Categories
Stothra Parayanam Audio

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் ஒலிப்பதிவு (Kandar alankaram audio)

கந்தர் அலங்காரம் ஒலிப்பதிவு (Audio of kandar alankaram, 41 minutes 20 MB file)

கந்தர் அலங்காரம்

காப்பு (விநாயகர்)

அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு
வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையிற்
தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே.

……… சொற்பிரிவு ………

அடல் அருணைத் திருக்கோபுரத்தே, அந்த வாயிலுக்கு
வடவருகில் சென்று கண்டுகொண்டேன், வருவார் தலையில்,
தடபடெனப் படு குட்டுடன், சர்க்கரை மொக்கிய கைக்,
கடதட கும்பக் களிற்றுக்கு, இளைய களிற்றினையே.

பாடல் 1 … பேற்றைத் தவம்

பேற்றைத் தவஞ்சற்று மில்லாத வென்னைப்ர பஞ்சமென்னும்
சேற்றைக் கழிய வழிவிட்ட வா செஞ் சடாடவிமேல்
ஆற்றைப்பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.

……… சொற்பிரிவு ………

பேற்றைத் தவம், சற்றும் இல்லாத என்னைப், பிரபஞ்சம் என்னும்
சேற்றைக் கழிய வழிவிட்டவா, செஞ்சடாடவிமேல்,
ஆற்றைப், பணியை, இதழியைத், தும்பையை, அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான், குமாரன், கிருபாகரனே.

பாடல் 2 … அழித்துப் பிறக்க

அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றி லீரெரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே.

……… சொற்பிரிவு ………

அழித்துப் பிறக்கவொட்டா, அயில் வேலன் கவியை, அன்பால்,
எழுத்துப் பிழையறக் கற்கின்றிலீர், எரி மூண்டதென்ன,
விழித்துப், புகையெழப், பொங்கு வெங்கூற்றன் விடும் கயிற்றால்,
கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ, கவி கற்கின்றதே.

பாடல் 3 … தேர் அணி இட்டு

தேரணி யிட்டுப் புரமெரித் தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணு வாகிக் கிரெளஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடக நெளிந்தது சூர்ப்
பேரணி கெட்டது தேவந்த்ர லோகம் பிழைத்ததுவே.

……… சொற்பிரிவு ………

தேரணி இட்டு புரம் எரித்தான் மகன், செங்கையில், வேற்
கூரணி யிட்டு, அணுவாகிக், கிரௌஞ்சம் குலைந்து, அரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடக நெளிந்தது, சூர்ப்
பேரணி கெட்டது, தேவேந்த்ர லோகம், பிழைத்ததுவே.

பாடல் 4 … ஓர ஒட்டார்

ஓரவொட் டாரொன்றை யுன்னவொட் டார்மல ரிட்டுனதாள்
சேரவொட் டாரைவர் செய்வதென் யான்சென்று தேவருய்யச்
சோரநிட் டூரனைச் சூரனைக் காருடல் சோரிகக்கக்
கூரகட்டாரியிட் டோரிமைப் போதினிற் கொன்றவனே.

……… சொற்பிரிவு ………

ஓர ஒட்டார், ஒன்றை உன்ன ஒட்டார், மலரிட்டு, உனதாள்
சேர ஒட்டார், ஐவர்; செய்வதென் யான், சென்று, தேவர் உய்யச்
சோர நிட்டூரனை, சூரனைக், கார் உடல் சோரி கக்கக்
கூர, கட்டாரி இட்டோர் இமைப் போதினில், கொன்றவனே,

பாடல் 5 … திருந்த புவனங்கள்

திருந்தப் புவனங்க ளீன்றபொற் பாவை திருமுலைப்பால்
அருந்திச் சரவணப் பூந்தொட்டி லேறி யறுவர்கொங்கை
விரும்பிக் கடலழக் குன்றழச் சூரழ விம்மியழுங்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென் றோதுங் குவலயமே.

……… சொற்பிரிவு ………

திருந்த, புவனங்கள் ஈன்ற பொற்பாவை, திருமுலைப்பால்
அருந்திச், சரவணப் பூந்தொட்டி லேறி, அறுவர் கொங்கை
விரும்பிக், கடலழக், குன்றழச், சூரழ, விம்மி அழுங்
குருந்தைக், குறிஞ்சிக் கிழவன் என்றோதும், குவலயமே.

பாடல் 6 … பெரும் பைம்

பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்பும் குமரனை மெய்யன்பி னான்மெல்ல மெல்லவுள்ள
அரும்புந் தனிப்பர மானந்தத் தித்தித் தறிந்தவன்றே
கரும்புந் துவர்த்துச் செந்தேனும் புளித்தறக் கைத்ததுவே.

……… சொற்பிரிவு ………

பெரும் பைம் புனத்தினுள், சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்பும் குமரனை, மெய் அன்பினால், மெல்லமெல்ல உள்ள,
அரும்பும், தனிப் பரமானந்தம், தித்தித்து அறிந்தவன்றே,
கரும்பும் துவர்த்து, செந்தேனும் புளித்து, அறக் கைத்ததுவே.

பாடல் 7 … சளத்தில் பிணிபட்டு

சளத்திற் பிணிபட் டசட்டு க்ரியைக்குட் டவிக்குமென்றன்
உளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பா யவுண ருரத்துதிரக்
குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக்
களத்திற் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே.

……… சொற்பிரிவு ………

சளத்தில் பிணிபட்டு, அசட்டுக் க்ரியைக்குள் தவிக்கும், என்றன்
உளத்தில், ப்ரமத்தைத் தவிர்ப்பாய்; அவுணர் உரத்துதிரக்
குளத்தில் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்து, வெற்றிக்
களத்தில், செருக்கிக் கழுதாட வேல் தொட்ட காவலனே.

பாடல் 8 … ஒளியில் விளைந்த

ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
தெளிய விளம்பிய வா, முக மாறுடைத் தேசிகனே.

……… சொற்பிரிவு ………

ஒளியில் விளைந்த, உயர் ஞான பூதரத்து, உச்சியின் மேல்,
அளியில் விளைந்ததோர் ஆனந்தத் தேனை, அநாதியிலே,
வெளியில் விளைந்த வெறும் பாழைப் பெற்ற வெறும் தனியைத்,
தெளிய விளம்பியவா, முகமாறுடைத் தேசிகனே.

பாடல் 9 … தேன் என்று

தேனென்று பாகென்றுவமிக் கொணாமொழித் தெய்வ வள்ளி
கோனன் றெனக்குப தேசித்த தொன்றுண்டு கூறவற்றோ
வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானன் றசரீரி யன்று சரீரியன்றே.

……… சொற்பிரிவு ………

தேனென்று, பாகென்று, உவமிக்கொணா, மொழித் தெய்வ வள்ளி
கோன், அன்று எனக்கு, உபதேசித்தது ஒன்றுண்டு, கூறவற்றோ,
வானன்று, காலன்று, தீயன்று, நீரன்று, மண்ணுமன்று,
தானன்று, நானன்று, அசரீரியன்று, சரீரியன்றே.

பாடல் 10 … சொல்லுகைக்கு இல்லை

சொல்லுகைக் கில்லையென் றெல்லாமிழந்து சும்மா விருக்கும்
எல்லையுட் செல்ல எனைவிட்ட வாஇகல் வேலனல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச் செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோளண்ணல் வல்லபமே.

……… சொற்பிரிவு ………

சொல்லுகைக்கு இல்லை என்று, எல்லாம் இழந்து சும்மா விருக்கும்,
எல்லையுள் செல்ல எனை விட்டவா, இகல் வேலன் நல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக், கல்வரைக் கொவ்வைச் செவ்வாய்,
வல்லியைப் புல்கின்ற, மால்வரைத் தோள் அண்ணல், வல்லபமே.

பாடல் 11 … குசை நெகிழா

குசைநெகி ழாவெற்றி வேலோ னவுணர் குடர்குழம்பக்
கசையிடு வாசி விசை கொண்ட வாகனப் பீலியின்கொத்
தசைபடு கால்பட் டசைந்தது மேரு அடியிடவெண்
டிசைவரை தூள்பட்ட அத்தூளின் வாரி திடர்பட்டதே.

……… சொற்பிரிவு ………

குசை நெகிழா, வெற்றி வேலோன், அவுணர் குடர் குழம்பக்,
கசையிடு வாசி விசைகொண்ட, வாகனப் பீலியின் கொத்து
அசைபடு கால்பட்டு அசைந்தது மேரு, அடியிடவெண்-
திசைவரை தூள்பட்ட, அத்தூளின் வாரி, திடர்பட்டதே.

பாடல் 12 … படைபட்ட வேலவன்

படைபட்ட வேலவன் பால்வந்த வாகைப் பதாகையென்னுந்
தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் சலதிகிழிந்
துடைபட்ட தண்ட கடாக முதிர்ந்த துடுபடலம்
இடைபட்ட குன்றமு மாமேரு வெற்பு மிடிபட்டவே.

……… சொற்பிரிவு ………

படைபட்ட வேலவன், பால் வந்த வாகைப் பதாகை என்னும்,
தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச், சலதி கிழிந்து
உடைபட்ட தண்ட கடாகம், உதிர்ந்தது உடுபடலம்,
இடைப்பட்ட குன்றமும் ,மாமேரு வெற்பும், இடிபட்டவே.

பாடல் 13 … ஒருவரைப் பங்கில்

ஒருவரைப் பங்கி லுடையாள் குமார னுடைமணிசேர்
திருவரைக் கிண்கிணி யோசை படத்திடுக் கிட்டரக்கர்
வெருவரத் திக்குச் செவிடுபட் டெட்டுவெற் புங்கனகப்
பருவரைக் குன்று மதிர்ந்தன தேவர் பயங்கெட்டதே.

……… சொற்பிரிவு ………

ஒருவரைப், பங்கில் உடையாள் குமாரன், உடை மணிசேர்,
திருவரைக் கிண்கிணி ஓசைபடத், திடுக்கிட்டு, அரக்கர்
வெருவரத், திக்குச் செவிடுபட்டு எட்டு வெற்பும், கனகப்
பருவரைக் குன்றும் அதிர்ந்தன, தேவர் பயம் கெட்டதே.

பாடல் 14 … குப்பாச வாழ்க்கை

குப்பாச வாழ்க்கையுட் கூத்தாடு மைவரிற் கொட்படைந்த
இப்பாச நெஞ்சனை யீடேற்று வாயிரு நான்குவெற்பும்
அப்பாதி யாழ்விழ மேருங் குலுங்கவிண் ணாருமுய்யச்
சப்பாணி கொட்டிய கையா றிரண்டுடைச் சண்முகனே.

……… சொற்பிரிவு ………

குப்பாச வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரில் கொட்படைந்த,
இப்பாச நெஞ்சனை, ஈடேற்றுவாய், இருநான்கு வெற்பும்
அப்பாதியாய் விழ, மேரும் குலுங்க, விண்ணாரும் உய்யச்,
சப்பாணி கொட்டிய, கை ஆறு இரண்டு உடைச், சண்முகனே.

பாடல் 15 … தாவடி ஓட்டு

தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென்
பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே.

……… சொற்பிரிவு ………

தாவடி ஓட்டு மயிலிலும், தேவர் தலையிலும், என்
பா அடி ஏட்டிலும், பட்டதன்றோ, படி மாவலிபால்
மூவடி கேட்டு, அன்று மூதண்ட கூட முகடுமுட்டச்
சேவடி நீட்டும், பெருமான், மருகன் தன், சிற்றடியே.

பாடல் 16 … தடுங்கோள் மனத்தை

தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானமென்றும்
இடுங்கோ ளிருந்த படியிருங் கோளெழு பாருமுய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றந் திறக்கத் தொளைக்கவை வேல்
விடுங்கோ னருள்வந்து தானே யுமக்கு வெளிப்படுமே.

……… சொற்பிரிவு ………

தடுங்கோள் மனத்தை, விடுங்கோள் வெகுளியைத், தானமென்றும்
இடுங்கோள், இருந்தபடி இருங்கோள், எழு பாரும் உய்யக்
கொடும் கோபச் சூருடன், குன்றம் திறக்கத் தொளைக்க, வைவேல்
விடும் கோன், அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே.

பாடல் 17 … வேத ஆகம

வேதா கமசித்ர வேலா யுதன் வெட்சி பூத்ததண்டைப்
பாதார விந்தம் அரணாக அல்லும் பகலுமில்லாச்
சூதான தற்ற வெளிக்கே யொளித்துச்சும் மாவிருக்கப்
போதா யினிமன மேதெரி யாதொரு பூதர்க்குமே.

……… சொற்பிரிவு ………

வேதாகம சித்ர வேலாயுதன், வெட்சிபூத்த தண்டைப்
பாதாரவிந்தம் அரண் ஆக, அல்லும் பகலும் இல்லாச்
சூதானதற்ற வெளிக்கே, ஒளித்துச் சும்மா விருக்கப்
போதாய், இனி மனமே, தெரியாதொரு பூதர்க்குமே.

பாடல் 18 … வையின் கதிர்

வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா உடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே.

……… சொற்பிரிவு ………

வையிற் கதிர் வடிவேலோனை வாழ்த்தி, வறிஞர்க்கென்றும்,
நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்கள், உங்கட்கிங்ஙன்,
வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போற்,
கையில் பொருளும், உதவாது காணும், கடைவழிக்கே

பாடல் 19 … சொன்ன கிரௌஞ்ச

சொன்ன கிரெளஞ்ச கிரியூ டுருவத் தொளைத்தவைவேல்
மன்ன கடம்பின் மலர்மாலை மார்பமெள னத்தையுற்று
நின்னை யுணர்ந்துணர்ந் தெல்லா மொருங்கிய நிர்குணம் பூண்
டென்னை மறந்திருந் தேனிறந் தேவிட்ட திவ்வுடம்பே.

……… சொற்பிரிவு ………

சொன்ன கிரௌஞ்ச கிரி, ஊடுருவ தொளைத்த வை வேல்
மன்ன, கடம்பின் மலர்மாலை மார்ப, மௌனத்தை உற்று
நின்னை உணர்ந்து உணர்ந்து, எல்லாம் ஒருங்கிய, நிர்க்குணம் பூண்டு,
என்னை மறந்திருந்தேன், இறந்தேவிட்டது இவ்வுடம்பே.

பாடல் 20 … கோழிக்கொடியன்

கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலத்தே
வாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினைநோய்
ஊழிற் பெருவலி யுண்ணவொட்டாது உங்களத்தமெல்லாம்
ஆழப் புதைத்துவைத் தால்வருமோ நும் மடிப்பிறகே.

……… சொற்பிரிவு ………

கோழிக்கொடியன் அடிபணியாமல் குவலயத்தே,
வாழக் கருதும் மதியிலிகாள், உங்கள் வல்வினைநோய்
ஊழிற் பெருவலி உண்ணவொட்டாது, உங்கள் அத்தமெல்லாம்,
ஆழப்புதைத்து வைத்தால், வருமோ, நும் மடிப் பிறகே.

பாடல் 21 … மரண ப்ரமாதம்

மரணப்ர மாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை
கிரணக் கலாபியும் வேலுமுண் டேகிண் கிணிமுகுள
சரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா
பரணக்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே.

……… சொற்பிரிவு ………

மரண ப்ரமாதம் நமக்கில்லையாம், என்றும் வாய்த்த துணை,
கிரணக்கலாபியும் வேலும் உண்டே, கிண்கிணி முகுள,
சரண ப்ரதாப, சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷாபரண,
கிருபாகர, ஞானாகர, சுர பாஸ்கரனே.

பாடல் 22 … மொய் தார் அணி

மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற்
கைதா னிருப துடையான் தலைப்பத்துங் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.

……… சொற்பிரிவு ………

மொய் தார் அணி குழல் வள்ளியை வேட்டவன், முத்தமிழால்
வைதாரையும் அங்கு வாழவைப்போன், வெய்ய, வாரணம் போல்
கைதான், இருபதுடையான், தலை பத்தும் கத்தரிக்க
எய்தான், மருகன், உமையாள் பயந்த இலஞ்சியமே.

பாடல் 23 … தெய்வத் திருமலை

தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவ னேமற வேனுனைநான்
ஐவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டு
கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே.

……… சொற்பிரிவு ………

தெய்வத் திருமலை, செங்கோட்டில் வாழும் செழும் சுடரே,
வை வைத்த வேற்படை வானவனே, மறவேன் உனை நான்,
ஐவர்க்கு இடம்பெற, கால் இரண்டோட்டி, அதில் இரண்டு
கைவைத்த வீடு குலையும் முன்னே, வந்து காத்தருளே.

பாடல் 24 … கின்னம் குறித்து

கின்னங் குறித்தடி யேன்செவி நீயன்று கேட்கச்சொன்ன
குன்னங் குறிச்சி வெளியாக்கி விட்டது கோடுகுழல்
சின்னங் குறிக்க குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை
முன்னங் குறிச்சியிற் சென்றுகல் யாண முயன்றவனே.

……… சொற்பிரிவு ………

கின்னம் குறித்து, அடியேன் செவி, நீ, அன்று கேட்கச்சொன்ன
குன்னம் குறிச்சி வெளியாக்கிவிட்டது, கோடுகுழல்
சின்னம் குறிக்க, குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை,
முன்னம் குறிச்சியில் சென்று, கல்யாணம் ,முயன்றவனே.

பாடல் 25 … தண்டாயுதமும்

தண்டா யுதமுந் திரிசூல மும்விழத் தாக்கியுன்னைத்
திண்டாட வெட்டி விழவிடு வேன்செந்தில் வேலுனக்குத்
தொண்டா கியவென் னவிரோத ஞானச் சுடர்வடிவாள்
கண்டா யடாவந்த காவந்து பார்சற்றென் கைக்கெட்டவே.

……… சொற்பிரிவு ………

தண்டாயுதமும், திரிசூலமும், விழத் தாக்கி, உன்னைத்
திண்டாட வெட்டி விழவிடுவேன், செந்தில் வேலனுக்குத்
தொண்டாகிய, என் அவிரோத ஞானச்சுடர் வடிவாள்
கண்டாயடா, அந்தகா, வந்துபார் சற்றென் கைக்கு எட்டவே.

பாடல் 26 … நீலச் சிகண்டியில்

நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே
காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே.

……… சொற்பிரிவு ………

நீலச் சிகண்டியில் ஏறும் பிரான், எந்த நேரத்திலும்,
கோலக் குறத்தியுடன் வருவான், குருநாதன் சொன்ன
சீலத்தை, மெள்ளத் தெளிந்தறிவார், சிவயோகிகளே
காலத்தை வென்றிருப்பார், மரிப்பார் வெறும் கர்மிகளே.

பாடல் 27 … ஓலையும் தூதரும்

ஓலையுந் தூதருங் கண்டுதிண் டாட லொழித்தெனக்குக்
காலையு மாலையு முன்னிற்கு மேகந்த வேள்மருங்கிற்
சேலையுங் கட்டிய சீராவுங் கையிற் சிவந்தசெச்சை
மாலையுஞ் சேவற் பதாகையுந் தோகையும் வாகையுமே.

……… சொற்பிரிவு ………

ஓலையும் தூதரும் கண்டு திண்டாடல் ஒழித்து ,எனக்குக்
காலையும் மாலையும் முன்னிற்குமே, கந்தவேள் மருங்கில்,
சேலையும் கட்டிய சீராவும், கையில் சிவந்த செச்சை
மாலையும், சேவற் பதாகையும், தோகையும், வாகையுமே.

பாடல் 28 … வேலே விளங்கும்

வேலே விளங்குகை யான்செய்ய தாளினில் வீழ்ந்திறைஞ்சி
மாலே கொளவிங்ஙன் காண்பதல் லான்மன வாக்குச்செய
லாலே யடைதற் கரிதா யருவுரு வாகியொன்று
போலே யிருக்கும் பொருளையெவ் வாறு புகல்வதுவே.

……… சொற்பிரிவு ………

வேலே விளங்கு கையான், செய்ய தாளினில் வீழ்ந்திறைஞ்சி,
மாலே கொள, இங்ஙன் காண்பதல்லால், மன வாக்குச் செய-
லாலே, அடைதற்கரிதாய், அரு உருவாகி, ஒன்று
போலே இருக்கும் பொருளை, எவ்வாறு புகல்வதுவே.

பாடல் 29. … கடத்தில் குறத்தி

கடத்திற் குறத்தி பிரானரு ளாற்கலங் காதசித்தத்
திடத்திற் புணையென யான்கடந் தேன்சித்ர மாதரல்குற்
படத்திற் கழுத்திற் பழுத்தசெவ் வாயிற் பணையிலுந்தித்
தடத்திற் றனத்திற் கிடக்கும்வெங் காம சமுத்திரமே.

……… சொற்பிரிவு ………

கடத்தில் குறத்தி பிரான் அருளால், கலங்காத சித்தத்
திடத்தின் புணையென யான் கடந்தேன், சித்ரமாதர், அல்குல்
படத்தில், கழுத்தில், பழுத்த செவ்வாயில், பணையில், உந்தித்
தடத்தில், தனத்திற் கிடக்கும், வெங்காம சமுத்திரமே.

பாடல் 30. … பால் என்பது மொழி

பாலென் பதுமொழி பஞ்சென் பதுபதம் பாவையற்கண்
சேலென்ப தாகத் திரிகின்ற நீசெந்தி லோன்றிருக்கை
வேலென் கிலைகொற்ற மயூர மென்கிலை வெட்சித்தண்டைக்
காலென் கிலைமன மேயெங்ங னேமுத்தி காண்பதுவே.

……… சொற்பிரிவு ………

பாலென்பது மொழி, பஞ்சென்பது பதம், பாவையர் கண்
சேல் என்பதாகத் திரிகின்ற நீ, செந்திலோன், திருக்கை
வேல் என்கிலை, கொற்ற மயூரம் என்கிலை, வெட்சித் தண்டைக்
கால் என்கிலை, மனமே, எங்ஙனே முத்தி காண்பதுவே.

பாடல் 31 … பொக்கக் குடிலில்

பொக்கக் குடிலிற் புகுதா வகைபுண்ட ரீகத்தினுஞ்
செக்கச் சிவந்த கழல்வீடு தந்தருள் சிந்துவெந்து
கொக்குத் தறிபட் டெறிபட் டுதிரங் குமுகுமெனக்
கக்கக் கிரியுரு வக்கதிர் வேல்தொட்ட காவலனே.

……… சொற்பிரிவு ………

பொக்கக் குடிலில் புகுதா வகை, புண்டரீகத்தினும்
செக்கச் சிவந்த கழல் வீடு தந்தருள், சிந்து வெந்து
கொக்குத் தறிபட்டு எறிபட்டு, உதிரம் குமுகுமு எனக்,
கக்கக் கிரி உருவக், கதிர்வேல் தொட்ட காவலனே.

பாடல் 32. … கிளைத்துப் புறப்பட்ட

கிளைத்துப் புறப்பட்ட சூர்மார் புடன்கிரி யூடுருவத்
தொளைத்துப் புறப்பட்ட வேற்கந்த னேதுறந் தோருளத்தை
வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்குங் கண்ணார்க்
கிளைத்துத் தவிக்கின்ற என்னை யெந்நாள்வந் திரட்சிப்பையே.

……… சொற்பிரிவு ………

கிளைத்துப் புறப்பட்ட சூர் மார்புடன், கிரி ஊடுருவத்
தொளைத்துப் புறப்பட்ட வேற் கந்தனே, துறந்தோர் உளத்தை,
வளைத்துப் பிடித்துப், பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு,
இளைத்துத் தவிக்கின்ற என்னை, எந்நாள் வந்து இரட்சிப்பையே.

பாடல் 33 … முடியாப் பிறவி

முடியாப் பிறவிக் கடலிற் புகார்முழு துங்கெடுக்கு
மிடியாற் படியில் விதனப் படார்வெற்றி வேற்பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப்
பொடியாக் கியபெரு மாள்திரு நாமம் புகல்பவரே.

……… சொற்பிரிவு ………

முடியாப் பிறவிக் கடலிற் புகார், முழுதும் கெடுக்கும்
மிடியாற் படியில் விதனப்படார், வெற்றிவேல் பெருமாள்,
அடியார்க்கு நல்ல பெருமாள், அவுணர் குலமடங்கப்
பொடியாக்கிய பெருமாள், திருநாமம் புகல்பவரே.

பாடல் 34. … பொட்டாக வெற்பை

பொட்டாக வெற்பைப் பொருதகந்தா தப்பிப் போனதொன்றற்
கெட்டாத ஞான கலைதரு வாயிருங் காமவிடாய்ப்
பட்டா ருயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்குங்
கட்டாரி வேல்விழி யார்வலைக் கேமனங் கட்டுண்டதே.

……… சொற்பிரிவு ………

பொட்டாக வெற்பைப் பொருத கந்தா, தப்பிப் போனது ஒன்றற்கு
எட்டாத ஞானகலை தருவாய், இரும் காம விடாய்ப்
பட்டார் உயிரைத், திருகிப் பருகிப், பசிதணிக்கும்
கட்டாரி வேல்விழியார், வலைக்கே, மனம் கட்டுண்டதே.

பாடல் 35 … பத்தித் துறை

பத்தித் துறையிழிந் தாநந்த வாரி படிவதினால்
புத்தித் தரங்கந் தெளிவதென் றோபொங்கு வெங்குருதி
மெத்திக் குதிகொள்ள வெஞ்சூ ரனைவிட்ட சுட்டியிலே
குத்தித் தரங்கொண் டமரா வதிகொண்ட கொற்றவனே.

……… சொற்பிரிவு ………

பத்தித் துறை இழிந்து, ஆநந்தவாரி படிவதினால்.
புத்தித் தரங்கம் தெளிவதென்றோ, பொங்குவெம் குருதி,
மெத்திக் குதிகொள்ள, வெஞ்சூரனை விட்ட சுட்டியிலே,
குத்தித் தரங்கொண்டு, அமராவதி கொண்ட கொற்றவனே.

பாடல் 36 … சுழித்து ஓடும் ஆற்றில்

சுழித்தோடு மாற்றிற் பெருக்கானது செல்வந் துன்ப மின்பங்
கழித்தோடு கின்றதெக் காலநெஞ்சே கரிக் கோட்டு முத்தைக்
கொழித்தோடு காவிரிச் செங்கோட னென்கிலை குன்றமெட்டுங்
கிழித்தோடு வேலென் கிலையெங்ங னேமுத்தி கிட்டுவதே.

……… சொற்பிரிவு ………

சுழித்தோடும் ஆற்றிற் பெருக்கானது செல்வம், துன்பம் இன்பம்
கழித்தோடுகின்றது எக்காலம், நெஞ்சே, கரிக்கோட்டு முத்தைக்
கொழித்தோடு, காவிரிச் செங்கோடன் என்கிலை, குன்றமெட்டும்
கிழித்தோடு வேல் என்கிலை, எங்ஙனே முத்தி கிட்டுவதே.

பாடல் 37. … கண்டு உண்ட

கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுண் டயர்கினும் வேன்மற வேன்முது கூளித்திரள்
டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக்கொட்டி யாடவெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே.

……… சொற்பிரிவு ………

கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக்கலவிக் கள்ளை,
மொண்டுண்டு அயர்கினும், வேல் மறவேன், முது கூளித் திரள்,
டுண்டுண் டுடுடுடு, டூடூ டுடுடுடு, டுண்டு டுண்டு
டிண்டிண் டெனக் கொட்டி ஆட, வெஞ் சூர்க் கொன்ற ராவுத்தனே.

பாடல் 38 … நாள் என் செயும்

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

……… சொற்பிரிவு ………

நாள் என் செயும், வினைதான் என் செயும், எனை நாடி வந்த
கோள் என் செயும், கொடும் கூற்றென் செயும், குமரேசர் இரு
தாளும் சிலம்பும், சதங்கையும், தண்டையும், சண்முகமும்,
தோளும், கடம்பும், எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

பாடல் 39 … உதித்து ஆங்கு

உதித்தாங் குழல்வதுஞ் சாவதுந் தீர்த்தெனை யுன்னி லொன்றா
விதித்தாண் டருள்தருங் காலமுண் டோவெற்பு நட்டுரக
பதித்தாம்பு வாங்கிநின் றம்பரம் பம்பரம் பட்டுழல
மதித்தான் திருமரு காமயி லேறிய மாணிக்கமே.

……… சொற்பிரிவு ………

உதித்தாங்கு, உழல்வதும், சாவதும் தீர்த்து, எனை, உன்னில் ஒன்றா
விதித்து, ஆண்டு அருள்தரும் காலம் உண்டோ, வெற்பு நட்டு உரக-
பதித் தாம்பு வாங்கி நின்று, அம்பரம், பம்பரம் பட்டுழல
மதித்தான் திருமருகா, மயில் ஏறிய மாணிக்கமே.

பாடல் 40 … சேல் பட்டு

சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில், தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.

……… சொற்பிரிவு ………

சேல் பட்டழிந்தது, செந்தூர் வயல் பொழில் தேம் கடம்பின்
மால் பட்டழிந்தது, பூங்கொடியார் மனம் ,மா மயிலோன்
வேல் பட்டழிந்தது ,வேலையும், சூரனும், வெற்பும், அவன்
கால் பட்டழிந்தது, இங்கு என் தலைமேல், அயன் கையெழுத்தே.

பாடல் 41. … பாலே அனைய

பாலே யனைய மொழியார்த மின்பத்தைப் பற்றியென்றும்
மாலே கொண்டுய்யும் வகையறி யேன்மலர்த் தாள்தருவாய்
காலே மிகவுண்டு காலே யிலாத கணபணத்தின்
மேலே துயில்கொள்ளு மாலோன் மருகசெவ் வேலவனே.

……… சொற்பிரிவு ………

பாலே, அனைய மொழியார்தம் இன்பத்தைப்பற்றி, என்றும்
மாலே கொண்டு, உய்யும் வகை அறியேன், மலர்த்தாள் தருவாய்,
காலே மிக உண்டு காலே இலாத கணபணத்தின்
மேலே, துயில்கொள்ளும் மாலோன் மருக, செவ்வேலவனே.

பாடல் 42 … நிணம் காட்டும்

நிணங்காட்டுங் கொட்டிலை விட்டொரு வீடெய்தி நிற்கநிற்குங்
குணங்காட்டி யாண்ட குருதே சிகனங் குறச்சிறுமான்
பணங்காட்டு மல்குற் குருகுங் குமரன் பதாம்புயத்தை
வணங்காத் தலைவந்தி தெங்கே யெனக்கிங்ஙன் வாய்த்ததுவே.

……… சொற்பிரிவு ………

நிணம் காட்டும், கொட்டிலை விட்டொரு வீடெய்தி நிற்க நிற்கும்,
குணம் காட்டி ஆண்ட, குருதேசிகன், அங்குறச் சிறுமான்,
பணம் காட்டும், அல்குற் குருகும், குமரன் பதாம்புயத்தை,
வணங்காத் தலை வந்திதெங்கே, எனக்கு இங்ஙன் வாய்த்ததுவே.

பாடல் 43 … கவியால் கடல்

கவியாற் கடலடைத் தோன்மரு கோனைக் கணபணக்கட்
செவியாற் பணியணி கோமான் மகனைத் திறலரக்கர்
புவியார்ப் பெழத்தொட்ட போர்வேன் முருகனைப் போற்றியன்பாற்
குவியாக் கரங்கள்வந் தெங்கே யெனக்கிங்ஙன் கூடியவே.

……… சொற்பிரிவு ………

கவியாற் கடல் அடைத்தோன் மருகோனைக், கணபணக் கட்-
செவியாற் பணிஅணி கோமான் மகனைத், திறல் அரக்கர்
புவியார்ப்பு எழத் தொட்ட, போர்வேல் முருகனைப் போற்றி, அன்பாற்
குவியாக் கரங்கள், வந்து எங்கே எனக்கு இங்ஙன் கூடியவே.

பாடல் 44 … தோலால் சுவர்

தோலாற் சுவர்வைத்து, நாலாறு காலிற் சுமத்தி,யிரு
காலா லெழுப்பி வளைமுது கோட்டிக்கைந் நாற்றிநரம்
பாலார்க்கை யிட்டுத் தசைகொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால்
வேலாற் கிரிதொளைத் தோனிரு தாளன்றி வேறில்லையே.

……… சொற்பிரிவு ………

தோலாற் சுவர் வைத்து, நாலாறு காலில் சுமத்தி, இரு
காலால் எழுப்பி, வளைமுதுகோட்டி , கைநாற்றி, நரம்-
பால் ஆர்க்கை இட்டு, தசைகொண்டு மேய்ந்த, அகம் பிரிந்தால்
வேலாற் கிரி தொளைத்தோன், இருதாளன்றி வேறில்லையே.

பாடல் 45 … ஒரு பூதரும்

ஒருபூ தருமறி யாத்தனி வீட்டி லுரையுணர்வற்
றிருபூத வீட்டி லிராமலென் றான்னிரு கோட்டொருகைப்
பொருபூ தரமுரித் தேகாச மிட்ட புராந்தகற்குக்
குரு பூத வேலவ னிட்டூர சூர குலாந்தகனே.

……… சொற்பிரிவு ………

ஒரு பூதரும் அறியாத் தனி வீட்டில், உரை உணர்வற்றிரு
பூத வீட்டில் இராமல்’ என்றான், இருகோட்டு ஒருகைப்
பொரு பூதரம் உரித்து ஏகாசம் இட்ட புராந்தகற்குக்,
குரு பூதவேலவ, நிஷ்டூர, சூர குலாந்தகனே.

பாடல் 46. … நீ ஆன ஞான

நீயான ஞான விநோதந் தனையென்று நீயருள்வாய்
சேயான வேற்கந்த னேசெந்தி லாய்சித்ர மாதரல்குற்
றோயா வுருகிப் பருகிப் பெருகித் துவளுமிந்த
மாயா விநோத மநோதுக்க மானது மாய்வதற்கே.

……… சொற்பிரிவு ………

நீயான, ஞான விநோதம் தனை, என்று நீ அருள்வாய்,
சேய் ஆன வேல் கந்தனே, செந்திலாய், சித்ர மாதர் அல்குல்
தோயா, உருகிப் பருகிப் பெருகித் துவளும் இந்த,
மாயா விநோத மனோ துக்கமானது, மாய்வதற்கே.

பாடல் 47 … பத்தித் திருமுகம்

பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்
புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே.

……… சொற்பிரிவு ………

பத்தித் திருமுகம் ஆறுடன், பன்னிரு தோள்களுமாய்த்,
தித்தித்து இருக்கும் அமுது கண்டேன், செயல் மாண்டு அடங்கப்,
புத்திக் கமலத்து, உருகிப் பெருகிப், புவனம் எற்றித்,
தத்திக் கரைபுரளும், பரமானந்த சாகரத்தே.

பாடல் 48 … புத்தியை வாங்கி

புத்தியை வாங்கிநின் பாதாம் புயத்திற் புகட்டியன்பாய்
முத்தியை வாங்க அறிகின்றி லேன்முது சூர்நடுங்கச்
சத்தியை வாங்கத் தரமோ குவடு தவிடுபடக்
குத்திய காங்கேய னேவினை யேற்கென் குறித்தனையே.

……… சொற்பிரிவு ………

புத்தியை வாங்கி, நின் பாதாம் புயத்தில் புகட்டி, அன்பாய்
முத்தியை வாங்க அறிகின்றிலேன், முது சூர் நடுங்கச்,
சத்தியை வாங்கத் தரமோ, குவடு தவிடுபடக்,
குத்திய காங்கேயனே, வினையேற்கு, என் குறித்தனையே.

பாடல் 49 … சூரில் கிரியில்

சூரிற் கிரியிற் கதிர்வே லெறிந்தவன் தொண்டர்குழாஞ்
சாரிற் கதியன்றி வேறிலை காண் தண்டு தாவடிபோய்த்
தேரிற் கரியிற் பரியிற் றிரிபவர் செல்வமெல்லாம்
நீரிற் பொறியென் றறியாத பாவி நெடுநெஞ்சமே.

……… சொற்பிரிவு ………

சூரிற் கிரியில் கதிர் வேல் எறிந்தவன், தொண்டர்குழாம்
சாரிற், கதியன்றி வேறிலை காண், தண்டு தாவடி போய்த்,
தேரில் கரியிற் பரியிற் திரிபவர் செல்வம் எல்லாம்,
நீரில் பொறி என்றறியாத, பாவி நெடு நெஞ்சமே.

பாடல் 50 … படிக்கும் திருப்புகழ்

படிக்குந் திருப்புகழ் போற்றுவன் கூற்றுவன் பாசத்தினாற்
பிடிக்கும் பொழுதுவந் தஞ்லென் பாய்பெரும் பாம்பினின்று
நடிக்கும் பிரான்மரு காகொடுஞ் சூர னடுங்கவெற்பை
இடிக்குங் கலாபத் தனிமயி லேறு மிராவுத்தனே.

……… சொற்பிரிவு ………

படிக்கும் திருப்புகழ் போற்றுவன், கூற்றுவன் பாசத்தினால்
பிடிக்கும்பொழுது வந்து ‘அஞ்சல்’ என்பாய், பெரும்பாம்பினின்று
நடிக்கும் பிரான் மருகா, கொடுஞ்சூரன் நடுங்க, வெற்பை
இடிக்கும், கலாபத் தனிமயில் ஏறும் இராவுத்தனே.

பாடல் 51 … மலை ஆறு கூறு

மலையாறு கூறெழ வேல்வாங்கி னானை வணங்கியன்பின்
நிலையான மாதவஞ் செய்குமி னோநும்மை நேடிவருந்
தொலையா வழிக்குப் பொதிசோறு முற்ற துணையுங்கண்டீர்
இலையா யினும்வெந்த தேதா யினும்பகிர்ந் தேற்றவர்க்கே.

……… சொற்பிரிவு ………

மலையாறு கூறெழ, வேல்வாங்கினானை வணங்கி, அன்பின்
நிலையான மாதவம் செய்குமினோ, நும்மை நேடிவரும்
தொலையா வழிக்குப் பொதிசோறும், உற்றதுணையும் கண்டீர்,
இலையாயினும், வெந்ததேதாயினும், பகிர்ந்து ஏற்றவர்க்கே.

பாடல் 52 … சிகர அத்ரி கூறு

சிகராத்ரி கூறிட்ட வேலுஞ்செஞ் சேவலுஞ் செந்தமிழாற்
பகரார்வமீ பணி பாசசங் க்ராம பணாமகுட
நிகராட் சமபட்ச பட்சி துரங்க ந்ருபகுமரா
குகராட் சசபட்ச விட்சோப தீர குணதுங்கனே.

……… சொற்பிரிவு ………

சிகராத்ரி கூறிட்ட வேலும், செஞ் சேவலும், செந்தமிழாற்
பகர் ஆர்வம் ஈ, பணி பாச சங்க்ராம, பணா மகுட,
நிகராட்சம பட்ச பட்சி துரங்க ந்ருப குமரா,
குக ராட்சச பட்ச விட்சோப தீர, குணதுங்கனே.

பாடல் 53 … வேடிச்சி கொங்கை

வேடிச்சி கொங்கை விரும்புங் குமரனை மெய்யன்பினாற்
பாடிக் கசிந்துள்ள போதே கொடாதவர் பாதகத்தாற்
தேடிப் புதைத்துத் திருட்டிற் கொடுத்துத் திகைத்திளைத்து
வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே.

……… சொற்பிரிவு ………

வேடிச்சி கொங்கை விரும்பும் குமரனை, மெய் அன்பினாற்
பாடிக் கசிந்து, உள்ளபோதே கொடாதவர், பாதகத்தாற்
தேடிப்புதைத்துத், திருட்டில் கொடுத்துத், திகைத்திளைத்து,
வாடிக் கிலேசித்து, வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே.

பாடல் 54 … சாகைக்கும் மீண்டு

சாகைக்கு மீண்டு பிறக்கைக்கு மன்றித் தளர்ந்தவர்க்கொன்
றீகைக் கெனைவிதித் தாயிலை யேயிலங் காபுரிக்குப்
போகைக்கு நீவழி காட்டென்று போய்க்கடல் தீக்கொளுந்த
வாகைச் சிலைவளைத் தோன்மரு காமயில் வாகனனே.

……… சொற்பிரிவு ………

சாகைக்கும் மீண்டு பிறக்கைக்கும் அன்றி, தளர்ந்தவர்க்கு ஒன்று
ஈகைக்கு எனை விதித்தாய் இலையே, ‘இலங்காபுரிக்குப்
போகைக்கு நீ வழி காட்டென்று, போய்க்கடல் தீக்கொளுந்த
வாகைச்சிலை வளைத்தோன் மருகா, மயில்வாகனனே.

பாடல் 55 … ஆங்காரமும் அடங்கார்

ஆங்கா ரமுமடங் காரொடுங் கார்பர மாநந்தத்தே
தேங்கார் நினைப்பு மறப்பு மறார்தினைப் போதளவும்
ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே முருக னுருவங்கண்டு
தூங்கார் தொழும்பு செய்யா ரென்செய் வார்யம தூதருக்கே.

……… சொற்பிரிவு ………

ஆங்காரமும் அடங்கார், ஒடுங்கார், பரமானந்தத்தே
தேங்கார், நினைப்பு மறப்பும் அறார், தினைப்போதளவும்,
ஓங்காரத்து உள்ளொளிக்குள்ளே, முருகன், உருவம் கண்டு
தூங்கார், தொழும்பு செய்யார், என் செய்வார் யமதூதருக்கே.

பாடல் 56 … கிழியும்படி அடல்

கிழியும் படியடற் குன்றெறிந் தோன்கவி கேட்டுருகி
இழியுங் கவிகற் றிடாதிருப் பீரெரி வாய்நரகக்
குழியுந் துயரும் விடாய்ப்படக் கூற்றுவனுார்க் குச்செல்லும்
வழியுந் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே.

……… சொற்பிரிவு ………

கிழியும்படி, அடற்குன்று எறிந்தோன், கவி கேட்டு உருகி,
இழியும் கவி கற்றிடாது இருப்பீர், எரிவாய் நரகக்
குழியும், துயரும், விடாய்ப்படக் கூற்றுவன் ஊர்க்குச் செல்லும்,
வழியும் துயரும், பகரீர் பகரீர், மறந்தவர்க்கே.

பாடல் 57 … பொரு பிடியும்

பொருபிடி யுங்களி றும்விளை யாடும் புனச்சிறுமான்
தருபிடி காவல சண்முக வாவெனச் சாற்றிநித்தம்
இருபிடி சோறுகொண் டிட்டுண் டிருவிளை யோமிறந்தால்
ஒருபிடி சாம்பருங் காணாது மாய உடம்பிதுவே.

……… சொற்பிரிவு ………

பொரு பிடியும் களிறும் விளையாடும், புனச்சிறுமான்,
தரு பிடி காவல, சண்முகவா எனச், சாற்றி நித்தம்,
இருபிடி சோறு கொண்டு, இட்டு உண்டிரு, வினையோம் இறந்தால்,
ஒருபிடி சாம்பரும் காணாது, மாய உடம்பிதுவே.

பாடல் 58 … நெற்றாப் பசுங்கதிர்

நெற்றாப் பசுங்கதிர்ச் செவ்வேனல் காக்கின்ற நீலவள்ளி
முற்றாத் தனத்திற் கினிய பிரானிக்கு முல்லையுடன்
பற்றாக்கை யும்வெந்து சங்க்ராம வேளும் படவிழியாற்
செற்றார்க் கினியவன் தேவந்த்ர லோக சிகாமணியே.

……… சொற்பிரிவு ………

நெற்றாப் பசுங்கதிர், செவ்வேனல் காக்கின்ற, நீலவள்ளி
முற்றாத் தனத்திற்கினிய பிரான், இக்கு முல்லையுடன்
பற்றாக்கையும் வெந்து, சங்க்ராம வேளும் பட, விழியால்
செற்றார்க் கினியவன், தேவேந்திர லோக சிகாமணியே.

பாடல் 59. … பொங்கு ஆர வேலை

பொங்கார வேலையில் வேலைவிட் டோனருள் போலுதவ
எங்கா யினும்வரு மேற்பவர்க் கிட்ட திடாமல்வைத்த
வங்கா ரமுமுங்கள் சிங்கார வீடு மடந்தையருஞ்
சங்காத மோகெடு வீருயிர் போமத் தனிவழிக்கே.

……… சொற்பிரிவு ………

பொங்கார வேலையில், வேலை விட்டோன் அருள்போல, உதவ,
எங்காயினும் வரும், ஏற்பவர்க்கு இட்டது, இடாமல் வைத்த
வங்காரமும், உங்கள் சிங்கார வீடும், மடந்தையரும்
சங்காதமோ, கெடுவீர், உயிர்போம் அத்தனி வழிக்கே.

பாடல் 60 … சிந்திக்கிலேன்

சிந்திக் கிலேனின்று சேவிக் கிலேன்றண்டைச் சிற்றடியை
வந்திக் கிலேனொன்றும் வாழ்த்து கிலேன்மயில் வாகனனைச்
சந்திக் கிலேன்பொய்யை நிந்திக்கி லேலுண்மை சாதிக்கிலேன்
புந்திக் கிலேசமுங் காயக் கிலேசமும் போக்குதற்கே.

……… சொற்பிரிவு ………
சிந்திக்கிலேன், நின்று சேவிக்கிலேன், தண்டைச் சிற்றடியை
வந்திக்கிலேன், ஒன்றும் வாழ்த்துகிலேன், மயில்வாகனனைச்
சந்திக்கிலேன், பொய்யை நிந்திக்கிலேன், உண்மை சாதிக்கிலேன்,
புந்திக் கிலேசமும், காயக்கிலேசமும் போக்குதற்கே.

பாடல் 61 … வரை அற்று

வரையற் றவுணர் சிரமற்று வாரிதி வற்றச்செற்ற
புரையற்ற வேலவன் போதித் தவா, பஞ்ச பூதமுமற்
றுரையற் றுணர்வற் றுடலற் றுயிரற் றுபாயமற்றுக்
கரையற் றிருளற் றெனதற் றிருக்குமக் காட்சியதே.

……… சொற்பிரிவு ………

வரையற்று, அவுணர் சிரமற்று வாரிதி வற்றச் செற்ற
புரையற்ற வேலவன் போதித்தவா, பஞ்சபூதமும் அற்று,
உரை அற்று, உணர்வற்று, உடலற்று, உயிரற்று உபாயம் அற்று,
கரையற்று, இருளற்று, எனதற்று இருக்கும் அக்காட்சியதே.

பாடல் 62 … ஆலுக்கு அணிகலம்

ஆலுக் கணிகலம் வெண்டலை மாலை யகிலமுண்ட
மாலுக் கணிகலந் தண்ணந் துழாய்மயி லேறுமையன்
காலுக் கணிகலம் வானோர் முடியுங் கடம்புங்கையில்
வேலுக் கணிகலம் வேலையுஞ் சூரனும் மேருவுமே.

……… சொற்பிரிவு ………

ஆலுக்கணிகலம் வெண்டலைமாலை, அகிலம் உண்ட
மாலுக்கணிகலம், தண்ணம் துழாய், மயிலேறும் ஐயன்,
காலுக்கணிகலம், வானோர் முடியும், கடம்பும், கையில்,
வேலுக்கணிகலம், வேலையும் சூரனும் மேருவுமே.

பாடல் 63 … பாதித் திருவுரு

பாதித் திருவுருப் பச்சென் றவர்க்குத்தன் பாவனையைப்
போதித்த நாதனைப், போர்வேல னைச்சென்று, போற்றியுய்யச்
சோதித்த மெய்யன்பு பொய்யோ, அழுது தொழுதுருகிச்
சாதித்த புத்திவந் தெங்கே யெனக்கிங்ஙன் சந்தித்ததே.

……… சொற்பிரிவு ………

பாதித் திருவுரு, பச்சென்றவர்க்குத், தன் பாவனையைப்
போதித்த நாதனைப், போர்வேலனைச், சென்று, போற்றி, உய்யச்,
சோதித்த மெய்யன்பு பொய்யோ, அழுது தொழுது உருகிச்,
சாதித்த புத்தி வந்து, எங்கே, எனக்கு இங்ஙன் சந்தித்ததே.

பாடல் 64 … பட்டிக் கடாவில்

பட்டிக் கடாவில் வருமந்த காவுனைப் பாரறிய
வெட்டிப் புறங்கண் டலாதுவிடேன் வெய்ய சூரனைப்போய்
முட்டிப் பொருதசெவ் வேற்பெரு மாள்திரு முன்புநின்றேன்
கட்டிப் புறப்பட டாசத்தி வாளென்றன் கையதுவே.

……… சொற்பிரிவு ………

பட்டிக் கடாவில் வரும் அந்தகா, உனைப் பார் அறிய
வெட்டிப் புறங்கண்டலாது விடேன், வெய்ய சூரனைப்போய்,
முட்டிப் பொருத செவ் வேற் பெருமாள் திருமுன்பு நின்றேன்,
கட்டிப் புறப்படடா, சத்திவாள் என்றன் கையதுவே.

பாடல் 65 … வெட்டும் கடா

வெட்டுங் கடாமிசைத் தோன்றும் வெங்கூற்றன் விடுங் கயிற்றாற்
கட்டும் பொழுது விடுவிக்க வேண்டுங் கராசலங்கள்
எட்டுங் குலகிரி யெட்டும்விட் டோடவெட் டாதவெளி
மட்டும் புதைய விரிக்குங் கலாப மயூரத்தனே.

……… சொற்பிரிவு ………

வெட்டும் கடா மிசைத்தோன்றும், வெங்கூற்றன், விடும் கயிற்றாற்
கட்டும்பொழுது விடுவிக்கவேண்டும், கராசலங்கள்
எட்டும், குலகிரி எட்டும், விட்டோட வெட்டாத வெளி
மட்டும், புதைய விரிக்கும் கலாப மயூரத்தனே.

பாடல் 66 … நீர்க் குமிழிக்கு

நீர்க் குமிழிக்கு நிகரென்பர் யாக்கைநில் லாதுசெல்வம்
பார்க்கு மிடத்தந்த மின்போலு மென்பர் பசித்துவந்தே
ஏற்கு மவர்க்கிட வென்னினெங் கேனு மெழுந்திருப்பார்
வேற் குமரற் கன்பிலாதவர் ஞான மிகவுநன்றே.

……… சொற்பிரிவு ………

நீர்க் குமிழிக்கு நிகர் என்பர் யாக்கை, நில்லாது செல்வம்,
பார்க்கும் இடத்து, அந்த மின்போலும் என்பர், பசித்துவந்தே
ஏற்கும் அவர்க்கு, இடவென்னின், எங்கேனும் எழுந்திருப்பார்,
வேல் குமரற்கு, அன்பு இலாதவர் ஞானம் மிகவும் நன்றே.

பாடல் 67 … பெறுதற்கு அரிய

பெறுதற் கரிய பிறவியைப்பெற்றுநின் சிற்றடியைக்
குறுகிப் பணிந்து பெறக்கற் றிலேன்மத கும்பகம்பத்
தறுகட் சிறுகட் சங்க்ராம சயில சரசவல்லி
இறுகத் தழுவுங் கடகா சலபன் னிருபுயனே.

……… சொற்பிரிவு ………

பெறுதற்கரிய, பிறவியைப் பெற்று, நின் சிற்றடியைக்,
குறுகிப் பணிந்து பெறக் கற்றிலேன், மத கும்ப கம்பத்
தறுகண் சிறுகண் சங்கிராம சயில, சரசவல்லி,
இறுகத் தழுவும், கடகாசல, பன்னிரு புயனே.

பாடல் 68 … சாடும் சமர

சாடுஞ் சமரத் தனிவேன் முருகன் சரணத்திலே
ஓடுங் கருத்தை யிருத்தவல் லார்க்குகம் போய்ச்சகம்போய்ப்
பாடுங் கவுரி பவுரிகொண்டாடப் பசுபதிநின்
றாடும் பொழுது பரமா யிருக்குமதீதத்திலே.

……… சொற்பிரிவு ………

சாடும் சமரத் தனிவேல் முருகன், சரணத்திலே,
ஓடும் கருத்தை இருத்தவல்லார்க்கு, அகம் போய்ச் சகம்போய்,
பாடும் கவுரி பவுரிகொண்டாடப், பசுபதி நின்று
ஆடும் பொழுது, பரமாய் இருக்கும், அதீதத்திலே.

பாடல் 69 … தந்தைக்கு முன்னம்

தந்தைக்கு முன்னந் தனிஞான வாளொன்று சாதித்தருள்
கந்தச் சுவாமி யெனைத்தேற் றியபின்னர்க் காலன் வெம்பி
வந்திப் பொழுதென்னை யென்செய்ய லாஞ்சத்தி வாளொன்றினாற்
சிந்தத் துணிப்பன் தணிப்பருங் கோபத்ரி சூலத்தையே.

……… சொற்பிரிவு ………

தந்தைக்கு முன்னம், தனி ஞானவாள் ஒன்று சாதித்தருள்,
கந்தச் சுவாமி, எனைத் தேற்றிய பின்னர்க், காலன், வெம்பி
வந்திப்பொழுது என்னை என்செய்யலாம், சக்திவாள் ஒன்றினால்,
சிந்தத் துணிப்பன், தணிப்பரும் கோப த்ரிசூலத்தையே.

பாடல் 70 … விழிக்குத் துணை

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணை வடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.

……… சொற்பிரிவு ………

விழிக்குத் துணை, திரு மென்மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை, முருகாவெனும் நாமங்கள், முன்புசெய்த,
பழிக்குத் துணை, அவன் பன்னிரு தோளும், பயந்த, தனி
வழிக்குத் துணை, வடிவேலும், செங்கோடன் மயூரமுமே.

பாடல் 71 … துருத்தி எனும்படி

துருத்தி யெனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித்
தருத்தி யுடம்பை யொருக்கிலென் னாஞ்சிவ யோகமென்னுங்
குருத்தை யறிந்து முகமா றுடைக்குரு நாதன் சொன்ன
கருத்தை மனத்தி லிருத்துங்கண் டீர்முத்தி கைகண்டதே.

……… சொற்பிரிவு ………

துருத்தி எனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றி, முறித்து,
அருத்தி, உடம்பை ஒறுக்கிலென்னாம், சிவயோகம் என்னும்
குருத்தை அறிந்து, முகம் ஆறுடை குருநாதன் சொன்ன
கருத்தை, மனத்தில் இருத்தும் கண்டீர், முக்தி கைகண்டதே.

பாடல் 72 … சேந்தனைக் கந்தனை

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.

……… சொற்பிரிவு ………

சேந்தனைக் கந்தனைச், செங்கோட்டு வெற்பனைச், செஞ்சுடர்வேல்
வேந்தனைச், செந்தமிழ் நூல் விரித்தோனை, விளங்கு வள்ளி
காந்தனைக், கந்தக் கடம்பனைக், கார் மயில் வாகனனைச்,
சாந்துணைப்போதும், மறவாதவர்க்கு, ஒரு தாழ்வில்லையே.

பாடல் 73 … போக்கும் வரவும்

போக்கும் வரவு மிரவும் பகலும் புறம்புமுள்ளும்
வாக்கும் வடிவு முடிவுமில் லாதொன்று வந்துவந்து
தாக்கு மநோலயந் தானே தருமெனைத் தன்வசத்தே
ஆக்கு மறுமுக வாசொல் லொணாதிந்த ஆனந்தமே.

……… சொற்பிரிவு ………

போக்கும் வரவும், இரவும் பகலும், புறம்பும் உள்ளும்,
வாக்கும் வடிவும், முடிவுமில்லாதது ஒன்று வந்துவந்து
தாக்கும், மனோலயம் தானே தரும், எனைத் தன் வசத்தே
ஆக்கும், அறுமுகவா, சொல்லொணாதிந்த ஆனந்தமே.
பாடல் 74 … அராப்புனை

அராப்புனை வேணியன் சேயருள் வேண்டு மவிழ்ந்த அன்பாற்
குராப்புனை தண்டையந் தாள்தொழல் வேண்டுங்கொடிய ஐவர்
பராக்கறல் வேண்டும் மனமும் பதைப்பறல் வேண்டு மேன்றால்
இராப்பக லற்ற இடத்தே யிருக்கை யெளிதல்லவே.

……… சொற்பிரிவு ………

அராப்புனை வேணியன் சேய் அருள் வேண்டும், அவிழ்ந்த அன்பாற்
குராப்புனை தண்டையம் தாள் தொழல் வேண்டும், கொடிய ஐவர்
பராக்கறல் வேண்டும், மனமும் பதைப்பறல் வேண்டும் என்றால்,
இராப் பகல் அற்ற இடத்தே, இருக்கை எளிதல்லவே.

பாடல் 75 … படிக்கின்றிலை

படிக்கின் றிலைபழ நித்திரு நாமம் படிப்பவர்தாள்
முடிக்கின் றிலைமுரு காவென் கிலைமுசி யாமலிட்டு
மிடிக்கின் றிலைபர மாநந்த மேற்கொள விம்மிவிம்மி
நடிக்கின் றிலைநெஞ்ச மேதஞ்ச மேது நமக்கினியே.

……… சொற்பிரிவு ………

படிக்கின்றிலை பழநித் திருநாமம், படிப்பவர் தாள்
முடிக்கின்றிலை, முருகா வென்கிலை, முசியாமல் இட்டு
மிடிக்கின்றிலை, பரமானந்தம் மேற்கொள, விம்மிவிம்மி
நடிக்கின்றிலை, நெஞ்சமே, தஞ்சமேது நமக்கினியே.

பாடல் 76 … கோடாத வேதனுக்கு

கோடாத வேதனுக் கியான்செய்த குற்றமென் குன்றெறிந்த
தாடாள னேதென் தணிகைக் குமரநின் றண்டையந்தாள்
சூடாத சென்னியு நாடாத கண்ணுந் தொழாதகையும்
பாடாத நாவு மெனக்கே தெரிந்து படைத்தனனே.

……… சொற்பிரிவு ………

கோடாத வேதனுக்கு யான் செய்த குற்றமென், குன்றெறிந்த
தாள் ஆளனே, தென் தணிகைக் குமர, நின் தண்டையம் தாள்,
சூடாத சென்னியும், நாடாத கண்ணும், தொழாத கையும்,
பாடாத நாவும், எனக்கே தெரிந்து படைத்தனனே.

பாடல் 77. … சேல் வாங்கு

சேல்வாங்கு கண்ணியர் வண்ணப் பயோதரஞ் சேரஎண்ணி
மால்வாங்கி யேங்கி மயங்காமல் வெள்ளி மலையெனவே
கால்வாங்கி நிற்குங் களிற்றான் கிழத்தி கழுத்திற்கட்டு
நூல்வாங்கி டாதன்று வேல்வாங்கி பூங்கழல் நோக்கு நெஞ்சே.

……… சொற்பிரிவு ………

சேல் வாங்கு கண்ணியர், வண்ணப் பயோதரம் சேர எண்ணி,
மால் வாங்கி ஏங்கி மயங்காமல், வெள்ளிமலையெனவே,
கால்வாங்கி நிற்கும், களிற்றான் கிழத்தி, கழுத்திற் கட்டு
நூல்வாங்கிடாது, அன்று வேல்வாங்கி, பூங்கழல் நோக்கு நெஞ்சே.

பாடல் 78. … கூர்கொண்ட வேலனை

கூர்கொண்ட வேலனைப் போற்றாம லேற்றங்கொண் டாடுவிர்காள்
போர்கொண்ட கால னுமைக்கொண்டு போமன்று பூண்பனவுந்
தார்கொண்ட மாதரு மாளிகை யும்பணச் சாளிைகையும்
ஆர்கொண்டு போவரை யோகெடு வீர்நும் மறிவின்மையே.

……… சொற்பிரிவு ………

கூர்கொண்ட வேலனைப் போற்றாமல், ஏற்றம் கொண்டாடுவிர்காள்,
போர்கொண்ட காலன், உமைக் கொண்டுபோம் அன்று பூண்பனவும்,
தார்கொண்ட மாதரும், மாளிகையும், பணச் சாளிகையும்,
ஆர்கொண்டுபோவார், ஐயோ கெடுவீர் நும், அறிவின்மையே.

பாடல் 79. … பந்தாடு மங்கையர்

பந்தாடு மங்கையர் செங்கயற் பார்வையிற் பட்டுழலுஞ்
சிந்தா குலந்தனைத் தீர்த்தருள் வாய்செய்ய வேல்முருகா
கொந்தார் கடம்பு புடைசூழ் திருத்தணிக் குன்றினிற்குங்
கந்தா இளங்கும ராஅம ராவதி காவலனே.

……… சொற்பிரிவு ………

பந்தாடு மங்கையர் செங்கயற் பார்வையிற் பட்டுழலும்
சிந்தா குலம்தனைத் தீர்த்தருள்வாய், செய்யவேல் முருகா,
கொந்தார் கடம்பு புடைசூழ், திருத்தணிக் குன்றினில் நிற்கும்
கந்தா, இளம்குமரா, அமராவதி காவலனே.

பாடல் 80 … மாகத்தை முட்டி

மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றவன்வந் தாலென்முன்னே
தோகைப் புரவியிற் றோன்றிநிற் பாய்சுத்த நித்தமுத்தித்
த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந் தகனைத் த்ரியம்பகனைப்
பாகத்தில் வைக்கும் பரமகல் யாணிதன் பாலகனே.

……… சொற்பிரிவு ………

மாகத்தை முட்டிவரும், நெடுங்கூற்றன் வந்தால், என் முன்னே
தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய், சுத்த, நித்த, முத்தித்
தியாகப் பொருப்பைத், திரிபுராந்தகனை, திரியம்பகனைப்,
பாகத்தில் வைக்கும், பரம கல்யாணி தன், பாலகனே.

பாடல் 81 … தாரா கணம்

தாரா கணமெனுந் தாய்மார் அறுவர் தருமுலைப்பால்
ஆரா துமைமுலைப் பாலுண்ட பால னரையிற்கட்டுஞ்
சீராவுங் கையிற் சிறுவாளும் வேலுமென் சிந்தையவே
வாரா தகலந்த காவந்த போதுயிர் வாங்குவனே.

……… சொற்பிரிவு ………

தாரா கணமெனும் தாய்மார் அறுவர் தரும் முலைப்பால்
ஆராது, உமை முலைப்பால் உண்ட பாலன், அரையிற்கட்டும்
சீராவும், கையில் சிறுவாளும், வேலும், என் சிந்தையவே,
வாராதகல் அந்தகா, வந்தபோதுயிர் வாங்குவனே.

பாடல் 82 … தகட்டில் சிவந்த

தகட்டிற் சிவந்த கடம்பையு நெஞ்சையுந் தாளிணைக்கே
புகட்டிப் பணியப் பணித்தரு ளாய் புண்ட ரீகனண்ட
முகட்டைப் பிளந்து வளர்ந்திந்த்ர லோகத்தை முட்ட வெட்டிப்
பகட்டிற் பொருதிட்ட நிட்டூர சூர பயங்கரனே.

……… சொற்பிரிவு ………

தகட்டிற் சிவந்த கடம்பையும், நெஞ்சையும், தாள் இணைக்கே,
புகட்டிப் பணியப், பணித்தருளாய், புண்டரீகன் அண்ட
முகட்டைப் பிளந்து, வளர்ந்து, இந்த்ரலோகத்தை முட்ட, வெட்டிப்,
பகட்டில் பொருதிட்ட, நிட்டூர சூர, பயங்கரனே.

பாடல் 83 … தேங்கிய அண்டத்து

தேங்கிய அண்டத் திமையோர் சிறைவிடச் சிற்றடிக்கே
பூங்கழல் கட்டும் பெருமாள் கலாபப் புரவிமிசை
தாங்கி நடப்ப முறிந்தது சூரன் தளந்தனிவேல்
வாங்கிய னுப்பிடக் குன்றங்க ளெட்டும் வழிவிட்டவே.

……… சொற்பிரிவு ………

தேங்கிய அண்டத்து இமையோர் சிறைவிடச், சிற்றடிக்கே,
பூங்கழல் கட்டும் பெருமாள், கலாபப் புரவிமிசை
தாங்கி நடப்ப, முறிந்தது சூரன் தளம், தனிவேல்
வாங்கி அனுப்பிடக், குன்றங்கள் எட்டும், வழிவிட்டவே.

பாடல் 84 … மைவரும் கண்டத்தர்

மைவருங் கண்டத்தர் மைந்தகந் தாவென்று வாழ்த்துமிந்தக்
கைவருந் தொண்டன்றி மற்றறி யேன்கற்ற கல்வியும் போய்ப்
பைவருங் கேளும் பதியுங் கதறப் பழகிநிற்கும்
ஐவருங் கைவிட்டு மெய்விடும் போதுன் னடைக்கலமே.

……… சொற்பிரிவு ………

மைவரும் கண்டத்தர் மைந்த, ‘கந்தா’ என்று வாழ்த்தும் இந்தக்,
கைவரும் தொண்டன்றி மற்றறியேன், கற்ற கல்வியும் போய்ப்,
பைவரும் கேளும் பதியும் கதறப், பழகி நிற்கும்
ஐவரும் கைவிட்டு, மெய்விடும்போது, உன் அடைக்கலமே.

பாடல் 85 … காட்டில் குறத்தி

காட்டிற் குறத்தி பிரான்பதத் தேகருத் தைப்புகட்டின்
வீட்டிற் புகுதன் மிகவெளிதே விழிநாசிவைத்து
மூட்டிக் கபாலமூ லாதார நேரண்ட மூச்சையுள்ளே
ஓட்டிப் பிடித்தெங்கு மோடாமற் சாதிக்கும் யோகிகளே.

……… சொற்பிரிவு ………

காட்டிற் குறத்தி பிரான் பதத்தே, கருத்தைப் புகட்டின்,
வீட்டிற் புகுதன் மிக எளிதே, விழி நாசிவைத்து,
மூட்டிக், கபால மூலாதார நேர் அண்ட மூச்சை, உள்ளே
ஓட்டிப்பிடித்து, எங்கும் ஓடாமற் சாதிக்கும், யோகிகளே.

பாடல் 86 … வேலாயுதன் சங்கு

வேலா யுதன்சங்கு சக்ராயு தன்விரிஞ் சன்னறியாச்
சூலா யுதன் தந்த கந்தச் சுவாமி சுடர்க்குடுமிக்
காலா யுதக்கொடி யோனரு ளாய கவசமுண்டென்
பாலா யுதம்வரு மோயம னோடு பகைக்கினுமே.

……… சொற்பிரிவு ………

வேலாயுதன், சங்கு சக்ராயுதன், விரிஞ்சன் அறியாச்
சூலாயுதன், தந்த, கந்தச்சுவாமி சுடர்க்குடுமிக்
கால் ஆயுதக், கொடியோன், அருள் ஆய கவசம் உண்டு, என்
பால் ஆயுதம் வருமோ, யமனோடு பகைக்கினுமே.

பாடல் 87 … குமரா சரணம்

குமரா சரணஞ் சரணமென் றண்டர் குழாந்துதிக்கும்
அமரா வதியிற் பெருமாள் திருமுக மாறுங்கண்ட
தமராகி வைகுந் தனியான ஞான தபோதனர்க்கிங்
கெமராசன் விட்ட கடையேடு வந்தினி யென்செயுமே.

……… சொற்பிரிவு ………

‘குமரா, சரணம் சரணம் என்று, அண்டர் குழாம் துதிக்கும்,
அமராவதியிற் பெருமாள், திருமுகம் ஆறும் கண்ட
தமராகி வைகும், தனியான, ஞான தபோதனர்க்கு, இங்கு,
எமராசன் விட்ட கடை ஏடு, வந்து இனி, என் செயுமே.

பாடல் 88 … வணங்கித் துதிக்க

வணங்கித் துதிக்க அறியா மனித ருடனிணங்கிக்
குணங்கெட்ட துட்டனை யீடேற்றுவாய் கொடி யுங்கழுகும்
பிணங்கத் துணங்கை யலகை கொண்டாடப் பிசிதர்தம்வாய்
நிணங்கக்க விக்ரம வேலா யுதந்தொட்ட நிர்மலனே.

……… சொற்பிரிவு ………

வணங்கித் துதிக்க அறியா, மனிதருடன் இணங்கிக்,
குணம் கெட்ட துட்டனை ஈடேற்றுவாய், கொடியும்,கழுகும்
பிணங்கத், துணங்கை, அலகை கொண்டாடப், பிசிதர்தம் வாய்
நிணம் கக்க, விக்ரம வேலாயுதம் தொட்ட நிர்மலனே.

பாடல் 89 … பங்கேருகன் எனை

பங்கே ருகனெனைப் பட்டோ லையிலிடப் பண்டுதளை
தங்காலி லிட்ட தறிந்தில னோதனி வேலெடுத்துப்
பொங்கோதம் வாய்விடப் பொன்னஞ் சிலம்பு புலம்பவரும்
எங்கோ னறியி னினிநான் முகனுக் கிருவிலங்கே.

……… சொற்பிரிவு ………

பங்கேருகன் எனைப் பட்டோலையில் இட, பண்டு தளை
தம் காலில் இட்டது அறிந்திலனோ, தனி வேல் எடுத்துப்,
பொங்கோதம், வாய்விடப், பொன்னம் சிலம்பு, புலம்ப வரும்,
எங்கோன், அறியின், இனி நான்முகனுக்கு இரு விலங்கே.

பாடல் 90 … மாலோன் மருகனை

மாலோன் மருகனை, மன்றாடி மைந்தனை, வானவர்க்கு
மேலான தேவனை, மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச்,சென்று கண்டுதொழ
நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே.

……… சொற்பிரிவு ………

மாலோன் மருகனை, மன்றாடி மைந்தனை, வானவர்க்கு
மேலான தேவனை, மெய்ஞ்ஞான தெய்வத்தை, மேதினியில்,
சேலார் வயற்பொழில் செங்கோடனைச், சென்று, கண்டு தொழ,
நாலாயிரம் கண் படைத்திலனே, அந்த நான்முகனே.

பாடல் 91 … கருமான் மருகனை

கருமான் மருகனைச் செம்மான் மகளைக் களவுகொண்டு
வருமா குலவனைச் சேவற்கைக் கோளனை வானமுய்யப்
பொருமா வினைச்செற்ற போர்வேல னைக்கன்னிப் பூகமுடன்
தருமா மருவுசெங் கோடனை வாழ்த்துகை சாலநன்றே.

……… சொற்பிரிவு ………

கருமான் மருகனைச், செம்மான் மகளைக் களவுகொண்டு
வருமா குலவனைச், சேவற் கைக்கோளனை, வானம் உய்யப்,
பொரு மாவினைச் செற்ற போர் வேலனைக், கன்னிப் பூகமுடன்,
தருமா மருவு செங்கோடனை, வாழ்த்துகை சால நன்றே.

பாடல் 92 … தொண்டர் கண்டு

தொண்டர்கண் டண்டிமொண் டுண்டிருக் குஞ்சுத்த ஞானமெனுந்
தண்டையம் புண்டரி கந்தருவாய் சண்ட தண்டவெஞ்சூர்
மண்டலங் கொண்டுபண் டண்டரண் டங்கொண்டு மண்டிமிண்டக்
கண்டுருண் டண்டர்விண் டோடாமல் வேல்தொட்ட காவலனே.

……… சொற்பிரிவு ………

தொண்டர் கண்டு, அண்டி மொண்டு, உண்டிருக்கும், சுத்த ஞானமெனும்
தண்டையம் புண்டரிகம் தருவாய், சண்ட தண்ட வெஞ்சூர்,
மண்டலம் கொண்டு, பண்டண்டர் அண்டம் கொண்டு, மண்டி மிண்டக்
கண்டுருண்டு, அண்டர் விண் டோடாமல், வேல்தொட்ட காவலனே.

பாடல் 93 … மண் கமழ் உந்தி

மண்கம ழுந்தித் திருமால் வலம்புரி யோசையந்த
விண்கமழ் சோலையும் வாவியுங் கேட்டது வேலெடுத்துத்
திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளைத் திருவரையிற்
கிண்கிணி யோசை பதினா லுலகமுங் கேட்டதுவே.

……… சொற்பிரிவு ………

மண் கமழ் உந்தித் திருமால், வலம்புரி ஓசை அந்த
விண் கமழ் சோலையும், வாவியும் கேட்டது, வேலெடுத்துத்,
திண்கிரி சிந்த விளையாடும், பிள்ளைத், திருவரையிற்
கிண்கிணி ஓசை, பதினால் உலகமும் கேட்டதுவே.

பாடல் 94. … தெள்ளிய ஏனலில்

தெள்ளிய ஏனலிற் கிள்ளையைக் கள்ளச் சிறுமியெனும்
வள்ளியை வேட்டவன் தாள்வேட் டிலைசிறு வள்ளைதள்ளித்
துள்ளிய கெண்டையைத் தொண்டையைத் தோதகச் சொல்லைநல்ல
வெள்ளிய நித்தில வித்தார மூரலை வேட்டநெஞ்சே.

……… சொற்பிரிவு ………

தெள்ளிய, ஏனலிற் கிள்ளையைக், கள்ளச் சிறுமி எனும்,
வள்ளியை வேட்டவன் தாள் வேட்டிலை, சிறுவள்ளை தள்ளித்
துள்ளிய, கெண்டையைத், தொண்டையைத், தோதகச் சொல்லை, நல்ல,
வெள்ளிய, நித்தில, வித்தார மூரலை, வேட்ட நெஞ்சே.

பாடல் 95 … யான் தான் எனும்

யான்றானெ னுஞ்சொல் லிரண்டுங் கெட்டாலன்றி யாவருக்குந்
தோன்றாது சத்தியந் தொல்லைப் பெருநிலஞ் சூகரமாய்க்
கீன்றான் மருகன் முருகன் க்ருபாகரன் கேள்வியினாற்
சான்றாரு மற்ற தனிவெளிக் கேவந்து சந்திப்பதே.

……… சொற்பிரிவு ………

யான் தான் எனும் சொல் இரண்டும் கெட்டாலன்றி, யாவருக்கும்
தோன்றாது சத்தியம், தொல்லைப் பெருநிலம் சூகரமாய்க்
கீன்றான் மருகன், முருகன், கிருபாகரன், கேள்வியினால்
சான்றாருமற்ற, தனி வெளிக்கே, வந்து சந்திப்பதே.

பாடல் 96 … தடம் கொற்ற வேள்

தடக்கொற்ற வேள்மயி லேயிடர் தீரத் தனிவிடில் நீ
வடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக்
கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்
திடர்க்கப் புறத்துந் திசைக்கப் புறத்துந் திரிகுவையே.

……… சொற்பிரிவு ………

தடக் கொற்ற வேள் மயிலே, இடர்தீரத் தனிவிடில் நீ,
வடக்கிற் கிரிக்கப் புறத்து நின் தோகையின் வட்டமிட்டுக்,
கடற்கப் புறத்தும், கதிர்க்கப் புறத்தும், கனக சக்ரத்
திடர்க்கப் புறத்தும், திசைக்கப் புறத்தும், திரிகுவையே.

பாடல் 97 … சேலில் திகழ்

சேலிற் றிகழ்வயற் செங்கோடை வெற்பன் செழுங்கலபி
ஆலித் தநந்தன் பணாமுடி தாக்க அதிர்ந்ததிர்ந்து
காலிற் கிடப்பன மாணிக்க ராசியுங் காசினியைப்
பாலிக்கு மாயனுஞ் சக்ரா யுதமும் பணிலமுமே.

……… சொற்பிரிவு ………

சேலிற் திகழ் வயல் செங்கோடை வெற்பன், செழுங்கலபி
ஆலித்தநந்தன் பணாமுடி தாக்க, அதிர்ந்து அதிர்ந்து,
காலில் கிடப்பன, மாணிக்க ராசியும், காசினியைப்
பாலிக்கும் மாயனும், சக்ராயுதமும், பணிலமுமே.

பாடல் 98 … கதிதனை ஒன்றை

கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன்கந்த வேல்முருகா
நதிதனை யன்னபொய் வாழ்விலன் பாய்நரம் பாற்பொதிந்த
பொதிதனை யுங்கொண்டு திண்டாடு மாறெனைப் போதவிட்ட
விதிதனை நொந்துநொந் திங்கேயென் றன்மனம் வேகின்றதே.

……… சொற்பிரிவு ………

கதிதனை ஒன்றையும் காண்கின்றிலேன், கந்தவேல் முருகா,
நதிதனை அன்ன பொய் வாழ்வில், அன்பாய் நரம்பாற் பொதிந்த
பொதிதனையும் கொண்டு, திண்டாடுமாறு, எனைப் போதவிட்ட,
விதிதனை நொந்துநொந்து, இங்கே என்தன் மனம், வேகின்றதே.

பாடல் 99 … காவிக் கமல

காவிக் கமலக் கழலுடன் சேர்த்தெனைக் காத்தருளாய்
தூவிக் குலமயில் வாகன னேதுணை யேதுமின்றித்
தாவிப் படரக் கொழுகொம் பிலாத தனிக்கொடிபோல்
பாவித் தனிமனந் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே.

……… சொற்பிரிவு ………

காவிக் கமலக் கழலுடன் சேர்த்தெனைக் காத்தருளாய்,
தூவிக்குல மயில்வாகனனே, துணை ஏதும் இன்றித்,
தாவிப்படரக் கொழுகொம்பிலாத தனிக்கொடிபோல்,
பாவித் தனிமனம், தள்ளாடி வாடிப், பதைக்கின்றதே.

பாடல் 100 … இடுதலைச் சற்றும்

இடுதலைச் சற்றுங் கருதேனைப் போதமி லேனையன்பாற்
கெடுதலி லாத்தொண் டரிற்கூட் டியவா, கிரெளஞ்ச வெற்பை
அடுதலைச் சாதித்த வேலோன் பிறவி யறவிச்சிறை
விடுதலைப் பட்டது விட்டது பாச வினைவிலங்கே.

……… சொற்பிரிவு ………

இடுதலைச் சற்றும் கருதேனைப், போதம் இலேனை, அன்பாற்
கெடுதல் இலா, தொண்டரில் கூட்டியவா, கிரௌஞ்ச வெற்பை
அடுதலைச் சாதித்த வேலோன், பிறவி அற, இச் சிறை
விடுதலைப்பட்டது, விட்டது, பாசவினை விலங்கே.

பாடல் 101 … சலம் காணும்

சலங்காணும் வேந்தர்தமக்கு மஞ்சார் யமன் சண்டைக்கஞ்சார்
துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயணுகார்
கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தனன்னூல்
அலங்கார நூற்று ளொருகவிதான்கற் றறிந்தவரே.

……… சொற்பிரிவு ………

சலங்காணும் வேந்தர்தமக்கும் அஞ்சார், யமன் சண்டைக்கு அஞ்சார்
துலங்கா நரகக்குழி அணுகார், துட்ட நோய் அணுகார்,
கலங்கார், புலிக்கும் கரடிக்கும் யானைக்கும், கந்த நன்னூல்,
அலங்கார நூற்றுள், ஒருகவிதான், கற்றறிந்தவரே.

பாடல் 102 … திருவடியும் தண்டையும்

திருவடி யுந்தண்டை யுஞ்சிலம் புஞ்சிலம் பூடுருவப்
பொருவடி வேலுங் கடம்புந் தடம்புயம் ஆறிரண்டும்
மருவடி வான வதனங்க ளாறும் மலர்க்கண்களுங்
குருவடி வாய்வந்தென் னுள்ளங் குளிரக் குதிகொண்டவே.

……… சொற்பிரிவு ………

திருவடியும் தண்டையும் சிலம்பும், சிலம்பு ஊடுருவப்
பொரு வடிவேலும், கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும்,
மருவடிவான வதனங்கள் ஆறும், மலர்க் கண்களும்,
குருவடிவாய் வந்து, என் உள்ளம் குளிரக், குதிகொண்டவே.

பாடல் 103 … இராப் பகலற்ற

இராப்பக லற்ற இடங்காட்டி யானிருந் தேதுதிக்கக்
குராப்புனை தண்டையந் தாளரு ளாய்கரி கூப்பிட்டநாள்
கராப்படக் கொன்றக் கரிபோற்ற நின்ற கடவுள்மெச்சும்
பராக்ரம வேல நிருதசங் கார பயங்கரனே.

……… சொற்பிரிவு ………

இராப் பகலற்ற இடம்காட்டி, யான் இருந்தே துதிக்கக்,
குராப்புனை தண்டையம் தாள் அருளாய், கரிகூப்பிட்ட நாள்,
கராப்படக் கொன்ற, கரிபோற்ற நின்ற கடவுள் மெச்சும்,
பராக்ரம வேலா, நிருத சங்காரா, பயங்கரனே.

பாடல் 104 … செங்கேழடுத்த

செங்கே ழடுத்த சினவடி வேலுந் திருமுகமும்
பங்கே நிரைத்தநற் பன்னிரு தோளும் பதுமமலர்க்
கொங்கே தரளஞ் சொரியுஞ்செங் கோடைக் குமரனென
எங்கே நினைப்பினும் அங்கேயென் முன்வந் தெதிர்நிற்பனே.

……… சொற்பிரிவு ………

செங்கேழ் அடுத்த சினவடிவேலும், திருமுகமும்,
பங்கே நிரைத்த நற் பன்னிருதோளும், பதுமமலர்க்
கொங்கே தரளம் சொரியும், செங்கோடைக் குமரன் என,
எங்கே நினைப்பினும், அங்கே என்முன் வந்து, எதிர் நிற்பனே.

பாடல் 105 … ஆவிக்கு மோசம்

ஆவிக்கு மோசம் வருமா றறிந்துன் னருட்பதங்கள்
சேவிக்க என்று நினைக்கின்றி லேன்வினை தீர்த்தருளாய்
வாவித் தடவயல் சூழுந் திருத்தணி மாமலைவாழ்
சேவற் கொடியுடை யானே யமர சிகாமணியே.

……… சொற்பிரிவு ………

ஆவிக்கு மோசம் வருமாறு அறிந்து, உன் அருட்பதங்கள்,
சேவிக்க என்று நினைக்கின்றிலேன், வினைதீர்த்தருளாய்,
வாவித் தட வயல் சூழும், திருத்தணி மாமலைவாழ்,
சேவற் கொடி உடையானே, அமர சிகாமணியே.

பாடல் 106 … கொள்ளித் தலையில்

கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமென்றன்
உள்ளத் துயரை யொழித்தரு ளாயொரு கோடிமுத்தந்
தெள்ளிக் கொழிக்குங் கடற்செந்தின் மேவிய சேவகனே
வள்ளிக்கு வாய்த்தவ னேமயிலேறிய மாணிக்கமே.

……… சொற்பிரிவு ………

கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும், என்தன்
உள்ளத் துயரை, ஒழித்தருளாய், ஒருகோடி முத்தம்
தெள்ளிக் கொழிக்கும், கடல் செந்திற்மேவிய சேவகனே,
வள்ளிக்கு வாய்த்தவனே, மயில் ஏறிய மாணிக்கமே.

பாடல் 107 … சூலம் பிடித்து

சூலம் பிடித்தெம பாசஞ் சுழற்றித் தொடர்ந்துவருங்
காலன் தனக்கொரு காலுமஞ் சேன் கடல் மீதெழுந்த
ஆலங் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்
வேலுந் திருக்கையு முண்டே நமக்கொரு மெய்த்துணையே.

……… சொற்பிரிவு ………

சூலம் பிடித்து, எம பாசம் சுழற்றித், தொடர்ந்துவரும்
காலன் தனக்கு ஒரு காலும் அஞ்சேன், கடல்மீது எழுந்த,
ஆலம் குடித்த பெருமான் குமாரன், அறுமுகவன்
வேலும், திருக்கையும் உண்டே, நமக்கொரு மெய்த்துணையே.

அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி ஒலிப்பதிவு (Kandar anubhoothi audio)

5 replies on “அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் ஒலிப்பதிவு (Kandar alankaram audio)”

ரொம்ப அழகா மெனக்கெட்டு சொற்களைப் பிரித்து, பொருள் விளங்குமாறு அளித்த பொக்கிஷம் இது ! எத்தனை.முயற்சி, உழைப்பு !! கந்தரலங்காரம் ஒர் பொக்கிஷம்! பொருளுணர்ந்து சொன்னால் அற்புதம் ! பிரித்துச் சொன்னதால் பொருள் அருமையாப் புரிகிறது ! Tireless service ! Shows your interest & total dedication ! தமிழ் சமஸ்கிருதம் வார்த்தைகளின் பதம் பிரிக்கறது சாதாரண விஷயம் இல்லை , ரொம்ப பொறுமை வேணும் அர்த்தம் சிதையாமல் செய்ய !
பெரியவா அனுகிரகம் பரிபூர்ணமா இருக்கு!
இதனை பாராயணம் செய்வதால் சகல மேன்மைகளும் உண்டாகும் என்பதில் ஐயமில்லை !!
முருகன் திருவடி சரணம்.

🙏 🙏 Hats off for your efforts. Splendid service. Requires lots of patience to split the pathams. Thank you.
May Lord Muruga, Mahaperiyava, Sri Sar, Sri Swamigal bless you in your services.
🌹

சத்தியமாவது
சரவணபவமே 🙏
ஓம் நமசிவாய வாழ்க 🙏
ஓம் குமரகுருதாச
குருப்யோ நம: 🙏
ஓம் அருணகிரி
நாதப்பெருமானே போற்றி 🙏
திருச்சிற்றம்பலம் 🙏திருச்சிற்றம்பலம் 🙏திருச்சிற்றம்பலம் 🙏

Leave a Reply to syncwithdeepCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.