Categories
Stothra Parayanam Audio

அபிராமி அந்தாதி ஒலிப்பதிவு (Abirami anthadi audio mp3)

அபிராமி அந்தாதி 1 to 10 ஒலிப்பதிவு

அபிராமி அந்தாதி 11 to 20 ஒலிப்பதிவு

அபிராமி அந்தாதி 21 to 30 ஒலிப்பதிவு

அபிராமி அந்தாதி 31 to 40 ஒலிப்பதிவு

அபிராமி அந்தாதி 41 to 50 ஒலிப்பதிவு

அபிராமி அந்தாதி 51 to 60 ஒலிப்பதிவு

அபிராமி அந்தாதி 61 to 70 ஒலிப்பதிவு

அபிராமி அந்தாதி 71 to 80 ஒலிப்பதிவு

அபிராமி அந்தாதி 81 to 90 ஒலிப்பதிவு

அபிராமி அந்தாதி 91 to 100 ஒலிப்பதிவு

அபிராமி அந்தாதி

தார் அமர் கொன்றையும், சண்பக மாலையும் சாத்தும், தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே, உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி, எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே,
கார் அமர் மேனிக் கணபதியே, நிற்கக் கட்டுரையே.

1: உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென் கடிக் குங்கும தோயம்என்ன
விதிக்கின்ற மேனி, அபிராமி, எந்தன் விழுத் துணையே

2: துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும், பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும், திரிபுர சுந்தரிஆவது அறிந்தனமே.

3: அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், ௨னது திருவடிக்கே, திருவே, வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தே விழும், நரகுக்கு உறவாய மனிதரையே.

4: மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே, கொன்றை வார்சடைமேல்
பனிதரும்திங்களும் பாம்பும்பகீரதியும் படைத்த
புனிதரும், நீயும், என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.

5: பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையால்
வருந்திய வஞ்சி, மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி, பாதம் என் சென்னியதே.

6: சென்னியதுன் பொன் திருவடித் தாமரை, சிந்தையுள்ளே
மன்னியதுன் திரு மந்திரம், சிந்துர வண்ணப் பெண்ணே,
முன்னியநின் அடியாருடன் கூடி, முறை முறையே
பன்னியது என்றும், உந்தன் பரமாகம பத்ததியே

7: ததியுறும்மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர்
கதியுறுவண்ணம் கருது கண்டாய், கமலாலயனும்
மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும்
துதியுறு சேவடியாய், சிந்துரானன சுந்தரியே.

8: சுந்தரி, எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம்
வந்து அரி, சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்
அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
கந்தரி, கைத்தலத்தாள், மலர்த்தாள் என் கருத்தனவே.

9: கருத்தன, எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பிற்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்
திருத்தன பாரமும், ஆரமும் செங்கைச் சிலையும், அம்பும்,
முருத்தன மூரலும், நீயும்அம்மே, வந்து என்முன் நிற்கவே.

10: நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள், எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே, அருளே, ௨மையே, இமயத்து
அன்றும் பிறந்தவளே, அழியா முத்தி ஆனந்தமே.

11: ஆனந்தமாய், என்அறிவாய்நிறைந்த அமுதமுமாய்,
வானந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமானசரணாரவிந்தம், தவள நிறக்
கானந்தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே.

12: கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம். கசிந்து பத்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை, நயந்தோர் அவையத்துநான் முன்செய்த
புண்ணியம் ஏது, என் அம்மே, புவி ஏழையும் பூத்தவளே.

13: பூத்தவளே, புவனம் பதினான்கையும்பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே, கறைக்கண்டனுக்கு
மூத்தவளே, என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே,
மாத்தவளே, உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.

14: வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்,
சிந்திப்பவர் நற்றிசைமுகர், நாரணர், சிந்தையுள்ளே
பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம், எம்பிராட்டி, நின் தண்ணளியே.

15: தண்ணளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்,
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார், மதி வானவர் தம்
விண் அளிக்கும் செல்வமும், அழியா முத்தி வீடும் அன்றோ,
பண் அளிக்கும் சொல், பரிமள யாமளைப் பைங்கிளியே.

16: கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே,
அளியேன், அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே.

17: அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்
துதி செய்ய ஆனன சுந்தரவல்லி, துணை ரதி
பதி ஜயமானது, அபஜயமாக முன் பார்த்தவர்தம்,
மதிஜயமாகவன்றோ, வாம பாகத்தை வவ்வியதே.

18: வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட, பொற் பாதமும் ஆகிவந்து,
வெவ்விய காலன் என்மேல் வரும்போது, வெளி நிற்கவே.

19: வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டதுஇல்லை, கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றதுஎன்ன திருவுளமோ,
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.

20: உறைகின்ற நின் திருக்கோயில்நின் கேள்வர் ஒரு பக்கமோ,
அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம்
நிறைகநின்ற வெண் திங்களோ, கஞ்சமோ, ௭ந்தன் நெஞ்சகமோ,
மறைகின்ற வாரிதியோ, பூரணாசல மங்கலையே.

21: மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச்
சங்கு அலை செங்கை, சகல கலாமயில், தாவு கங்கை
பொங்கலை தங்கும், புரிசடையோன் புடையாள், உடையாள்,
பிங்கலை, நீலிசெய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே.

22: கொடியே, இளவஞ்சிக் கொம்பே, எனக்கு வம்பே பழுத்த
படியே, மறையின் பரிமளமே, பனி மால் இமயப்
பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே,
அடியேன், இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.

23: கொள்ளேன்மனத்தில், நின் கோலம் அல்லாது, அன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்
குள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தே விளைந்த
கள்ளே, களிக்கும்களியே, அளிய என் கண்மணியே
.
24: மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே,
பணியேன்ஒருவரை, நின் பத்ம பாதம், பணிந்தபின்னே.

25: பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி, பிறப்பு அறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன், முதல் மூவருக்கும்
௮ன்னே, உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே,
என்னே, இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே.

26: ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம், கமழ்பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே, மணம் நாறும் நின் தாளிணைக்கு, என்
நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே.

27: உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை, சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே.

28: சொல்லும் பொருளும் எனநடமாடும் துணைவருடன்,
புல்லும் பரிமளப் பூங்கொடியே, நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழும்௮வர்க்கே, அழியா அரசும்,
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே.

29: சித்தியும், சித்தி தருந்தெய்வம்ஆகித் திகழும் பரா
சத்தியும், சக்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்து ஆகி முளைத்து எழுந்த
புத்தியும், புத்தியிந் ௨ள்ளே புரக்கும் புரத்தையன்றே.

30: அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய், கொண்டது அல்ல ௭ன்கை
நன்றே உனக்கு, இனி நான் என் செயினும், நடுக்கடலுள்
சென்றே விழினும், ௧ரையேற்றுகை நின் திருவுளமே,
ஒன்றே பல உருவே, அருவே, என் உமையவளே.

31: உமையும், உமையொருபாகனும், ஏக உருவில் வந்து, இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார், இனி எண்ணுதற்குச்
சமயங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை,
அமையும் அமையுறு தோளியர்மேல் வைத்த ஆசையுமே.

32: ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில், அல்லற்பட இ௫ந்தேனை, நின்பாதம் என்னும்
வாசக் கமலம், தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன், ஈசர் பாகத்து நேரிழையே.

33: இழைக்கும் வினைவழியே, அடும் காலன் எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்துஅஞ்சல் என்பாய், அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும், களபக் குவிமுலை யாமளைக் கோமளமே,
உழைக்கும் பொழுது, உன்னையே, அன்னையே என்பன் ஓடிவந்தே.

34: வந்தே சரணம் புகும் அடியா௫க்கு, வானுலகம்
தந்தே, பரிவொடு தான் போய் இருக்கும் சதுர்முகமும்,
பைந்தேன் அலங்கல் பரு மணி ஆகமும், பாகமும், பொந்
செந்தேன் மலரும், அலர் கதிர் ஞாயிறும், திங்களுமே.

35: திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி, சென்னி வைக்க
எங்கட் ஒரு தவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ, தரங்கக் கடலுள்
வெங்௧ட் பணி அணைமேல் துயில்கூரும், விழுப்பொருளே.

36: பொருளே, பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும்
மருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி, ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன்
அருள் ஏதுஅறிகின்றிலேன், அம்புயாதனத்து அம்பிகையே.

37: கைக்கே அணிவது கன்னலும் பூவும், ௧மலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை, விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும், பட்டும், ௭ட்டுத்
திக்கே அணியும், திரு உடையானிடம் சேர்பவளே.

38: பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திரு நகையும், துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்,
அவளைப் பணிமின் கண்டீர், அமராவதி ஆளுகைக்கே.

39: ஆளுகைக்கு உன்தன் அடித்தாமரைகள் உண்டு, அந்தகன்பால்
மீளுகைக்குஉன்தன் விழியின் கடை உண்டு, மேல் இவற்றின்
மூளுகைக்குஎன் குறை, நின் குறையே அன்று, முப்புரங்கள்
மாளுகைக்குஅம்பு தொடுத்த வில்லான்பங்கில், வாள்நுதலே.

40: வாணுதல் கண்ணியைவிண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெ௫மாட்டியயைப், பேதைநெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைகாணும்௮ன்பு
பூணுதற்கு எண்ணிய, எண்ணம் அன்றோ, முன் செய் புண்ணியமே.

41: புண்ணியம் செய்தனமே மனமே, புதுப் பூங் குவளைக்
கண்ணியும், செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து, தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே.

42: இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி இளகிமுத்து
வடங்கொண்ட கொங்கைமலைகொண்டு, இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின்
படங்கொண்ட ௮ல்குல், பணிமொழிவேதப் பரிபுரையே.

43: பரிபுரச் சீறடிப், பாசாங்குசை, பஞ்சபாணி, இன்சொல்
திரிபுர சுந்தரி, சிந்துர மேனியள், தீமை நெஞ்சில்,
புரிபுரவஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச்சிலைக் கை
எரி புரை மேனி, இறைவர் செம்பாகத்து இருந்தவளே.

44: தவளே இவள் ௭ங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,
அவளேஅவர் தமக்கு அன்னையும் ஆயினள்ஆகையினால்,
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்
துவளேன், இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே.

45: தொண்டு செய்யாது, நின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ, இலரோ, ௮ப்பரிசு அடியேன்
கண்டு செய்தால், அது கைதவமோ ௮ன்றிச் செய்தவமோ,
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே, பின் வெறுக்கை அன்றே.

46: வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே, புது நஞ்சை உண்டு,
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே,
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யானுன்னை வாழ்த்துவனே.

47: வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன், மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று, விள்ளும்படி அன்று, வேலை நிலம்
ஏழும் பரு வரை எட்டும் எட்டாமல், இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.

48: சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில், ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து, நெஞ்சில்
இடரும் தவிர்த்து, இமைப்போது இருப்பார், பின்னும் எய்துவரோ,
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.

49: குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி, வெங் கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து,
அரம்பை அடுத்து அரிவையர் சூழ வந்துஅஞ்சல் என்பாய்,
நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே.

50: நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச
சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு
வாயகி, மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி, என்று
ஆய கியாதியுடையாள் சரணம், அரண் நமக்கே.

51: அரணம் பொருள் என்றுஅருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய, முனிந்த பெம்மானும், முகுந்தனுமே,
சரணம் சரணம் என நின்ற நாயகி, தன் அடியார்,
மரணம் பிறவி இரண்டும் எய்தார், இந்த வையகத்தே.

52: வையம் துரகம் மதகரிமா மகுடம், சிவிகை,
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம், பிறை முடித்த
ஐயன் திருமனையாள், அடித் தாமரைக்கு, அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய, சின்னங்களே.

53: சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்,
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத்,
தன்னந்தனி இருப்பார்க்கு, இது போலும், தவம் இல்லையே.

54: இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்,
கல்லாமை கற்ற கயவர் தம்பால், ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த, திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

55: மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்ற
அன்னாள், அகமகிழ் ஆனந்தவல்லி, அருமறைக்கு
முன்னாய், நடு எங்கும் ஆய், முடிவாய முதல்வி தன்னை,
உன்னாது ஒழியினும், உன்னினும், வேண்டுவது ஒன்று இல்லையே.

56: ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ் உலகு எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள், என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா, இப்பொருள் அறிவார்,
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும், என் ஐயனுமே.

57: ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு, அண்டம் எல்லாம்
உய்ய அறம் செய்யும் உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும்
மெய்யும் இயம்பவைத்தாய், இதுவோ ௨ன்தன் மெய்யருளே.

58: அருணாம்புயத்தும் என் சித்தாம்புயத்தும், அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர் நயனக்
கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும்,
சரணாம்புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே.

59: தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று, உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள்சிலையும்,
அஞ்சு அம்பும், இக்கு அலராகி நின்றாய், அறியார் எனினும்,
பஞ்சு அஞ்சும் மெல் அடியார், அடியார் பெற்ற பாலரையே.

60: பாலினும் சொல் இனியாய், பனி மா மலர்ப் பாதம் வைக்க,
மாலினும்தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின்
மேலினும், கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒரு
நாலினும் சால நன்றோ, அடியேன் முடை நாய்த் தலையே.

61: நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்
தாயே, மலைமகளே, செங்கண் மால் திருத் தங்கைச்சியே.

62: தங்கச் சிலை கொண்டுதானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங் கண் கரி உரி போர்த்த, செஞ்சேவகன் மெய்யடையக்,
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்
செங் கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே.

63: தேறும்படி சில ஏதுவும் காட்டி, முன் செல்கதிக்குக்
கூறும் பொருள், குன்றில் கொட்டும் தறி, குறிக்கும்சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்,
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே.

64: வீணே பலி கவர் தெய்வங்கள்பால் சென்று மிக்க அன்பு
பூணேன், உனக்கு அன்பு பூண்டு கொண்டேன், நின்புகழ்ச்சி அன்றிப்
பேணேன், ஒரு பொழுதும் திருமேனி ப்ரகாசம் அன்றிக்
காணேன், இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே.

65: ககனமும் வானும் புவனமும் காண, விற்காமன் அங்கம்
தகனம் முன் செய்த, தவப்பெருமாற்கு, தடக்கையும் செம்
முகனும், முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும், உண்டாயது அன்றோ, வல்லி, நீ செய்த வல்லபமே.

66: வல்லபம் ஒன்று அறியேன், சிறியேன், நின் மலரடிச் செம்
பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன், பசும் பொற் பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய், வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும், நின் திரு நாமங்கள் தோத்திரமே.

67: தோத்திரம் செய்துதொழுது, மின் போலும் நின் தோற்றம், ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர், வண்மைகுலம்
கோத்திரம் கல்விகுணம் குன்றி, நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலா நிற்பர்பார் எங்குமே.

68: பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர் விசும்பும்,
ஊரும் முருகு சுவை ஒளி, ஊறு ஒலி, ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாம சுந்தரி சீறடிக்கே,
சாரும், தவம் உடையார், படையாத தனம் இல்லையே.

69: தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே,
கனம் தரும் பூங் குழலாள் அபிராமி கடைக்கண்களே.

70: கண்களிக்கும்படி கண்டுகொண்டேன், கடம்பாடவியில், பண்
களிக்கும் குரல் வீணையும், கையும், பயோதரமும்,
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி, மதங்கர்க்குலப்
பெண்களில் தோன்றிய, எம்பெருமாட்டிதன் பேரழகே.

71: அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அரு மறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள், பனி மாமதியின்
குழவித் திருமுடிக் கோமளயாமளைக் கொம்பு இருக்க,
இழவுற்று நின்ற நெஞ்சே, இரங்கேல், உனக்கு என் குறையே.

72: எங்குறை தீரநின்று ஏற்றுகின்றேன், இனியான் பிறக்கின்
நின் குறையே அன்றி யார் குறை காண், இரு நீள் விசும்பின்
மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்லியலாய்,
தன் குறை தீர எம்கோன் சடை மேல் வைத்த தாமரையே.

73: தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம், தனுக் கரும்பு,
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது, எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி, செங்கைகள் நான்கு, ஒளி செம்மை, அம்மை
நாமம் திரிபுரை, ஒன்றோடு இரண்டு நயனங்களே.

74: நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்,
அயனும் பரவும், அபிராம வல்லி அடி இணையைப்
பயன் என்று கொண்டவர், பாவையர் ஆடவும், பாடவும், பொன்
சயனம் பொருந்து, தமனியக் காவினில் தங்குவரே.

75: தங்குவர் கற்பக தாருவின் நீழலில், தாயர் இன்றி
மங்குவர், மண்ணில் வழுவாப் பிறவியைமால் வரையும்
பொங்கு உவர், ஆழியும்ஈரேழ் புவனமும்பூத்த உந்திக்
கொங்கு இவர் பூங்குழலாள், திருமேனி குறித்தவரே.

76: குறித்தேன் மனத்தில், நின் கோலம் எல்லாம், நின் குறிப்பு அறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான், ஒரு கூற்றை மெய்யில்
பறித்தே குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே.

77: பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்ச பாணி, வஞ்சர்
உயிர் அவி, உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
வயிரவி, மண்டலி, மாலினி, சூலி, வராகி, என்றே
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே.

78: செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராம வல்லி, அணி தரளக்
கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்,
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன், ௭ன் துணை விழிக்கே.

79: விழிக்கே அருள் உண்டு, அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு, எமக்குஅவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று, வெம்பாவங்களே செய்து, பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடுஎன்ன கூட்டு இனியே.

80: கூட்டியவா என்னைத், தன் அடியாரில், கொடிய வினை
ஓட்டியவா, என்கண் ஓடியவா, தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா,
ஆட்டியவா, நடம்ஆடகத் தாமரை ஆரணங்கே.

81: அணங்கே, அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்,
வணங்கேன் ஒருவரை, வாழ்த்துகிலேன் நெஞ்சில், வஞ்சகரோடு
இணங்கேன், எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன், அறிவு ஒன்று இலேன், என்கண் நீ வைத்த பேரளியே.

82: அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே, அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுதொறும்
களி ஆகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரைபுரண்டு
வெளியாய்விடின், எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே.

83: விரவும் புது மலர் இட்டு நின் பாத விரைக்கமலம்,
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார், இமையோர் எவரும்
பரவும் பதமும், அயிராவதமும் பகீரதியும்
உரவும் குலிசமும், கற்பகக் காவும் உடையவரே.

84: உடையாளை, ஒல்கு செம்பட்டுடையாளை, ஒளிர்மதிச் செஞ்
சடையாளை, வஞ்சகர் நெஞ்சு அடையாளைத், தயங்கும் நுண்ணூல்
இடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப்
படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே.

85: பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச் சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும், சிற்றிடையும்,
வார்க் குங்கும முலையும், முலைமேல் முத்து மாலையுமே.

86: மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற
காலையும், சூடகக் கையையும்கொண்டு, கதித்த கப்பு
வேலை வெங்காலன் என்மேல் விடும்போது, வெளி நில் கண்டாய்,
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.

87: மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி, என்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால், விழியால் மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை, அண்டம் எல்லாம்
பழிக்கும்படி ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே.

88: பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும் உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது, தரியலர்தம்
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கியபோதில், அயன்
சிரம் ஒன்று செற்ற கையான், இடப் பாகம் சிறந்தவளே.

89: சிறக்கும் கமலத் திருவே, நின்சேவடி சென்னி வைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும், துரியம் அற்ற
உறக்கம் தர வந்து, உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுது, என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே.

90: வருந்தாவகை என் மனத்தாமரையினில் வந்து புகுந்து
இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை–விண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை, மருந்தானதை நல்கும் மெல்லியலே.

91: மெல்லிய நுண் இடை மின் அனையாளை, விரிசடையோன்
புல்லிய மென் முலைப் பொன் அனையாளை, புகழ்ந்து, மறை
சொல்லியவண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு,
பல்லியம் ஆர்த்தெழ, வெண் பகடு ஊறும் பதம் தருமே.

92: பதத்தே உருகி, நின் பாதத்திலே மனம் பற்றி, உன்தன்
இதத்தே ஒழுகஅடிமை கொண்டாய், இனியான் ஒருவர்
மதத்தே மதி மயங்கேன், அவர் போன வழியும் செல்லேன்,
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும், முகிழ் நகையே.

93: நகையே இதுஇந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு,
முகையே, முகிழ் முலை மானே, முது கண் முடிவில் அந்த
வகையே, பிறவியும் வம்பே, மலைமகள் என்பது நாம்,
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.

94: விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து,
சுரும்பிற் களித்து, மொழி தடுமாறி, முன் சொன்ன எல்லாம்
தரும் பித்தர் ஆவர் என்றால், அபிராமி சமயம் நன்றே.

95: நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம், எனக்கு உள்ளஎல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன், அழியாத குணக்
குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே.

96: கோமளவல்லியை, அல்லியந் தாமரைக் கோயில் வைகும்
யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய
ஷ்யாமளை மேனிச் சகலகலா மயில்தன்னை, தம்மால்
ஆமளவும் தொழுவார், எழு பாருக்கும் ஆதிபரே.

97: ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தம் கோன்,
போதிற் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி,
காதிப், பொருபடைக் கந்தன், ௧ணபதி, காமன், முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர், போற்றுவர் தையலையே.

98: தைவந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்குக்,
கைவந்த தீயும், தலை வந்த ஆறும் கரந்தது எங்கே,
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள்
பொய்வந்த நெஞ்சில் புகல் அறியா மடப் பூங்குயிலே.

99: குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை, கோலவியல்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை, வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின் மீது அன்னமாம்,
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே.

100: குழையத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி,
கழையைப் பொருத திருநெடுந் தோளும், ௧ரும்பு வில்லும்,
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும், வெண் நகையும்,
உழையைப் பொருகண்ணும், நெஞ்சில், எப்போதும் உதிக்கின்றவே.
உதிக்கின்ற செங்கதிர்,

நூற்பயன்

ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, அங்குச பாசம், குசுமம், கரும்பும், அங்கை
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு, ஒரு தீங்கு இல்லையே.

3 replies on “அபிராமி அந்தாதி ஒலிப்பதிவு (Abirami anthadi audio mp3)”

Apt on this Bhoumaswin day !Those can’t chant can listen to these precious audios. Thanks Ganapathy

Super Ganapathy sir it was very useful.i had wanted to learn abhirami Andadi from a long time

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.