Categories
Subramanya Bhujangam

ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி ஐந்தாவது ஸ்லோகம் – நோய்கள் எனை நலியாதபடி உன தாள்கள் அருள்வாயே

ஸுப்ரமண்ய புஜங்கம் இருபத்தி ஐந்தாவது ஸ்லோகம் (8 min audio file. Same as the script above)

ஸுப்ரமண்ய புஜங்கத்துல 23வது ஸ்லோகத்துலயும், 24வது ஸ்லோகத்துலயும், ‘என்னுடைய மனக் கவலைகள், மனோ வியாதிகளை எல்லாம் போக்கணும் முருகா’ன்னு வேண்டிண்டார். இன்னிக்கு 25வது ஸ்லோகம்.

अपस्मारकुष्टक्षयार्शः प्रमेह ज्वरोन्मादगुल्मादिरोगा महान्तः ।

पिशाचाश्च सर्वे भवत्पत्रभूतिं विलोक्य क्षणात्तारकारे द्रवन्ते ॥२५॥

அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ப்ரமேஹ

ஜ்வரோன்மாத குல்மாதிரோஹான் மஹாந்த: |

பிஷாசாஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்

விலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே ||

அப்படின்னு ஒரு ஸ்லோகம். இந்த ஸ்லோகத்துல அபஸ்மாரம், குஷ்டம், க்ஷயார்சம், ப்ரமேஹம், ஜ்வரம்,குல்மாதி ரோகா: .. இத்தனை ரோஹங்களைச் சொல்றார்.

வலிப்பு, குஷ்டம், க்ஷயம், சுவாச ரோகம், மேஹ ரோகம், ஜ்வரம், சித்த பிராந்தி, வயிற்று வலி இப்படிப் பல விதமான வியாதிகள் உடம்பைப் படுத்தறது. மனசுல இருக்கிற கவலைகளாவது அது பாட்டுக்கு இருக்கும். நாம காரியங்கள் பண்ணிண்டு இருக்கலாம். உடம்பைப் படுத்தி கீழ தள்ளிடுத்துன்னா, வாழ்க்கையே அர்த்தம் இல்லாம இருக்கும். அதற்கப்புறம் உடம்பையும் வெச்சுண்டு, மனசையும் உற்சாகப் படுத்திண்டு காரியங்கள் பண்றதுக்குள்ள ரொம்ப திணற வேண்டியிருக்கும். அப்படி உடம்புக்கு வர்ற வியாதிகளை எல்லாம் போக்கிக்கிறதுக்கு ஒரு உபாயம் இருக்கு. அது என்னன்னா, திருச்செந்தூர்ல பன்னீர் இலைல வெச்சு ஒரு விபூதி கொடுக்கறா. அந்த விபூதியை நெத்தியில இட்டுண்டு, உடம்பெல்லாம் பூசிண்டா, அப்படி சொல்றதே அதிகப்படிங்கறார். ‘பவத் பத்ர பூதிம் விலோக்ய’ இந்த பத்ர பூதியைக் கண்ணால பார்த்த மாத்திரத்திலேயே பூத ப்ரேத பிசாசங்கள், ப்ரம்ம ராக்ஷசர்கள், இன்னும் எல்லா வியாதிகளும், ஒரு க்ஷணத்தில் ஓடி மறைந்து விடுகின்றன. ‘க்ஷணாத் த்ரவந்தே ‘ ன்னு சொல்றார். அந்த பன்னீர் இலைல வச்சு கொடுக்கற விபூதிக்கு அவ்வளவு மகிமை. முதல்ல சொல்லும் போது ‘தாரகாரே’ – ‘தாரகனுக்கு எதிரியான ஸுப்ரமண்ய ஸ்வாமியே! உன்னுடைய கோவில்ல பன்னீர் இலைல வெச்சு கொடுக்கற விபூதியை இட்டுண்டா, எல்லா விதமான வியாதிகளும்போய்டும்’ அப்படின்னு சொல்றார்.

வேதங்கள் எல்லாம் சேர்ந்து தங்களுடைய ‘ஸுமனஸ்’னால அழகழகான வாசனைப் புஷ்பங்களை எல்லாம் முருகனுடைய பாதத்துல போடணும்ன்னு ஆசைப் பட்டு ஒரு வ்ருக்ஷ ரூபமா ஸ்வாமி சன்னிதியில வந்து இருக்காம். அதைத்தான் பன்னீர் வ்ருக்ஷம்ன்னு சொல்றா. அந்த பன்னீர் வ்ருக்ஷத்தோட கிளைகள் எல்லாம் வேத சாகைகள். அந்த வ்ருக்ஷத்தோட இலைகள் எல்லாம் வைதீக மந்திரங்கள். அந்த வைதீக மந்திரத்தில ப்ரணவ ஸ்வரூபமாகிய ஸ்வாமி சம்பந்தப்பட்ட விபூதியை வச்சு கொடுக்கறாதனால, அதை நாம இட்டுண்டா எல்லா உபாதைகளும் போய்டறது. ரொம்ப ஆரோக்யத்தோட தீர்க்காயுசா இருப்பா அப்படின்னு சொல்றார்.

தேதியூர் சாஸ்த்ரிகள், புராணத்திலிருந்து எடுத்து இன்னொரு கதையும் சொல்லியிருக்கார். விஷ்வாமித்ர மஹரிஷி ராமச்சந்திர மூர்த்தியைக் கூட்டிண்டுகாட்டுக்குப் போகும் போது தாடகா வதம் பண்ணுன்னு சொல்லி காரயிதாவா இருந்தாராம். அதாவது ஒரு கார்யம் பண்ணுன்னு தூண்டி விடறது. ஒரு ஸ்தீரி வதம் பண்றதுக்கு தூண்டி விட்டதனால அவருக்கு உடம்புக்கு வந்துடுத்து. அவர் எத்தனையோ முயற்சி பண்ணினார். அஸ்வினி தேவர்களாலக் கூட அவரை குணப் படுத்த முடியல. அப்போ அவரோட கனவுல ராமரே வந்து ‘நீங்க ஸ்ரீஜயந்திபுரம் என்கிற திருச்செந்தூருக்குப் போய், முருகப் பெருமானுடைய விபூதியை வாங்கி இட்டுக்கோங்கோ’ அப்படின்னு சொன்னார். அதே மாதிரி விஷ்வாமித்ர மஹரிஷி வந்து அந்த பன்னீர் இலையில் விபூதியை வாங்கி இட்டுண்ட உடனே அவருக்கு எல்லா வியாதிகளும் போய்டுத்து அப்படின்னு ஒரு புராணக் கதை சொல்லியிருக்கார்.

நமக்கு சென்னைக்குப் பக்கத்தில திருத்தணி இருக்கு. திருத்தணி முருகரையும் பவரோக வைத்யநாத பெருமாள் ன்னு சொல்லுவா. (‘நிலையாத சமுத்திரமான’ எனத் தொடங்கும் திருப்புகழ்). வியாதிகள் போகணும்ன்னு திருத்தணி முருகன் மேல அருணகிரி நாதருடைய ஒரு திருப்புகழ் பாடல் இருக்கு. அதைப் படிச்சா எல்லா வியாதிகளும் நிவர்த்தி ஆகும் அப்படின்னு நம்பிக்கை. அந்தத் திருப்புகழைப் படிக்கிறேன்.

இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி …… விடமே

நீரிழிவு விடாத தலைவலி சோகை யெழுகள மாலை …… யிவையோடே

பெருவயிறீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு …… முளநோய்கள்

பிறவிகள் தோறு மெனை நலியாத படியுன தாள்கள் …… அருள்வாயே

வருமொரு கோடியசுரர் பதாதி மடிய அநேக …… இசைபாடி

வருமொரு கால வயிரவராட வடிசுடர் வேலை …… விடுவோனே

தருநிழல் மீதிலுறை முகிலூர்தி தருதிரு மாதின் …… மணவாளா

ஜலமிடை பூவினடுவினில் வீறு தணிமலை மேவு …… பெருமாளே.

‘நோய்கள் பிறவிகள் தோறும் எனை நலியாதபடி உன தாள்கள் அருள்வாயே!

ஜலமிடை பூவினடுவினில் வீறு தணிமலை மேவு பெருமாளே!’ ன்னு பாடல்.

ஸூப்ரமண்ய புஜங்கத்தைப் படிச்சா வியாதிகள் போகும், அப்படின்னு மஹா பெரியவா ரெண்டு மூணு இடத்தில ‘தெய்வத்தின் குரல்’ல சொல்லியிருக்கா. ‘உடம்பு ஸ்வஸ்தம் ஆகிறதுக்கு சுப்ரமண்ய புஜங்க பாராயணம்’ அப்படின்னு சொல்லியிருக்கா. இந்த முப்பத்து மூணு ஸ்லோகத்தையும் படிக்க நேரம் இல்லேன்னா கூட அந்த,

कुमारेशसूनो गुह स्कन्द सेनापते शक्तिपाणे मयूराधिरूढ ।

पुलिन्दात्मजाकान्त भक्तार्तिहारिन् प्रभो तारकारे सदा रक्ष मां त्वम् ॥१९॥

குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த ஸேனா

பதே சக்தி பாணே மயூரா திரூட |

புளிந்தாத்மஜாகாந்த பக்தார்த்தி ஹாரின்

ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷமாம் த்வம் ||

அப்படின்னு முருகப் பெருமானுடைய நாமங்கள் இருக்கக் கூடிய அந்த 19வது ஸ்லோகத்தை நிறைய ஆவர்த்தி பண்ணிட்டு விபூதியை இட்டுண்டா போதும். ஒரு வாட்டி திருச்செந்தூர் போகும் போது பன்னீர் இலையில கொடுக்கற விபூதியை வாங்கிண்டு வந்து நம்மாத்து விபூதியோட சேர்த்துக்க வேண்டியது, அந்த விபூதியை இந்த ஸ்லோகத்தைச் சொல்லி இட்டுண்டா வியாதிகள் எல்லாம் போய்டும். இந்த பில்லி சூன்யம் மாதிரி எந்தக் கவலையும் இருக்காது.

முருகனுக்கு ‘ஆறு’ங்கறது விசேஷமான நம்பர் என்கிறதனால ஆறு தடவை சொல்றேன்.

குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த ஸேனா

பதே சக்தி பாணே மயூரா திரூட |

புளிந்தாத்மஜாகாந்த பக்தார்த்தி ஹாரின்

ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷமாம் த்வம் || (6 தடவை)

ஆறு தடவை ஆகிவிட்டதா தெரியலை. இன்னொரு தடவை சொல்றேன். அதிகஸ்ய அதிகம் பலம்.

குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த ஸேனா

பதே சக்தி பாணே மயூரா திரூட |

புளிந்தாத்மஜாகாந்த பக்தார்த்தி ஹாரின்

ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷமாம் த்வம் ||

வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா

Series Navigation<< ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி நான்காவது ஸ்லோகம் – மனக்கவலை ஏதுமின்றி உனக்கடிமையே புரிந்துஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி ஆறாவது ஸ்லோகம் – தலையே நீ வணங்காய் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.