Categories
Govinda Damodara Swamigal

தேவேந்திர சங்க வகுப்பு


தரணியில் அரணிய முரண் இரணியன் உடல்தனை நக நுதிகொடு

சாடோங்கு நெடுங்கிரி ஓடேந்து பயங்கரி

தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை

தாதாம்புய மந்திர வேதாந்த பரம்பரை

சரிவளை விரிசடை எரிபுரை வடிவினள் சததள முகுளித

தாமாங்குசம் என்றிரு தாளாந்தர அம்பிகை

தருபதி சுரரொடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி

தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி

இரண கிரண மடமயில் ம்ருகமத புளகித இளமுலை இள

நீர் தாங்கி நுடங்கிய நூல்போன்ற மருங்கினள்

இறுகிய சிறுபிறை எயிறுடை யமபடர் எனதுயிர் கொளவரின்

யான் ஏங்குதல் கண்டெதிர் தான் ஏன்று கொளும் குயில்

இடுபலி கொடுதிரி இரவலர் இடர் கெட இடு மன கரதல

ஏகாம்பரை இந்திரை மோகாங்க சுமங்கலை

எழுதிய படமென இருளறு சுடரடி இணைதொழு மவுனிகள்

ஏகாந்த சுகந்தரு பாசாங்குச சுந்தரி

கரணமு மரணமு மலமொடு முடல்படு கடுவினை கெட நினை

காலாந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ்

கனலெரி கணபண குணமணி யணிபணி கனவளை மரகத

காசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள்

கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி கவுரி கமலை குழை

காதார்ந்த செழும் கழுநீர் தோய்ந்த பெருந்திரு

கரைபொழி திருமுக கருணையில் உலகெழு கடனிலை பெறவளர்

காவேந்திய பைங்கிளி மாசாம்பவி தந்தவன்

அரண் நெடு வட வரை அடியொடு பொடிபட அலைகடல் கெடஅயில்

வேல்வாங்கிய செந்தமிழ் நூலோன் குமரன்குகன்

அறுமுக னொருபதொ டிருபுயன் அபிநவன் அழகிய குறமகள்

தார்வேய்ந்த புயன் பகையா மாந்தர்கள் அந்தகன்

அடன்மிகு கடதட விகடித மதகளிற் அனவரதமும் அகலா

மாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில்

அதிபதி எனவரு பொருதிறல் முருகனை அருள்பட மொழிபவர்

ஆராய்ந்து வணங்குவர் தேவேந்திர சங்கமே.

இது அருணகிரிநாதர் அருளிச் செய்த தேவேந்திர சங்க வகுப்பு என்னும் ஒரு திருவகுப்பு. இதில் பதினாறு வரிகள் உள்ளன. பன்னிரண்டு வரிகள் அம்பாள் மேல். அதுவும் ஏகாம்பரை என்று வருவதனால் காமாக்ஷி அம்பாள் மேல் என்று என் எண்ணம். அடுத்த இரண்டு வரிகளில் அம்பாளிடமிருந்து வேல் வாங்கி சூரசம்ஹாரம் செய்த முருகப் பெருமானின் புகழ். பதினைந்தாவது வரியில் கணபதியை எப்போதும் தியானிப்பவர்கள் மனதில் முருகன் குடி கொள்கிறான் என்று கூறி பின் கடைசி வரியில், செந்திலில் நாயகனாக விளங்கும் முருகனை யார் வழிபடுகிறார்களோ, அவர்களை இந்திராதி தேவர்கள் வந்து நமஸ்கரிப்பார்கள் என்று சொல்கிறார்.

அனந்தசுப்ரமணியன் என்ற ஒரு பெரியவர். எங்கள் குடும்பதுடன் மிகவும் பிரியமாகப் பழகுபவர். ஸ்வாமிகளுக்கும் பிரியமானவர். ஸ்வாமிகளால் பரம சாது, பொறுமையே வடிவானவர் என்று பாராட்டப்படுபவர். காலையில் பல் தேய்த்த்திலிருந்து இரவு படுக்கப் போகும் வரை திருப்புகழை மந்திரமாகச் சொல்லிக் கொண்டே இருப்பவர்.

இந்தப் பெரியவர் ஒரு முறை எங்கள் வீட்டில் அனைவரையும் உட்கார வைத்து “இந்த தேவேந்திர சங்க வகுப்பு பாடுங்கோ” என்று அன்புடன் சொல்ல வைத்தார். அதிலிருந்து எங்காத்தில் எல்லாரும் இதை மிகவும் இஷ்டமுடன் சொல்லிக் கொண்டே இருப்போம். குழந்தைகளின் தாலாட்டு கூட இந்தப் பாட்டு தான். அப்படி இந்தப் பாட்டு ஒரு வரப்பிரசாதியாக எங்கள் குடும்பத்திற்கு ஒரு பெரிய ரக்ஷையாக விளங்கி வருகிறது.

இந்தப் பாடலைப் பற்றி இன்று ஒரு விஷயம் படித்தேன். வள்ளிமலை ஸ்வாமிகள் இதை இந்திராக்ஷி என்று சொல்லி இருக்கிறார்கள் என்று கேள்விப் பட்டு இருக்கிறேன். இன்று இது “ஷோடஷாக்ஷரீ” மந்திரத்திற்கு ஸமானம் என்று சொல்லி இருக்கிறார் என்று படித்தேன்.

அம்பாள் பஜனத்தில் ஷோடஷாக்ஷரீ மந்த்ரம் தான் எல்லாவற்றிற்கும் மேலான மந்திரம். அப்படிப்பட்ட மந்திரத்திற்குச் சமானமாக வள்ளிமலை ஸ்வாமிகள் இந்தப் பாட்டைச் சொல்லி இருக்கிறார். வள்ளி சன்மார்க்கத்தில் ஈடுபட்டிருந்த வள்ளிமலை ஸ்வாமிகள் தன்னை “வள்ளி பாத ஹ்ருதயன்” என்று சொல்லிக் கொள்வார்.

வள்ளியம்மையின் அனுக்கிரஹம் கிடைத்து விட்டால் முருகனின் அனுக்கிரஹம் கிடைத்து விடும் – எப்படி கோபிகைகள் காத்தியாயனியை வேண்டிக் கொண்டு கிருஷ்ணனை அடைந்தார்களோ அது போல்.

இப்படி வள்ளிமலை ஸ்வாமிகள் கூறிய இந்த விஷயத்தை இன்று படித்த போது நம் ஸ்வாமிகளும் “யந்திர தந்திர மந்திரங்கள் எல்லாம் வேண்டாம்; நாம் எளிமையாக ஒரு ஸ்தோத்திர பாராயணம் செய்து கொண்டு இருப்போம். ஒரு நாம ஜபத்தை நம்பிக் கொண்டு இருப்போம். அதுவே பக்தியை வளர்த்து பேரானந்தத்தை நமக்கு கொடுக்கும்” , என்று சொல்வது ஞாபகம் வந்தது.

வள்ளி சன்மார்க்கம் போல ஸ்வாமிகளும் “கோபிகைகளைப் போல் நாம் பக்தி செய்ய வேண்டும்” என்று சொல்வார். ஸ்வாமிகள் இது போன்ற விஷயங்களை ஆராய்ச்சி போன்று சொல்ல மாட்டார். தனது அனுபவத்தையே வார்த்தைகளால் சொல்வார். எங்காவது ‘மூக பஞ்சசதீ’ , ‘முகுந்த மாலா’ போன்ற கிரந்தங்களில் தன்னுடைய அனுபவம் இருந்தால் “இதைப் பாரு” என்று அதை எடுத்துச் சொல்வார். அது போல் பாகவதத்தில் கோபிகைகளின் பக்தி சொல்லப்பட்டதால் அது போல் நாமும் பக்தி செய்ய வேண்டும் என்பார்.

எப்படி என்றால் “கோபிகைகள் முதலில் கணவனைப் பார்த்துக் கொண்டு, குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு, வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டு, உலக விஷயங்களில் ஆசையோடு இருந்து கொண்டு  இருந்திருப்பார்கள். அப்போது கிருஷ்ணன் அவர்களுக்கிடையில் வந்து பிறந்து லீலைகள் செய்தான். அவனுடைய கதைகளைக் கேட்டு, அவனைப் பார்த்து, அவன் நாமத்தையே நினைத்துக் கொண்டிருந்ததால், பக்தி வளர்ந்து வளர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக காரியங்கள் கை நழுவிப் போய், மற்றவை செய்யும் போதும் கிருஷ்ணனையே நினைத்துக் கொண்திருந்து, கடைசியில் எல்லாக் காரியமும் நின்று போய், கிருஷ்ணனுடனேயே பேரானந்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தார்கள்”, என்று ஸ்வாமிகள் சொல்வார். மேலும் “இது போல் நாமும் ஸ்தோத்திரங்களையும் நாமத்தையும் நம்பி சொல்லிக் கொண்டு இருந்தோமானால் உலக விஷயங்கள் நம்மை விட்டு விடும். நாமும் பேரானந்தத்தில் திளைக்கலாம்”, என்று சொல்வார்.

இதற்கும் மேல் ஸ்வாமிகள் என்ன சொல்வாரென்றால் “மஹாபெரியவா மாதிரி ஒரு நிலையை அடையலாம்”!! என்பார். எனக்குத் தெரிந்து ஸ்வாமிகள் ஸத்தியசந்தர். தான் அனுபவிக்காத ஒன்றைச் சொல்ல மாட்டார். அப்படி இருக்கையில் அவர் “மஹாபெரியவா மாதிரி பேரானந்தத்துல திளைச்சுண்டு இருக்கலாம்”! என்று அடிக்கடி சொல்வார். அதைக் கேட்கும்போது இவர் அந்த பேரானந்தத்தில் இருக்கிறார் என்றே எனக்குத் தோன்றும்.

அப்படி பக்தியினுடைய பெருமை, நாம ஜபத்தினுடைய பெருமை, ஸ்தோத்திர பாராயணத்தினுடைய பெருமை. அவர் சொன்னதை நம்பிச் சொல்லிக் கொண்டிருந்தோனமானால் இப்பொழுது “அது வேணும், இது வேணும், இந்த கஷ்டம், அந்த கஷ்டம்” என்று மனதில் ஒடிக்கொண்டிருக்கும்போது கூடவே அவர் சொல்லும் பாராயணத்தையும் செய்து கொண்டிருக்கிறோம் என்ற நிலைமை மாறும். அவர் கூறி நம் காதில் “பாகவத பக்தி என்றால் என்ன? உத்தம பக்தி என்றால் என்ன?” என்பதும் விழுந்து இருக்கிறது. அந்த  பரிபூரண சாந்தியுடன் இருக்கக் கூடிய  நிலையை அவரிடம் பார்த்தும் இருக்கிறோம். இந்த ஸ்தோத்திர பாராயணத்தினால் நமக்கும் அந்த நிலை வரும் என்பது அவர் வாக்கு.

கோபிகா ஜீவன ஸ்மரணம்!!!!! கோவிந்தா!!!! கோவிந்தா!!!!

தேவேந்திர சங்க வகுப்பு (7 min audio in tamizh, same as the transcript above)

One reply on “தேவேந்திர சங்க வகுப்பு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.