அருணகிரிநாதர் அருளிய பாடல்களில் திருவகுப்புகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. பெண் மையல் போக வேண்டும், மரண பயம் போக வேண்டும் போன்ற பிரார்த்தனைகள் முடிந்த ஒரு அநுபூதி நிலையில், முருகப் பெருமானை, அவனுடைய திருப்பாதங்களை, வேலை, மயிலை, காமாக்ஷி அம்பாளை, வள்ளியம்மை பெற்ற அனுக்ரஹத்தை, போற்றும் தன்னிகரற்ற துதிப் பாடல்களாக இவை அமைந்துள்ளன. இவற்றை அதிகமாக பாராயணம் பண்ண வேண்டும் என்ற ஆவலில், முதலில் விநாயகர் அகவலையும், பின்னர் ஆறு திருவகுப்புப் பாடல்களையும், அடுத்து அறுபடை வீடு பஞ்ச பூத ஸ்தலங்கள் திருப்புகழ், நடுவில் கந்தரனுபூதி, முடிவில் திருவெழுக்கூற்றிருக்கை பாடலையும் அமைத்து, இடையிடையில் திருப்புகழ், அநுபூதி, அலங்காரப் பாடல்களையும் சேர்த்து ஒரு பத்ததி போல இந்த புத்தகம் அமைந்துள்ளது. இதை ஸ்வாமிகளிடம் நிறைய முறை படித்து இருக்கிறேன். அவரும் மீண்டும் மீண்டும் விரும்பி கேட்டு, நிறைய ஞானக் கருத்துகளை பகிர்ந்து கொள்வார். அவற்றில் சிலவற்றை புத்தகத்தின் முடிவில் சேர்த்து இருக்கிறேன். படித்து இன்புறுவோம்.