Categories
Subramanya Bhujangam

ஸுப்ரமண்ய புஜங்கம் – நான்காவது ஸ்லோகம் – முக்தி தரும் முருக தரிசனம்


ஸுப்ரமண்ய புஜங்கம் நான்காவது ஸ்லோகம் (9 min audio file. Same as the script below)

நேற்றைக்கு ,

मयूराधिरूढं महावाक्यगूढं मनोहारिदेहं महच्चित्तगेहम् ।

महीदेवदेवं महावेदभावं महादेवबालं भजे लोकपालम् ॥ ३

மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம்

மனோஹாரிதேஹம் மஹத்சித்த கேஹம் |

மஹீதேவதேவம் மஹாவேத பாவம்

மஹாதேவ பாலம் பஜே லோகபாலம் ||

அப்படீங்கிற அழகான ஸ்லோகத்தை பார்த்தோம். இன்னைக்கு,

यदा सन्निधानं गता मानवा मे भवाम्भोधिपारं गतास्ते तदैव ।

इति व्यञ्जयन्सिन्धुतीरे य आस्ते तमीडे पवित्रं पराशक्तिपुत्रम् ॥ ४॥

யதா ஸந்நிதானம் கதாமானவா மே

பவாம் போதிபாரம் கதாஸ்தே ததைவ |

இதி வ்யஞ்ஜயன் ஸிந்து தீரேய ஆஸ்தே

தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம் ||

அப்படீன்னு ஒரு ஸ்லோகம், முருகப் பெருமானோட சன்னிதி விசேஷத்தை சொல்றது. ஆச்சார்யாள், திருச்செந்துர்ல கடற்கரையில, முருகப் பெருமானை தரிசனம் பண்ணி ஸ்தோத்ரம் பண்ண ஆரம்பிக்கிறார். அப்போ அவருக்கு ‘முருகப் பெருமான் எதுக்கு இந்த கடற்கரையில குடி கொண்டு இருக்கார்?’ அப்படீன்னு ஒரு ஸந்தேஹம் வந்ததாம்.

புராணங்கள்ல என்ன வரதுன்னா, சூரபத்மன் கடலுக்குள்ள வீரமஹேந்திர பட்டணம்ன்னு ஒண்ணை கட்டிண்டு அங்க வசிக்கிறான். அப்போ ஸுப்ரமண்ய ஸ்வாமி, இந்த கடற்கரையில ஒரு படை வீடு அமைச்சு, அந்த சூரபத்மனை போரிட்டு ஜெயிச்சார். அதனால இங்கயே குடியிருக்கார்ன்னு ஸ்கந்த புராணத்துல வர்றது. ஆனா, ஆச்சார்யாள் சொல்றார்,

‘யதா’ எப்பொழுது, ‘மானவா’ மனிதர்கள், ‘மே ஸந்நிதானம் கதாஹா’, என்னுடைய இந்த சந்நிதியை வந்து அடைகிறார்களோ, ‘தே’ அந்த மனிதர்கள், ‘ததைவ’ அப்பொழுதே,  ‘பவாம்போதி பாரம் கதாஹா’ ஸம்ஸாரம் என்னும் சமுத்திரத்தின் அக்கரையை அடைந்தவர்களாக ஆவார்கள், ‘இதி வ்யஞ்ஜயன்’ ன்னு ஒரு விஷயத்தை புரிய வெச்சுண்டு, சூசனை பண்ணிண்டு, ‘ஸிந்து தீரே’ இப்படி கடற்கரையிலே ‘ய ஆஸ்தே’ எந்த பகவான் இருக்காரோ, பூரண சான்னித்தியதோடு விளங்குகிறாரோ, ‘பவித்ரம்’ மஹா பவித்ரமானவரும் ‘பராசக்தி புத்ரம்’ பராசக்தியின் புத்திரரும் ஆன அந்த ஸுப்ரமண்யரை ‘ஈடே’ நான் ஸ்தோத்ரம் பண்றேன், ன்னு இந்த ஸ்லோகம்.

அதாவது, ஆச்சார்யாள் சொல்ற காரணம் என்னன்னா, “உங்களுக்கு ஸ்கந்தகிரி-ன்னு அழகான ஒரு இடத்தை கைலாசத்துக்கு பக்கத்துல விஸ்வகர்மா நிர்மாணம் பண்ணி கொடுத்து இருக்கான். அப்பாவோட கைலாசம் இருக்கு, அம்மாவோட மணித்வீபம் இருக்கு. ஆனா இந்த கடற்கரையில ஏன் இருக்கேள் ன்னு நான் தெரிஞ்சுண்டுட்டேன். “பக்தர்கள் என்னை வந்து தர்சனம் பண்ணின மாத்திரத்தில், பிறப்பு இறப்பு முதலிய துக்கங்கள் கொண்ட இந்த, சம்சார பந்தத்தில்  இருந்து அவாளை கரை சேர்ப்பேன். அவாளை பரமானந்த பரிதர்களாக ஆக்குவேன்” ன்னு “என்னை வந்து திருச்செந்தூர்ல தர்சனம் பண்ணா, ஒரு ஸ்ரமமும் இல்லாம முக்தர்களா ஆயிடுவா”, ன்னு காண்பிக்கறதுக்காகத் தான் இங்க நின்னுண்டு இருக்கேள். அப்படீன்னு சொல்லி முருகப் பெருமானுடைய அபார கருணையையும் அந்த திருச்செந்தூர் க்ஷேத்ரத்தோட மஹிமையும் சொல்றார்.

இப்படி ஆசார்யாள் நம்மளை கொஞ்சம் கொஞ்சமாக ஆற்றுப் படுத்தறார். இந்த ஸுப்ரமண்ய புஜங்கத்துடைய பெருமை என்னென்னா அதோட நிர்வாஹம். ஸ்வாமி தர்சனம் பண்ணின ஆசார்யாள் முக்தர் ஆகி விடுறார். “இப்படி நீங்க சுலபமா எனக்கு முக்தி கொடுத்தேளே, உங்களுக்கு நான் எப்படி நன்றி பண்ணுவேன்?” ன்னு சொல்லி, அவர் ஒரு அழகான ஒரு ஸ்தோத்ரம் பண்ணறார். அது தான் இந்த  ஸுப்ரமண்ய புஜங்கம்.

எல்லாராலேயும் எல்லா நேரத்துலேயும் கிளம்பி திருச்செந்தூர் போக முடியுமா? நாம எங்க இருக்கோமோ அங்கேயே இந்த ஸுப்ரமண்ய புஜங்கத்தை பாராயணம் பண்ணினா,  அங்கேயே அந்த ஸுப்ரமண்ய தரிசனமும், திருச்செந்தூர் க்ஷேத்ரத்துல இருக்கிற அந்த புண்யமும் பலனும்  நமக்கு கிடைச்சுடும். அப்படி ஒரு அனுக்கிரஹத்தை ஆச்சார்யாள் பண்றார். இது ஸ்வாமிகளுடைய ஒரு  பாங்கு. அவர் மட்டுமல்ல. மஹான்கள் எல்லாம் சொன்னது தான். ஸ்வாமிகள் அதை stress-பண்ணி சொல்லுவார், “நந்ததி மம ஹுருதி காசன மந்திரயந்தீ நிரந்தரம் காஞ்சீம்’ அப்படீன்னு மூகபஞ்ச சதி, ஆர்யா சதகம் அம்பத்தி ரெண்டாவது ஸ்லோகம், ‘காசன மந்திரயந்தீ நிரந்தரம் காஞ்சீம் ‘ காஞ்சிபுரத்தில், ஒரு மந்திரத்துல, ஒரு கோவில்ல, நிரந்தரமா காமாக்ஷி குடி இருக்கா, அப்படீன்னு சொல்றா. ஆனா ‘நந்ததி மம ஹுருதி’  என் மனத்தில் அவள் மிகவும் சந்தோஷமாக வசிக்கிறாள்ன்னு மூக கவி சொல்றார். இந்த மூகபஞ்ச சதியை படிச்சா அங்க காமாக்ஷி இருக்கா, ராமாயணத்தை படிச்சா அங்க ராமர் இருக்கார் ன்னு ஸ்வாமிகள் சொல்லுவார். அந்த மாதிரி, இந்த ஸுப்ரமண்ய புஜங்கத்தை எங்கே பாராயணம் பண்ணினாலும், அங்கே திருச்செந்தூரில்  ஸுப்ரமண்யர் சன்னதியில் என்ன அனுக்கிரஹம் கிடைக்குமோ, அது கிடைக்கும்ன்னு ஸ்வாமிகள் சொல்வார்.

ஆனாலும் முடிஞ்ச போது ஸுப்ரமண்ய ஸ்வாமியை அந்த க்ஷேத்ரத்திலேயே போய் நாம தர்சனம் பண்ணனும். எங்களுடைய அப்பா திருநெல்வேலியைச் சேர்ந்தவர். அதனால திருச்செந்தூர் முருகப் பெருமான் எங்களுக்கு குல தெய்வம். குழந்தைகளுக்கெல்லாம் முடி இறக்கறதுக்கு, அப்படி இப்படி ஒரு இருபது வாட்டி போயிருப்போம். அந்த க்ஷேத்ரத்துக்கு போனா அந்த ஸன்னிதியோட சந்தோஷம் தனி தான். அதைத் தான் இந்த மஹானும் உணர்ந்து சொல்றார்.

இந்த இடத்துல ‘பராசக்தி புத்ரம்’ ன்னு சொல்றார். எனக்கு தோணித்து, இப்படி சன்னிதில வந்து நின்ன உடனே தன் பக்தர்களை முக்தர்களாக ஆக்கணும்னா, அவ்வளோ கருணை முருகப் பெருமானுக்கு எங்கயிருந்து வந்ததுன்னா, அவர் பராசக்தி புத்ரனா இருக்கறதுனால வந்தது அப்படீன்னு எனக்கு சந்தோஷமாக தோண்றது. அந்த

भवानि त्वं दासे मयि वितर दृष्टिं सकरुणामिति स्तोतुं वाञ्छन् कथयति भवानि त्वमिति यः ।

तदैव त्वं तस्मै दिशसि निजसायुज्यपदवीं मुकुन्दब्रह्मेन्द्रस्फुटमकुटनीराजितपदाम् ॥

‘பவானி த்வம் தாஸே மயி விதர திருஷ்டிஸ் ஸகருணாம்

இதி ஸ்தோதும் வாஞ்ச²ன் கத²யதி ப⁴வானி த்வமிதி ய: ।

ததை³வ த்வம் தஸ்மை தி³ஶஸி நிஜஸாயுஜ்யபத³வீம்

முகுந்த³ப்³ரஹ்மேந்த்³ரஸ்பு²டமகுடனீராஜிதபதா³ம் ॥

ன்னு ஒரு ஸ்லோகம் இருக்கு சௌந்தர்ய லஹரில, ‘பவானி த்வம்’ ஹே பவானி, பவனுடைய மனைவியே, ‘தாஸே மயி’ தாஸனான என்னிடத்திலே, உன்னுடைய கருணை கூர்ந்த கடாக்ஷத்தை காண்பிக்க வேண்டும் என்று, ஸ்தோத்ரம் பண்ண விரும்பி, ஒரு பக்தன் வந்து, ‘பவானித்வம்’ அப்படீன்னு ஆரம்பிச்சானாம். ஸம்ஸ்க்ருதத்துல, ‘பவானி’ ன்னா ஆக விரும்புகிறேன் ன்னு ஒரு அர்த்தம், ‘த்வம் பவானி’ ன்னா நீயாக ஆக விரும்புகிறேன், னு சொல்றான் என்று அம்பாள் நினைச்சுண்டு அவனுக்கு ‘நிஜ சாயுஜ்ய பதவீம்’, தானாகவே ஆகும்படியா, அம்பாளாகவே அந்த பக்தனை ஆக்கிட்டாளாம், அவ்வளோ அபார கருணை, ன்னு அங்கே ஆதி சங்கரர் சொல்றார். அப்பேற்பட்ட பராசக்தி புத்ரனா இருக்கறதுனால தான், இவரும் தன் ஸன்னிதியில் வந்து நின்னவாளுக்கு மோக்ஷத்தை கொடுத்துடுறார், முக்தர்களா ஆக்கிடுறார், அவாளை ஸம்ஸார பாந்ததுலேர்ந்து விடுவிச்சுடுறார், ன்னு இந்த ஸ்லோகத்துல ஆச்சார்யாள் சொல்றார்.

அருணகிரிநாதர், நிறைய அம்பாள் பரமா சொல்லுவார். அப்படி வரும் போதெல்லாம் மடமடமட ன்னு அம்பாளோட நாமாவளியெல்லாம்  அடுக்கி இப்பேற்பட்ட அம்பாளுடைய குழந்தைன்னு சொல்வார். ‘நாம பாராயண ப்ரீதா’ ன்னு அம்பாளுக்கு ஒரு பேர் இருக்கு இல்லையா! அந்த மாதிரி திருப்புகழை எடுத்தாலே அம்பாளுடைய  நாமங்கள்  அழகழகா இருக்கும். அதுல ஒன்றை சொல்லிட்டு இன்னைக்கு பூர்த்தி பண்ணிக்கிறேன். யுவதி, பவதி, பகவதி, மதுர வசனி, பைரவி, கௌரி, உமையாள், த்ரிஸுலதரி, வனபஜை, மதுபதி, அமலை, விஜயை, திரிபுரை, புனிதை, வனிதை, அபினவை, அனகை, அபிராம நாயகி தன் மதலை, மலைகிழவன், அனுபவன், அபயன் உபய சதுர் மறையின் நடுமுடிவில்  மணநாறு சீரடியே’ அப்படீன்னு சீர்பாத வகுப்பு-ன்னு ஒண்ணு இருக்கு அதோட கடைசி வரிகள். அப்படி அந்த பராசக்தி புத்ரனா இருக்கறதுனால முருகப் பெருமான், அவ்வளோ கருணையினால அவரை வணங்குபவர்களுக்கு  மோக்ஷத்தை அளிக்கிறார்.

यदा सन्निधानं गता मानवा मे

भवाम्भोधिपारं गतास्ते तदैव ।

इति व्यञ्जयन्सिन्धुतीरे य आस्ते

तमीडे पवित्रं पराशक्तिपुत्रम् ॥ ४॥

யதா ஸந்நிதானம் கதாமானவா மே

பவாம் போதிபாரம் கதாஸ்தே ததைவ

இதி வ்யஞ்ஜயன் ஸிந்து தீரேய ஆஸ்தே

தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம்

“இந்த கருணைக்கு பிரதியாக என்னால என்ன பண்ண முடியும்? நான் ‘ஈடே’ ன்னா ஸ்தோத்ரம் பண்றேன்ன்னு அர்த்தம். இப்பேற்பட்ட இந்த கருணா மூர்த்தியை நான் ஸ்தோத்ரம் பண்றேன்ன்னு பீடிகை போட்டு, நம்மளை அந்த திருச்செந்தூருக்கு அழைச்சுண்டு வந்து இருக்கார். அடுத்தடுத்த ஸ்லோகங்கள்ல அந்த  க்ஷேத்ரத்தோட மஹிமை, ஸ்வாமியோட பாதத்துலேர்ந்து கேசம் வரைக்கும், ரூப வர்ணனை பண்ணிட்டு, ‘என் முன்னாடி வந்து நில்லுங்கள்’ ன்னு வேண்டிண்டு, அதுக்கப்பறம் சில ப்ரார்த்தனைகள், இந்த ஸ்தோத்திரத்துல அப்படி ஒரு நிர்வாகம் பண்ணியிருக்கார்.

நாளைக்கு அஞ்சாவது ஸ்லோகத்தை பார்ப்போம்.

வெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹரோ ஹரா.

Series Navigation<< ஸுப்ரமண்ய புஜங்கம் – மூன்றாவது ஸ்லோகம் – வேதப் பொருளாக விளங்கும் முருகன்ஸுப்ரமண்ய புஜங்கம் – ஐந்தாவது ஸ்லோகம் – முருக தரிசனம் மனக் கவலைகளை போக்கும் >>

One reply on “ஸுப்ரமண்ய புஜங்கம் – நான்காவது ஸ்லோகம் – முக்தி தரும் முருக தரிசனம்”

அழகான ஸ்லோகம். அருமையான விளக்கம் 🙏

“எப்பொழுது மனிதர்கள் என்னுடைய சந்நிதியை வந்து அடைகிறார்களோ அவர்கள் ‘பவாம்போதிபாரம் கதா:’ – ‘ஸம்ஸார ஸாகரத்தையே கடந்து விடுவார்கள்’ என்று சூசனை பண்ணிக்கொண்டு கடற்கரையிலேயே வசிக்கிறார் திருச்செந்தூர் ஸ்வாமி”என்று ஆசார்யாள் சொல்கிறார்.

அருணகிரிநாதர் கந்தர் அந்தாதியில் ‘தித்த வித்தார’ என்னும் பாடலில் ” செந்தில் ஆண்டவர், க்ருபை என்னும் நதியை உள்ளத்தில் நிரப்பி, பல துன்பங்களைத் தருகின்ற பிறப்பாகிய அக்னியை அவியச் செய்து, ஒப்பற்ற மோக்ஷம் அடைய செய்தார்.” என்கிறார். இங்கே ஸம்ஸாரத்தை அக்னியாக வர்ணிக்கிறார். ஸ்வாமி கருணா ஸாகரமாக இருந்து கொண்டு அந்த அக்னியை அவியச் செய்தார் என்று தன்னுடைய அநுபவத்தை சொல்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.