Categories
Stothra Parayanam Audio

திருப்பள்ளியெழுச்சி ஒலிப்பதிவு; Thiruppalliezhuchi audio mp3

திருப்பள்ளியெழுச்சி பத்து பாடல்கள் ஒலிப்பதிவு

திருப்பள்ளியெழுச்சி

1.போற்றி ! என் வாழ்முதலாகிய பொருளே !

      புலர்ந்தது; பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு

ஏற்றி, நின் திருமுகத்து எமக்கருள் மலரும்

      எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்;

சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்

      திருப்பெருந்துறை உறை சிவபெருமானே !

ஏற்றுயர் கொடியுடையாய் ! எனையுடையாய் !

      எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

2. அருணண் இந்திரன் திசை அணுகினன்; இருள்போய்

      அகன்றது; உதயம் நின் மலர்த்திரு முகத்தின்

கருணையின் சூரியன் எழ எழ, நயனக்

      கடிமலர் மலர, மற்று அண்ணல் அங்கண்ணாம்

திரள்நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் !

      திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !

அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே !

      அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே !

3. கூவின பூங்குயில்; கூவின கோழி;

      குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ;

ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து

      ஒருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்

தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் !

      திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !

யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய் !

      எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

4. இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;

     இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;

துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ;

      தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;

      திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !

என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்

      எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

5. பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால்

      போக்கிலன் வரவிலன்” என நினைப் புலவோர்

கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்

      கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்

சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா !

      சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்து

ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்

      எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !

6. பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்

      பந்தனை வந்தறுத்தார்; அவர் பலரும்

மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்

      வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா !

செப்புறு கமலங் கண் மலரும் தண்வயல் சூழ்

      திருப்பெருந் துறையுறை சிவபெருமானே !

இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்

      எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !

7. “அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு

      அரிதென, எளிதென”, அமரரும் அறியார்,

“இது அவன் திருவுரு; இவன் அவன்” எனவே;

      எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்

மதுவளர் பொழில் திருஉத்தர கோச

      மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா !

எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்;

      எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே !

8. முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்;

      மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் !

பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்

      பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே !

செந்தழல் புரை திருமேனியுங் காட்டித்

      திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி

அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்;

      ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !

9. விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா

      விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்

மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே !

      வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம்

கண்ணகத்தே நின்று களிதரு தேனே !

      கடலமுதே ! கரும்பே ! விரும்படியார்

எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய் !

      எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே !

10. “புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம்

      போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி

சிவன் உய்யக் கொள்கின்றவாறு” என்று நோக்கித்

      திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம்

அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்

      படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்

அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் !

      ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.