன் என் றள்ளூறித்

தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்

பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்

புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ

எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ

சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை

இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்

 

4. ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ

வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ

எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்

கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே

விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்

கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்

உள் நெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயேவந்து

எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்

 

5. மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்

போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்

பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்

ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்

கோலமும் நம்மைஆட் கொண்டருளி கோதாட்டுஞ்

சீலமும் பாடிச் சிவனே சிவனே என்று

ஓலம் இடினும் உணராய் உணராய்காண்

ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்

 

6. மானேநீ நென்னலை நாளை வந்துங்களை

நானே எழுப்புவன் என்றலும் நாணாமே

போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ

வானே நிலனே பிறவே அறிவரியான்

தானேவந் தெம்மைத் தலையளித் தாட்கொண்டருளும்

வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்

ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்

ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்

 

7. அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்

உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்

சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய்திறப்பாய்

தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்

என்னானை என்அரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்

சொன்னோங்கேல் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ

வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்

என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்

 

8. கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்

ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்

கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை

கேழில் விழுப்பொருள்கள் பாடினோங் கேட்டிலையோ

வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்

ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை

ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்

 

9. முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற் றியனே

உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்

உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்

அன்னவரே எங்கணவர் ஆவார் அவர் உகந்து

சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்

இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்

என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்

 

10. பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்

போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே

பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்

வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்

ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்

கோதில் குலத்தரன் தன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்

ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்

ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய்

 

11. மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்

கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி

ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்

செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல்

மையார் தடங்கண் மடந்தை மணவாளா

ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்

எய்யாமற் காப்பாய் எமைஏலோர் எம்பாவாய்

 

12. ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்

தீர்த்தன் நற் றில்லை சிற்றம்பலத்தே தீயாடும்

கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்

காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி

வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்

ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப

பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்

ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்

 

13. பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால்

அங்கம் குருகினத்தார் பின்னும் அரவத்தால்

தங்கள் மலம்கழுவு வார்வந்து சார்தலினால்

எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த

பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்

சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்

கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்

பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்

 

14. காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்

கோதை குழலாட வண்டின் குழாமாடச்

சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி

வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்

சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி

ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்

பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்

பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்

 

15. ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்

சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர

நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்

பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்

பேரரையர்க் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்

ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்

வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி

ஏருருவப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

 

16. செங்கணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்

எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக்

கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி

இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்

செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை

அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை

நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்

பங்கயப்பூம் புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

 

17. முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்

என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்

மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்

பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்

என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்

தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு

முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே

என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

 

18. அண்ணா மலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்

விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றார்போல்

கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்

தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்

பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்

விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்

கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்

பெண்ணேஇப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

 

19. உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று

அங்கப் பழஞ்சொற் புதுக்கும் எம் அச்சத்தால்

எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்

எங்கொங்கை நின் அன்பர் அல்லார்தோள் சேரற்க

எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க

கங்குல்பகல் எங்கண் மற்றொன்றுங் காணற்க

இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்

எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்

 

20. போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்

போற்றியெல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றியெல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்

போற்றியாம் உய்ய ஆட் கொண்டருளும் பொன்மலர்கள்

போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்.

திருப்பாவை

1. மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்

     நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்

     கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

     கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்

     பாரோர் புகழப் படிந்து ஏல் ஓர் எம்பாவாய்.

 

2. வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்

     செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள்

பையத் துயின்ற பரமனடி பாடி

     நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி

மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்

     செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

     உய்யுமாறு எண்ணி உகந்து ஏல் ஓர் எம்பாவாய்.

 

3. ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி

     நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

     ஓங்கு பெருஞ் செந்நொலூடு கயல் உகள

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப

     தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

     நீங்காத செல்வம் நிறைந்து ஏல் ஓர் எம்பாவாய்.

 

4. ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்

     ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேரி

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்

     பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்

ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து

     தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

     மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.

 

5. மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்

     தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்

     தாயைக் குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

     வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

     தீயினில் தூசாகும் செப்பு ஏல் ஓர் எம்பாவாய்.

 

6. புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்

     வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?

பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு

     கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி

வெள்ளத் தரவில் துயில் அமர்ந்த வித்தினை

     உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்

     உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.

 

7. கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து

     பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

     வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ

     நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ

     தேசமுடையாய்! திற ஏல் ஓர் எம்பாவாய்.

 

8. கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு

     மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்

     கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய

பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு

     மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்

     ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய்.

 

9. தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய

     தூபம் கமழ துயில் அணை மேல் கண் வளரும்

மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!

     மாமீர்! அவளை எழுப்பீரோ? உம் மகள் தான்

ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ

     ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

     நாமம் பலவும் நவின்று ஏல் ஓர் எம்பாவாய்.

 

10. நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

     மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்

நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்

     போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்

கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்

     தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?

ஆற்ற அனந்தலுடையாய் அருங்கலமே

     தேற்றமாய் வந்து திற ஏல் ஓர் எம்பாவாய்!

 

11. கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து

     செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும்

குற்ற மொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே

     புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்

சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்து நின்

     முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட

சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ

     எற்றுக்கு உறங்கும் பொருள் ஏல் ஓர் எம்பாவாய்!

 

12. கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிறங்கி

     நினைத்து முலை வழியே நின்று பால் சோர

நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்

     பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி

சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற

     மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்

     அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏல் ஓர் எம்பாவாய்

 

13. புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

     கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்

     வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பின காண்! போது அரிக்கண்ணினாய்

     குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே

பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்

     கள்ளம் தவிர்ந்து கலந்து ஏல் ஓர் எம்பாவாய்

 

14. உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

     செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்

செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர்

     தங்கள் திருக்கோயில் சங்டகிடுவான் போகின்றார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்

     நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

     பங்கயக் கண்ணானைப் பாடு ஏல் ஓர் எம்பாவாய்

 

15. எல்லே! இளங்கிளியே இன்னம் உறங்குதியோ

     சில்லென்று அழையேன் மின் நங்கைமீர் போதருகின்றேன்

வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்

     வல்லீர்கள் நீங்களே நான் தான் ஆயிடுக

ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை

     எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக் கொள்

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க

     வல்லானை மாயானை பாடு ஏல் ஓர் எம்பாவாய்

 

16. நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய

     கோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரண

வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்

     ஆயர் சிறுமியரோமுக்கு, அறைபறை

மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்

     தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ

     நேய நிலைக் கதவம் நீக்கு ஏல் ஓர் எம்பாவாய்

 

17. அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்

     எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே

     எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்

அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த

     உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்

செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா

     உம்பியும் நீயும் உறங்கேல் ஓர் எம்பாவாய்

 

18. உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்

     நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!

கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்

     வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்

பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்

     பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாட

செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப

     வந்து திறவாய் மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

 

19. குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்

     மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி

கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்

     வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்

மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை

     எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்

எத்தனையேலும் பிரிவாற்ற கில்லையால்

     தத்துவம் அன்று தகவு ஏல் ஓர் எம்பாவாய்

 

20. முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று

     கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்

செப்பமுடையாய், திறலுடையாய் செற்றார்க்கு

     வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்

செப்பன்ன, மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்

     நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்

உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை

     இப்போதே எம்மை நீராட்டு ஏல் ஓர் எம்பாவாய்

 

21. ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

     மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்

     ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்

     மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண்

ஆற்றாது வந்து உன் அடி பணியுமாபோலே

     போற்றியாம் வந்தோம் புகழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

 

22. அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான

     பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற்கீழே

சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்

     கிண்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே

செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ

     திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்

அங்கண் இரண்டுங்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்

     எங்கள் மேல் சாபம் இழிந்து ஏல் ஓர் எம்பாவாய்

 

23. மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்

     சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து

வேரி மயிர்ப்பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி

     மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போதருமா போலே நீ பூவைப் பூவண்ணா உன்

     கோயில் நின்று இங்ஙனே போந்தருளி, கோப்புடைய

சீரிய சிங்காசனத்திலிருந்து, யாம் வந்த

     காரியம் ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய்

 

24. அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி

     சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி

பொன்றச் சகடமுதைத்தாய் புகழ் போற்றி

     கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி

குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி

     வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி

என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்

     இன்றுயாம் வந்தோம் இரங்கு ஏல் ஓர் எம்பாவாய்

 

25. ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்

     ஒருத்தி மகனாய் ஒளித்து வளர

தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைத்த

     கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை

     அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

     வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

 

26. மாலே! மணிவண்ணா மார்கழி நீராடுவான்

     மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன

     பாலன்ன வண்ணத்துன் பாஞ்சன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே

     சாலப்பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே

கோல விளக்கே கொடியே விதானமே

     ஆலின் இலையாய் அருள் ஏல் ஓர் எம்பாவாய்

 

27. கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப்

     பாடி பறை கொண்டு யாம் பெறு சம்மானம்

நாடு புகளும் பரிசினால் நன்றாக

     சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே

பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்

     ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு

மூட நெய் பெய்து முழங்கை வழிவார

     கூடியிருந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

 

28. கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம்

     அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்

பிறவி பெருந்தனை புண்ணியம் யாம் உடையோம்

     குறைவொன்றும் இல்லாத கோவிந்தா, உன்தன்னோடு

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது

     அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்

சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே

     இறைவா! நீ தாராய் பறை ஏல் ஓர் எம்பாவாய்

 

29. சிற்றஞ் சிறு காலே வந்துன்னைச் சேவித்து உன்

     பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்!

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ

     குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!

     எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்

     மற்றை நம் காமங்கள் மாற்று ஏல் ஓர் எம்பாவாய்

 

30. வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை

     திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி

அங்கு அப்பறை கொண்ட ஆற்றை அணிபுதுவைப்

     பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன

சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே

     இங்கு இப்பரிசு உறைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

     எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

திருப்பள்ளியெழுச்சி

1.போற்றி ! என் வாழ்முதலாகிய பொருளே !

      புலர்ந்தது; பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு

ஏற்றி, நின் திருமுகத்து எமக்கருள் மலரும்

      எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்;

சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்

      திருப்பெருந்துறை உறை சிவபெருமானே !

ஏற்றுயர் கொடியுடையாய் ! எனையுடையாய் !

      எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

2. அருணண் இந்திரன் திசை அணுகினன்; இருள்போய்

      அகன்றது; உதயம் நின் மலர்த்திரு முகத்தின்

கருணையின் சூரியன் எழ எழ, நயனக்

      கடிமலர் மலர, மற்று அண்ணல் அங்கண்ணாம்

திரள்நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் !

      திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !

அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே !

      அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே !

3. கூவின பூங்குயில்; கூவின கோழி;

      குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ;

ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து

      ஒருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்

தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் !

      திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !

யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய் !

      எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

4. இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;

     இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;

துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ;

      தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;

      திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !

என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்

      எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

5. பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால்

      போக்கிலன் வரவிலன்” என நினைப் புலவோர்

கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்

      கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்

சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா !

      சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்து

ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்

      எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !

6. பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்

      பந்தனை வந்தறுத்தார்; அவர் பலரும்

மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்

      வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா !

செப்புறு கமலங் கண் மலரும் தண்வயல் சூழ்

      திருப்பெருந் துறையுறை சிவபெருமானே !

இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்

      எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !

7. “அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு

      அரிதென, எளிதென”, அமரரும் அறியார்,

“இது அவன் திருவுரு; இவன் அவன்” எனவே;

      எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்

மதுவளர் பொழில் திருஉத்தர கோச

      மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா !

எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்;

      எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே !

8. முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்;

      மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் !

பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்

      பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே !

செந்தழல் புரை திருமேனியுங் காட்டித்

      திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி

அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்;

      ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !

9. விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா

      விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்

மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே !

      வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம்

கண்ணகத்தே நின்று களிதரு தேனே !

      கடலமுதே ! கரும்பே ! விரும்படியார்

எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய் !

      எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே !

10. “புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம்

      போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி

சிவன் உய்யக் கொள்கின்றவாறு” என்று நோக்கித்

      திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம்

அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்

      படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்

அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் !

      ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !

One reply on “திருப்பாவை திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி ஒலிப்பதிவு; Thiruppavai Thiruvembavai Thiruppalliezhuchi audio mp3”

அருமையான சமய சஞ்சீவி போல் இளம் தலைமுறையினருக்கு ஏற்ற போஸ்ட் இது!
எம் போல் வயதானவர்களுக்கு மலரும் நினைவுகள் !!
நான் பள்ளியில் 8ஆம்.வகுப்பு என்ற ஞாபகம் . மகாபெரியவா திருவிடைமருதூர் கேம்ப் .
அங்கு மகாலிஙக ஸ்வாமி கோவிலில் ஒரு அம்மையார் தினந்தோறும் காலையில் திருவெம்பாவை, திருப்பாவை பாராயணம் செய்வதைக் கவனித்த பெரியவா தன் சிப்பந்தி ஒருவரிடம் “இவா என்ன வாசிக்கிறார் தெரியுமா” என வினவ, அவர் தமக்குத் தெரியாது என்று பதில்.சொன்னார்.
அந்த நாட்களில் இவை பிரபலமாக ஆகவில்லை!
பெரியவா உடனே ” இவை கிடைத்தற்கரிய பொக்கிஷங்கள் !”
என்று சொல்லி, உடனே பிரிண்ட் செய்ய ஏற்பாடு பண்ணி, அந்த பாக்களின் பிரதிகளை யானையின் மேல் ஊர்வலமாக எடுத்துச் சென்று அவற்றை உரத்த குரலில் வாசிக்குமாரு பணித்தார்.ஆனால். கைங்கர்ய பரர்களுக்கு இதில் கொஞ்சம் வெட்கம் !
ஆனால் பெரியவா உத்தராவாசே , அதனால் அப்படியே நிறைவேற்றினர் .
இதுதான் அவை அரங்கேறின விவரம் !
அது.மட்டுமா ? வீடு வீடாக, பள்ளி க்கூடம், பெ ரிய கார்யாலயங்கள் எல்லாம் சிவ விஷ்ணு பேதமின்றி பவனி வர ஆரம்பித்தன !
ஒவ்வொரு பள்ளியிலும் மார்கழி மாசம் திருவிழாக்.கோலம் பூண்டது !
மனனம் செய்து ஒப்பித்தல், இசையோடு பாடுதல் இவற்றுக்கு போட்டி, பரிசு என ஊக்குவித்து அனைவரும் பங்கு கொண்டோம் !
இசை அறிஞர்கள் ஒலி நாடாவில் மேற்சொன்ன அனைத்துப் பாக்களையும் இசை வடிவில் தந்து என் போன்ற இசைப்ரியrகளுக்கு மனம்.செய்து போட்டியில்.பங்கேற்க வாய்ப்பளித்து பரிசளித்து ஊக்குவித்து எம் நினைவில் பாக்கள் நீங்கா நினைவாக நிற்கச் செய்தது எம்.பெரியவா தவிர யாரால்.முடியும் ?
மிக்க நன்றி கணபதி ! To take us to golden memories !!
பெரியவா இல்லாவிடில் இவை எல்லாம் புழக்கத்துக்கு வந்திருக்குமா என்பது ஐயமே !
நிரைவான பதிவு !!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.