Categories
Sri Shankara Charitham

ஸ்ரீ சங்கர சரிதம் – இரண்டாம் பகுதி – சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து

சம்பு சங்கரராக அவதாரம் (14 min audio in tamil. same as the script above)

நேத்திக்கு சங்கர சரித்திரத்தை நாம் ஏன் கேட்க வேண்டும் அப்படின்னு சொல்லிண்டு இருந்தேன். இன்னிக்கு தேவர்கள் தக்ஷிணாமூர்த்தி கிட்ட பிரார்த்தனை பண்ணி, பகவான் பூமியில ஆதி சங்கரராக அவதாரம் பண்ணினார் அப்படிங்கற விஷயம்.

இன்னிக்கு ஸ்வாமிகள் அனுக்ரஹத்துல காஞ்சிபுரம் போய் இருந்தோம். காஞ்சி காமாக்ஷி தர்சனம் கிடைச்சுது, மடத்துக்கு வந்து மஹா பெரியவா அதிஷ்டானத்தில் நமஸ்காரம் பண்ணினோம். புதுப் பெரியவாளை தர்சனம் பண்ணினோம். பால  பெரியவா சந்த்ரமௌலீச்வர பூஜை பண்ணிண்டு இருந்தா. அந்த சந்திர மௌலீஸ்வரர் பூஜையை எந்த ஒரு modern amenities இல்லாம ஒரு சில குத்து விளக்குகள் மட்டும் ஏத்தி வெச்சு பண்றா, அது அவ்வளவு ஒரு தெய்வீகமா இருந்துது. ரொம்ப சந்தோஷமா இருந்தது, மஹான்கள் தரிசனம் கிடைச்சதுல.

மஹா பெரியவா சன்னிதியில நமஸ்காரம் பண்ணும் போது, “ஏதோ என் மழலை மொழியை வெச்சுண்டு, உங்களை எல்லாம் பேசறேன், ஏத்துக்கணும், அனுக்கிரஹம் பண்ணணும்”னு வேண்டிண்டேன். அப்போ மனசுல ஒண்ணு தோணித்து, இந்த தேவர்கள் தக்ஷிணாமூர்த்தி கிட்ட பிராத்தனை பண்ணி அவர்  அதிசங்கரரா அவதாரம் பண்ணினார். தேவர்கள் காமாக்ஷி தேவி கிட்ட பிராத்தனை பண்ணிண்டு, காமாக்ஷி மஹா பெரியவாளா அவதாரம் பண்ணார் அப்படின்னு தோணித்து. உடனே மூக கவியும், ஆதி சங்கரரும், தக்ஷிணாமூர்த்தியும் காமாக்ஷியும் ஒண்ணு தான் அப்படின்னு சொல்றா அப்படிங்கிற அந்த ஒரு ஸ்லோகம் ஞாபகம் வந்தது.

भूरम्भांस्यनलोऽनिलोऽम्बरमहर्नाथो हिमांशु पुमान्

इत्याभाति चराचरात्मकमिदं यस्यैव मूर्त्यष्टकम्

नान्यत् किञ्चन विद्यते विमृशतां यस्मात्परस्माद्विभोः

तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥९॥

பூரம்பாம்ஸ்யனலோ‌sனிலோsஉம்பர மஹர்நாதோ ஹிமாம்ஶு: புமான்

இத்யாபாதி சராசராத்மகமிதம் யஸ்யைவ மூர்த்யஷ்டகம் |

நான்யத்கிம்சன வித்யதே விம்ருஶதாம் யஸ்மாத்பரஸ்மாத்விபோ

தஸ்மை ஸ்ரீ குருமூர்தயே நம இதம் ஸ்ரீதக்ஷிணாமூர்தயே ||

அப்படினு இந்த தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரத்துல பகவத் பாதாள் பண்ணின இந்த ஸ்தோத்ரத்துல இருக்கு. அதாவது எட்டு வடிவமாக பரமேஸ்வரன் விளங்குகிறார். இது எல்லாமே பகவான் தான், இந்த உலகமாக தெரியக்கூடிய எல்லாமே பரம் பொருள் தான் அப்படிங்கற ஞானம், தக்ஷிணமூர்த்தியை நமஸ்காரம் பண்ணினா அவர் கொடுப்பார், அப்படிங்கறது இந்த ஸ்லோகம். இந்த எட்டு வடிவமா விளங்குகிறார் அப்டிங்கறதை மூக கவியும்

 

धरणिमयीं तरणिमयीं पवनमयीं गगनदहनहोतृमयीम् ।

अम्बुमयीमिन्दुमयीमम्बामनुकम्पमादिमामीक्षे ॥

தரணி மயீம், தரணி மயீம், பவன மயீம், ககன, தஹன, ஹோத்ரு மயீம் |

அம்பு மயீம், இந்து மயீம் அம்பாம், அனுகம்பம் ஆதிமாம் ஈக்ஷே ||

அப்படின்னு அம்பாள் வந்து, த(4)ரணி அப்படின்னா பூமின்னு அர்த்தம், த(1)ரணின்னா சூர்யன்னு அர்த்தம், ‘தரணி மயீம், தரணி மயீம்’, ‘பவன மயீம்,’ பவனம்னா காற்று, ‘ககன, தஹன, ஹோத்ரு மயீம்’ ககனம்னா ஆகாசம், தஹனம்னா நெருப்பு, ஹோதா அப்படின்னா எஜமானன், ஒரு யாகம் பண்ணுபவன், ‘அம்பு மயீம், இந்து மயீம் அம்பாம்’ அம்புனா ஜலம், இந்துன்னா சந்திரன், சூரியச்சந்திராளாகவும், பஞ்ச பூதங்களாகவும், யாகம் பண்ணக்கூடிய ஹோதாவாகவும் கருணையை வடிவான அம்பாள் விளங்குகிறாள், அப்படின்னு இந்த ஸ்லோகத்துல வறது. இதே எட்டு தான், பூரம்பாம்ஸ்யனலோ‌sனிலோsஉம்பர மஹர்நாதோ ஹிமாம்ஶு: புமான்

இத்யாபாதி சராசராத்மகமிதம் யஸ்யைவ மூர்த்யஷ்டகம்

பூமான்ங்கிறது அங்க ஹோதா. இப்படி ரெண்டுத்துலேயும் இருக்கு அப்படின்னு ஞாபகம் வந்தது. அதனால அப்படி மஹா பெரியவா காமாஷியோட அவதாரம்னு அந்த சன்னிதியில தோணினதுனால, சரி பெரியவா தான் வழி நடத்துறா, நாம தைரியமா பேசுவோம் அப்படின்னு ஒரு சந்தோஷம் ஏற்பட்டது இன்னிக்கு.

தக்ஷிணாமூர்த்தி எப்படி ஆதி சங்கரராக அவதாரம் பண்ணினார் அப்படிங்கிறதுக்கு பெரியவா, த்வாபர முடியும் போது கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு கீதோபதேசத்துல

यदा यदा हि धर्मस्य ग्लानिर्बवति भारत।

अब्य्त्तानमधर्मस्य तदात्मानम् सृजाम्यहम्॥

परित्राणाय सादूनाम् विनाशाय च दुश्कृताम् ।

धर्मसम्सापणार्ताय सम्बवामि युगॅ युगॅ॥

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத

அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானாம் ஸ்ருஜாம்யஹம் |

பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்

தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே ||

எப்போ எல்லாம் தர்மத்துக்கு க்ஷீணம் ஏற்படறதோ, அப்போ எல்லாம் நான் பூமில் அவதாரம் பண்ணி, அந்த தர்மமாகிய விளக்கை தூண்டி விட்டு நன்னா எரிய பண்ணுவேன், அப்படின்னு வாக்கு கொடுத்து இருக்கார், கிருஷ்ண பகவான் கீதைல. அப்படி பகவான் கொடுத்த அந்த வாக்கு இருக்கு. ஆனா கலி முடியறத்துக்கு, கல்கி அவதாரம் எடுக்க, இன்னும் நாள் இருக்கு. அதுக்கு முன்னாடி ஒன்பது அவதாரங்கள் நாராயணன் எடுத்தார். அந்த அவதாரங்கள்ல எல்லாம், யாரு நல்லவா யாரு துஷ்டர்கள் அப்படிங்கிறது ஓரளவு தெளிவா தெரிஞ்சுது. அது mix ஆயிண்டே வந்தது, ராமாவதாரத்துல clearஆ ஒரு villain ராவணன், ராமர் அவனை  வதம் பண்ணார். கிருஷ்ணா அவதாரத்துல இந்த துர்யோதனாதிகள், இந்த துஷ்டர்களா இருந்த ராஜாக்கள் எல்லாம், அது மூலமா மஹாபாரத யுத்தத்தை கொண்டு கிருஷ்ணர் பூபாரத்தையே குறைச்சார்.

இந்த கலியில வந்து அப்படி ராக்ஷசன் அப்படின்னு கோர பற்களை, மீசையை வெச்சுண்டு வெளியில இருக்க போறது இல்லை, இந்த ராக்ஷசர்கள்  எல்லாம், மனுஷாளோட புத்திக்கு உள்ளேயே இருக்கா, அப்படின்னு இந்த கலி புத்திக்குள்ளயே வந்துடறது. நாமளே திடீர்னு நல்லவாள இருப்போம், நம்மளே திடீர்னு ராக்ஷச behaviour வந்து திடீர்னு கோபத்தோட  behave பண்றோம். அதனால மனசுக்குள்ளேயே, புத்திக்குள்ளயே கலி வந்து ராக்ஷச குணத்தை கொண்டு வந்ததுனால, பகவான் இப்போ வந்து அவதாரம் பண்ணி, எல்லாரையும் சம்ஹாரம் பண்ண முடியாது. அதனால ஞானாசார்யனாக அவதாரம் பண்ணனும், பகவான் பூமில ஞானத்தை உபதேசிக்கும் ஆச்சார்யனாக அவதாரம் பண்ணனும்  அப்படின்னு தீர்மானம் பண்ணாராம்.

அப்போ, பரமேஸ்வரனும், கிருஷ்ண பகவானும் ஒண்ணு தான், அந்த கிருஷ்ணர் கொடுத்த வாக்கை பரமேஸ்வரன் நிறைவேத்த போறார், அப்படின்னு தேவர்கள் எல்லாம் தக்ஷிணாமூர்த்திக்கிட்ட போய் “நீங்க பூமில போய் , இந்த ரெண்டாயிரத்தி ஐநூறு வருஷத்துல கலியின் கொடுமை ஜாஸ்தி ஆயிடுத்து, எழுபத்தி ரெண்டு துர்மதங்கள் வந்துடுத்து, நீங்கள் இதை எல்லாம் போக்கி, ஜனங்களுக்கு நல்ல புத்தியை கொடுக்கணும்” அப்படின்னு பிரார்த்தனை பண்ணினா. அப்படின்னு மஹா பெரியவா அழகா அந்த, கிருஷ்ணர் கிட்ட இருந்து, சிவவிஷ்ணு அபேதம்,  கிருஷ்ணர் கொடுத்த வாக்கை தக்ஷிணாமூர்த்தி நிறைவேத்தறார் என்று கொண்டு போறா. அப்படி தஷிணாமூர்த்தியை தேவர்கள் வேண்டினார்கள், அப்படின்னு கொண்டுவறா.

தஷிணாமூர்த்தி த்யானம் அப்படினா எனக்கு தெரிஞ்சது, சிவன் கோவிலுக்கு போனா, தஷிணாமூர்த்தி சன்னதி மேல ஒரு தமிழ் பாட்டு இருக்கும்,

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை யாறங்கமுதற் கற்ற கேள்வி

வல்லார்க ணால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கப் பாலாய்

எல்லாமா யல்லதுமா யிருந்ததனை யிருந்தபடி யிருந்து காட்டிச்

சொல்லாம சொன்னவரை நினையாமல் நினைந்துபவதொடக்கை வெல்வாம்.

அப்படின்னு ஒரு திருவிளையாடற் புராணப் பாட்டு. அப்பறம் வேத class போன போது, அங்க ஸ்தோத்ரங்கள் எல்லாம் சொல்லி கொடுத்தா. தினம் இந்த தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரத்தை சொல்லி நமஸ்கராம் பண்ண சொல்லுவா. அதுல ஆதி சங்கரர் பண்ணின தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் ‘விச்வம் தர்பண திருஷ்யமான’ லேர்ந்து தான் ஆரம்பிக்கறது. ஆனா, அதுக்கு முன்னாடி ஒரு ஸ்லோகம் சொல்றதுன்னு ஸம்ப்ரதாயத்துல இருக்கு,

मौनव्याख्या प्रकटित परब्रह्मतत्त्वं युवानं

वर्षिष्ठांते वसद् ऋषिगणैः आवृतं ब्रह्मनिष्ठैः ।

आचार्येन्द्रं करकलित चिन्मुद्रमानंदमूर्तिं

स्वात्मारामं मुदितवदनं दक्षिणामूर्तिमीडे ॥१॥

மௌனவ்யாக்யா ப்ரகடிதபரப்ரஹ்மதத்வம்யுவானம்

வர்ஷிஷ்டாம்தே வஸத்ரிஷிகணைராவ்ருதம் ப்ரஹ்மனிஷ்டை: |

ஆசார்யேம்த்ரம் கரகலித சின்முத்ரமானம்தமூர்திம்

ஸ்வாத்மராமம் முதிதவதனம் தக்ஷிணாமூர்திமீடே ||

அப்படின்னு இந்த தக்ஷிணாமூர்த்தியை த்யானம் பண்ணி நாம் தொடர்வோம். அந்த தக்ஷிணாமூர்த்தி கிட்ட தேவர்கள் வேண்டினா. உடனே அவர் ” நான் பூமில அவதாரம் பண்றேன்”, என்று அபயம் குடுக்கறார்.

காலடிங்கிற க்ஷேத்ரத்துல, அதே நேரத்துல சிவகுரு அப்படிங்கிற ஒரு   நம்பூத்ரி ப்ராஹ்மணரும்,  அவருடைய மனைவி ஆர்யாம்பா அப்படின்னு ஒரு புண்யவதியும், தங்களுக்கு குழந்தை வேணும் அப்படின்னு பிரார்த்தனை பண்ணிண்டு இருக்கா. அவாளுக்கு ரொம்ப காலமா குழந்தை இல்லை, அவா பிரார்த்தனை பண்ணிண்டு இருக்கா.

இந்த சிவகுரு அப்படிங்கிற பேர் வந்து, சிவகுருநாத பிள்ளை அதெல்லாம், நம்ம கும்பகோணத்துல தான் ஜாஸ்தி, அதனால கும்பகோணத்துல இருந்து, பரசுராமர் கொண்டு போய், கேரளத்துல இருக்கச் சொன்ன, குடிவெச்ச ப்ராஹ்மணர்களோட வம்சத்துல இவர் வந்து இருப்பார், அப்படின்னு மஹா பெரியவா சொல்றா. அந்த கும்பகோணத்து மடம், அந்த சம்பந்தத்தை கொண்டு வறா. அப்பறம் ஆர்யாம்பாங்கற வார்த்தை வந்து, காஞ்சிபுரத்துல காமாக்ஷி தேவிக்கு ஆர்யான்னு பேரு, மூககவியும் ஆர்யா சதகம்னு ஒண்ணு பண்ணி இருக்கார். அதனால ஆர்யாம்பாங்கிறது காமாக்ஷி தேவி தான், அந்த அம்மா வந்து இந்த காஞ்சிபுரத்தில இருந்து அந்த வம்ச பரம்பரைல போய் இருப்பா அப்படின்னு, பெரியவாளுக்கு ஒரு சந்தோஷம் இதெல்லாம் connect பண்றதுல, அப்படி சொல்றா.

அப்போ, இந்த சிவகுரு ஆர்யாம்பா தம்பதி, நம்பூதிரி பிராம்மணா, கேரள க்ஷேத்ரத்துல இருந்துண்டு இருக்கா. அவா பிரார்த்தனை பண்ணி பகவான் அங்கே அவதாரம் பண்றார். அதைச் சொல்ல வரும்போது, அந்த கேரள க்ஷேத்ரம் எப்படி உருவானது அப்படிங்கற கதையை பெரியவா சொல்றா.

பரசுராமர் க்ஷத்ரியர்களை எல்லாம் வதம் பண்ணி, அவப்பா ஜமதக்னி முனிவரை கார்த்தவீர்யார்ஜுனன் வதம் பண்ணினான் என்கிறதுக்காக, அவர் இருபத்துஒரு தலைமுறை க்ஷத்ரியர்களை வதம் பண்ணிண்டே இருக்கார். இதை தடுக்கணும் என்கிறதுக்ககாக அவருடைய குரு, காஷ்யப முனிவர் “நான் உன் குரு. நீ க்ஷத்ரியர்களை வதம் பண்ணினதுனால உனக்கு கிடைச்ச பூமியை எல்லாம் எனக்கு தானம் பண்ணு” னு கேட்கறார். உடனே பரசுராமர் “அப்படியே! குடுத்தேன்!” அப்படின்னு சொல்லி பூமியை எல்லாம் கஷ்யபருக்கு குடுத்த உடனே கஷ்யபர் சொல்றார், “இனிமே இந்த பூமியில் நீ இருக்கப் படாது. இது என்னோட பூமி. வேறே எங்கேயாவது போய்க்கோ” என்கிறார்.

உடனே பரசுராமர் என்ன பண்ணினாராம், மகேந்திர மலை மேலே ஏறி நின்னுண்டு, இந்த western ghats னு வெச்சுக்கலாம். சமுத்திர ராஜனை பார்த்து “நீ கொஞ்சம் அன்னண்ட போ. எனக்கு புது நிலம் வேண்டும்” னு கேட்டாராம். சமுத்திர ராஜன் பார்த்தாராம். “இவர் கடும் கோபிஷ்டர். நான் கொஞ்சம் நகர்ந்து கொண்டால் “என்ன இவ்வளூண்டு தானா” என்பார். ரொம்ப தள்ளி போயிட்டால் “ஏன் இவ்வளவு தள்ளி போனே” ன்னு கோச்சுப்பார். அதுனால “நீங்கள் உங்கள் கையில் இருக்கற மழுவை” பரசுன்னா கோடரி. “அந்த கோடாரியை விட்டு எறியுங்கள். அது எங்கே போய் விழறதோ அவ்வளவு தூரம் நான் நகர்ந்து கொள்கிறேன்” என்று சொன்னாராம். அப்படி அந்த புது நிலம் உருவாச்சு. அதுக்கு தான் கேரளம் னு பேர். பரசுராம க்ஷேத்ரம் னு பேர்.

அங்க அவர் என்ன பண்ணினாராம், அந்த பரசுராமர், இங்க ஜனங்களெல்லாம் வந்து குடி இருக்கணும் அப்படிங்கறதுக்காக, என்ன பண்றதுன்னு யோசிச்சாராம். சரி நாம வந்து பிராமணர்களை கொஞ்சம் பேரை அங்க போய் குடி வெச்சோம்னா, மத்தவாள்ளாம் வந்து சேர்ந்துப்பா, ஒரு சமூகம் உருவாயிடும் அப்படின்னு , இங்க கும்பகோணத்துல இருந்து, அது மாதிரி, புண்ய க்ஷேத்ரங்கள்ளேர்ந்து பிராமணர்களை எல்லாம் பேசி, அங்க போய் அந்த கேரளத்துல குடி வெச்சாராம். அங்கே ஒரே ஆறும், புழையும், நிறைய ஜலமா இருந்ததுனால, அங்க காரியம் நிரம்ப பண்ணி தான், சாப்பாடுக்கே வழி, ரொம்ப உழைக்க வேண்டி இருந்ததாம், அதனால அந்த பருப்பு தின்னி பிராம்மணாள் எல்லாம் ஓடி வந்துட்டாளாம் திரும்ப கும்பகோணத்துக்கு. இவர் பரசுராமர் பார்த்தாராம், இவா இப்படி பண்றாளேன்னு.

இன்னொரு set of பிராமணாளை அங்க போய் இருக்க பண்ணி, அவாளோடைய பழக்க வழக்கங்களெல்லாம் கொஞ்சம் மாத்தினாராம், அவாளை முன் குடுமி வெச்சுக்கறது, அப்படின்னு சில பழக்கங்களை மாத்தி, இவா இனிமே திரும்ப வந்தா இங்க இருக்கறவா சேர்த்துக்கமாட்டாங்கற மாதிரி பண்ணினாராம், நம்பூத்ரிகள், எம்ப்ராந்த்ரிகள் அப்படின்னு அவாளை ஒரு sect ஆக பண்ணினார். அப்பறம் சரின்னு அவாள் அங்கேயே இருக்க ஆரம்பிச்சா. அப்புறம் மத்தவாளும், மத்த ஜனங்களெல்லாம் நல்லா உழைக்கக் கூடியவா தானே, அவாளுக்கு அங்கே வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருந்தது,  ரொம்ப செழிப்பான நிலமா இருந்தது, அப்படின்னு எல்லாரும் அங்க போய் தங்கினா. அந்த கேரள க்ஷேத்ரத்துக்கு பரசுராமரருடைய அனுக்ரஹமமும் இருந்தது, அங்கே நன்னா ஒரு சமூகம் உருவாச்சு. ரொம்ப அங்கே வேதம் புஷ்களமா வளர்ந்தது, அப்படி கலி எழுபத்ரெண்டு துர்மதங்கள் எல்லாம் வந்தாலும், எங்கே வேதம் ரொம்ப புஷ்களமா விளங்கறதோ, நன்னா வேத சப்தம் கேட்கறதோ, அங்க பகவான் அவதாரம் பண்ணனும்னு நினைச்சார், அப்போ அந்த காலடிங்ற க்ஷேத்ரத்தை தேர்ந்தெடுத்தார், அப்படின்னு அழகா சுவாரஸ்யமா சொல்றார்.

இந்த சிவகுரு ஆர்யாம்பா தம்பதி, ரொம்ப நாள் நமக்கு குழந்தை இல்லையேன்னு , வடக்குன்னாததக்ஷேத்ரம் அப்படின்னு திருசூர்ல இருக்கு, அங்கே போய் பஜனம் இருந்தாளாம். அவா, நாற்பத்தியெட்டு நாள் பஜனம் இருக்கா. பஜனம்னா ஒரு க்ஷேத்ரத்ல இருக்கவேண்டியது, அங்கே கிடைக்கற பிரசாதத்தை சாப்பிடவேண்டியது , அந்த தெய்வத்தோட சிந்தனையிலேயே இருக்க வேண்டியது, ஸ்தோத்ர பாராயணம், ருத்ர ஜபம் அப்படின்னு, நாற்பத்தியெட்டு நாள் அவா பஜனம் இருந்திருக்கா. நாற்பத்தியெட்டாவது நாள், பரமேஸ்வரன் அவா ரெண்டு பேரோட கனவுலயும் வந்து “உங்களுக்கு ரொம்ப மேதாவியான சர்வக்ஞனான ஒரு பிள்ளை வேணுமா, இல்லை சாதரணமா நிறைய பிள்ளைகள் வேணுமா, இந்த சர்வக்ஞனாக இருக்கற பிள்ளை எட்டு வருஷம் தான் உயிரோட இருப்பான்”, அப்படின்னு சொன்னாராம்.

விடியக்காலம்பற கனவு. ரெண்டு பெரும் எழுந்துட்டா. எழுந்துட்டு இதை பரிமாறிண்டாளாம். அப்புறம் ரெண்டு பேருக்கும் பயமா போயிடுத்தாம், “அய்யோ நாம பகவான்கிட்ட போய், குழந்தை வேணும்னு கூட நாம கேட்டிருக்க கூடாது , எது பகவான் இஷ்டமோ அதை விட்டுருக்கணும் போல இருக்கு, இப்போ நமக்கு சோதனை வெக்கறாரே”, அப்படின்னு ரெண்டுபேரும் நினைச்சாளாம்.  “பகவானே உங்க இஷ்டபடி பண்ணுங்கோன்னு அப்படின்னு சொன்னாளாம்”. அப்புறம் அவாளுக்கு குழந்தையா பரமேஸ்வரனே சங்கரனா அவதாரம் பண்ணார், அந்த பரமேஸ்வரனுடைய அவதாரம், அவருக்கு பேரு வெச்ச வைபவம், கடபயாதி சங்க்யை படி சங்கரன்னு பேரு வெச்சது, அப்புறம் அவருக்கு பூணல் போட்டு, அவர் பிக்ஷை வாங்கும்போது, இந்த கனகதாரா ஸ்தோத்ரம் அதெல்லாம் நாளைக்கு பார்ப்போம்.

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

Series Navigation<< ஸ்ரீ சங்கர சரிதம் – முதல் பகுதி – ஏன் சங்கர சரிதத்தை கேட்க வேண்டும்?ஸ்ரீ சங்கர சரிதம் – மூன்றாம் பகுதி – ஸ்ரீசங்கர ஜனனம்; மகாபெரியவா ஜனனம் >>

4 replies on “ஸ்ரீ சங்கர சரிதம் – இரண்டாம் பகுதி – சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து”

Jaya Jaya Sankara Hara Hara Sankara, Pahi Pahi Sri Maha Prabho. Janakiraman. Nagapattinam

காலடி என்றால் புண்ணிய பூமி என்ற நினைவு தோன்றுகிறது. ஏன், ? நம் சனாதன தர்மத்தின் வித்தான ஆதிசங்கரர் தோன்றிய ஸ்தலம்!
பெரியவாளுக்கு ஆசார்யாள் என்ற நினைவு ஸதா தோன்றி நொடிக்கு , மூச்சுக்கு முன்னூறு முறை பகவத் பாதாள் சிந்தனயில் வாழ்ந்ததற்குண்டான காரண ஸ்தலம் !
சங்கரா சரித தொடக்கமே களை கட்டுவதாக உள்ளது,!
தொடங்கு முன் பெரியவா சந்நிதியில் மானசீகமாக அனுமதியுடன் ஆரம்பம் செய்தது இந்தத் தொடர் மேலும் சிறப்பாக வருவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது !

ஜய ஜய சங்கரா….

மிக அருமை.. செவிக்கு ஆனந்த விருந்து 🙏

மஹா பெரியவா, ‘பூர்வ காலங்களில் அசுரர்கள் என்று தனியாக ஓர் இனத்தவர் வருவார்கள். அவர்களை சம்ஹரிக்க விஷ்ணு ஆயுதபாணியாக வருவார். இந்தக் கலியில் ராக்ஷஸர்கள் தனியாக இல்லை. 
ஜனங்களின் மூளைக்குள்ளேயே அசுரர்கள் குடிபுகுந்து இருக்கிறார்கள். இந்த கலியில் யாரை சம்ஹாரம் பண்ணுவது? யாரை விட்டு வைப்பது? விசுவாமித்திரரின் யாகத்தைக் கெடுக்க ஸுபாஹு, மாரீசன் என்ற ராக்ஷஸர் வந்ததாகவும், ஸ்ரீ ராமர் அவர்களை வதைத்ததாகவும் ராமாயணத்தில் படிக்கிறோம். இந்தக் கலியில் விசுவாமித்திரர் இருந்திருந்தால் அவருடைய யாகத்தைக் கெடுக்க ஸுபாஹு, மாரீசரே வேண்டியிராது. அவர் மூளை கெட்டுப்போய் அதனுள்ளேயே அசுரப் பிரவிருத்தி குடிகொண்டிருக்கும். அவர் யாகம் செய்யவே எண்ணியிருக்க மாட்டார்.’ என்கிறார்.

ஞானோபதேசத்துக்காகவே பரமேச்வரன் சங்கரராக அவதரித்தார். ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர🙏🙏🙏🙏

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.