Categories
Govinda Damodara Swamigal

காமாக்ஷி பாதம் மஹா விஷ்ணு

காஞ்சி காமாக்ஷி தேவி மேல் மூக பஞ்சசதின்னு ஒரு ஸ்தோத்ரம் இருக்கு. ஐநூறு சுலோகங்கள் கொண்டது. அதில் ஆர்யா சதகம், பாதாரவிந்த சதகம், ஸ்துதி சதகம், கடாக்ஷ சதகம், மந்தஸ்மித சதகம் ஐந்து சதகங்கள். இந்த ஸ்தோத்ரம் மகான்களுக்கு ரொம்ப பிடிச்சதா இருந்திருக்கு. ச்ருங்கேரி ஸ்ரீ சந்திரசேகர பாரதீ ஸ்வாமிகள், சேஷாத்ரி ஸ்வாமிகள், மஹாபெரியவா, நம்ம கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், இப்படி எல்லாரும் இதை விரும்பி பாராயணம் செய்து ரொம்ப அனுபவிச்சு இருக்கா. இந்த ஐநூறு ஸ்லோகமும் ஐநூறு ரத்னங்கள். மஹாபெரியவாளோட அனுபவங்களை ரொம்ப பேர் இப்ப பகிர்ந்துண்டு வரா. அதில் நான் கேட்டதில் மட்டும் ஒரு 25 பேர், “என்னை பெரியவா மூக பஞ்சசதி படிக்க சொன்னா” அப்டீன்னு சொல்லியிருக்கா. வெறும் சிவ நாமத்தை சொல்லு, அப்படீன்னு கொஞ்சம் படிப்பிருந்து, வெறும் நாம ஜபம் பண்ணகூடிய அதிகாரிகளுக்கும் “நீ இந்த மூக பஞ்சசதியிலிருந்து ஆர்யா சதகத்தை படிச்சுக்கோ” அப்படீன்னு சொல்லியிருக்கார். வீழிநாதன் மாமா மாதிரி சமஸ்க்ருதத்துல பெரிய பண்டிதர், professor, doctorate வாங்கினவாளுக்கும் மூக பஞ்சசதியை படிச்சு அனுபவிக்க சொல்லி கொடுத்திருக்கா. மஹாபெரியவா மௌன விரதம் இருக்கும் போது கூட

क्वणत्काञ्ची काञ्चीपुरमणिविपञ्चीलयझरी शिरःकम्पा कम्पावसतिरनुकम्पाजलनिधिः ।

घनश्यामा श्यामा कठिनकुचसीमा मनसि मे मृगाक्षी कामाक्षी हरनटनसाक्षी विहरतात् ॥

க்வணத்காஞ்சீ காஞ்சீபுரமணி விபஞ்சிலயஜரீ

சிரக்கம்பா கம்பாவதி: அனுகம்பா ஜலநிதி: |

கனஷ்யாமா ஷ்யாமா கடின குசஸீமா மனஸி மே

ம்ருகாக்ஷீ காமாக்ஷீ ஹரநடனசாக்ஷீ விஹரதாத் ||

என்ற ஸ்லோகத்தை உதடு அசைய சொல்லிண்டு இருப்பார். நான் பார்த்திருக்கேன்” னு வீழிநாதன் மாமா சொன்னார். அப்படி இந்த மூக பஞ்சசதியில் பெரியவாளுக்கு பக்தி.

எங்களுக்கு close family friends வசந்தி நாராயணன்னு ஒரு தம்பதி. அவர்களுடைய 25 ஆவது கல்யாண நாள் அன்று பெரியவாளை தரிசனம் பண்ணி இருக்கா. பெரியவா அவாளை சந்தரமௌளீச்வர பிரசாதம், தன்னோட பிக்ஷைக்குப் பிறகு அந்த பிரசாதத்தை சாப்பிடச் சொல்லி, ரொம்ப பிரியமாகப் பேசிண்டு இருந்தாளாம். அப்போ அந்த மாமி “நான் நாராயணீயம் படிப்பேன், வேற சில ஸ்லோகங்கள் படிப்பேன்” னு சொன்ன போது “அதோடு மூக பஞ்சசதினு ஒண்ணு இருக்கு. அதையும் படி” னு சொல்லியிருக்கா. அப்படி பெரியவா அதை ரொம்ப பிரியமா எல்லாருக்கும் recommend பண்ணியிருக்கா. படிக்க சொல்லி படிக்க வெச்சிருக்கா. நிறைய பேருக்கு அதைக் கொண்டு பல ஆபத்துகளல்ல இருந்து காப்பாத்தியிருக்கா. அதை படிச்சு சின்ன வயசில் இருந்து வாக்கே வராம இருந்த ஒருத்தர், சங்கர பாஷ்யத்துக்கு வாக்யார்த்தம் சொல்கிற அளவுக்குப் பெரிய பண்டிதர் ஆயிட்டார். இப்படி பல பேர் பல அனுபவங்களை பகிர்ந்துண்டு இருக்கா.

மூக பஞ்சசதியில் பாதாரவிந்த சதகத்தில் ஒரு சுலோகம்

स्फुरन्मध्ये शुद्धे नखकिरणदुग्धाब्धिपयसां वहन्नब्जं चक्रं दरमपि च लेखात्मकतया ।

श्रितो मात्स्यं रूपं श्रियमपि दधानो निरुपमां त्रिधामा कामाक्ष्याः पदनलिननामा विजयते ॥

ஸ்புரன் மத்யே சுத்தே நககிரண துக்தாப்தி பயஸாம்

வஹன் அப்ஜம் சக்ரம் தரமபி ச லேகாத்மா கதயா |

ச்ரிதோ மாத்ஸ்யம் ரூபம் ஸ்ரியமபி ததானோ நிருபமாம்

த்ரிதாமா காமாக்ஷ்யா: பத நளின நாமா விஜயதே ||

இதில் சாதாரணமாகப் பார்த்தால் வர்ணனை தான். ஆனால் விசேஷ அர்த்தம் என்னவென்றால் காமாக்ஷி தேவியினுடைய பாதாரவிந்தமே மஹா விஷ்ணுவாக விளங்குகிறது என்று அர்த்தம் வரும். “காமாக்ஷ்யா: பத நளின நாமா” காமாக்ஷியோட பாத தாமரை என்ற பெயரில், “த்ரிதாமா விஜயதே” மஹாவிஷ்ணு வைகுண்டத்திலும், திருப்பாற்கடலிலும், பூலோகத்திலும் இந்த மூன்று பிரகாசிப்பதால் மஹாவிஷ்ணுவுக்கு த்ரிதாமா என்று பெயர். மூககவி பாதாரவிந்தமே அந்த மஹாவிஷ்ணுவாக விளங்குகிறது என்கிறார்.

எப்படீனா முதலில் இருந்து பாப்போம். “சுத்தே நககிரண துக்தாப்தி பயஸாம் மத்யே ஸ்புரன்” அம்பாளுடைய சரணார விந்தத்தில் உள்ள நகம் வெண்மையாக இருக்கு. அதிலிருந்து வரும் ஒளித்திவலைகள் ஒரு பாற்கடல் போல் உள்ளது. அந்த பாற்கடலுக்கு மத்தியில் அந்த பாதம் ஜொலிக்கறது. பரந்தாமன் பாற்கடல்ல இருக்கார். அது நமக்குத் தெரியும். மஹாவிஷ்ணு சங்கம், சக்ரம், தாமரை புஷ்பம் எல்லாம் வெச்சுண்டு இருக்கார். அம்பாளுடைய பாதாரவிந்தத்தில் இது எல்லாம் இருக்கு. எப்படினா “வஹன் அப்ஜம் சக்ரம் தரமபி ச லேகாத்மா கதயா” ரேகை வடிவத்தில் இருக்கு. பத்ம ரேகை, சங்கு ரேகை, சக்ர ரேகை எல்லாம் பாதாரவிந்தத்தில் இருக்கு. “ச்ரிதோ மாத்ஸ்யம் ரூபம்” விஷ்ணு பகவான் மத்ஸ்ய அவதாரம் முதல் பத்து அவதாரங்கள் எடுத்தார். இந்த பாதாரவிந்தமும் பார்த்தால் மத்ஸ்யம் மாதிரி இருக்கு. ஒரு பக்கத்தில் இருந்து பார்த்தால் பாதாரவிந்தம் மீன் மாதிரி இருக்கும். “நிருபமாம் ஸ்ரியமபி ததான:” ஒப்புயர்வற்ற மஹா லக்ஷ்மியை தரித்துக் கொண்டிருக்கிறார். மஹாவிஷ்ணு மார்பில் எப்போதும் ஸ்ரீதர: என்ற பெயரோடு லக்ஷ்மி தேவியை வெச்சுண்டு இருக்கார். பாதாரவிந்தத்துக்கு வரும் போது ச்ரியம்னா அழகுன்னு அர்த்தம். இந்த பாதாரவிந்தம் ஒப்புயர்வற்ற அழகோட இருக்கு. இப்படி இந்த பாதாரவிந்தமே மஹாவிஷ்ணுவாக விளங்குகிறது என்று ஒரு அழகான சுலோகம்.

இந்த ஸ்லோகத்தில் எனக்கு தனிப் ப்ரியம் என்னன்னா, நான் நம்ப ஸ்வாமிகளைப் பார்த்த நாளிலிருந்து அவர் ராமாயணம், பாகவதம் நாராயணீயம், முகுந்தமாலா னு படிச்சுண்டு விஷ்ணு பக்தியில் தோய்ந்து இருந்தார். அவரை முதலில் நான் பார்க்கும் போதே பார்த்தசாரதியாகவே நினைத்தேன். இன்றும் நினைக்கிறேன். கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்னு ஸன்யாச நாமம். அப்படி அவரை விஷ்ணு அம்சமாக பரவாசுதேவனாகவே நினைக்கிறேன். அவருக்கு காமாக்ஷி தேவியோட மூக பஞ்சசதியில சின்னக் குழந்தையிலிருந்தே ப்ரியம். அதை ரொம்ப அழகா படிப்பார். மூக பஞ்சசதி படிக்கிறதுனால அவர் காமாக்ஷி பக்தரா இருந்தார். நம் சம்பிரதாயத்தில் பகவத்பாத: அடியவர்கள் பகவானோட பாதமே தான். அப்படி காமாக்ஷியோட அடியவரா ஸ்வாமிகள் இருந்தார். அந்த திருவடிகளேயே மஹாவிஷ்ணுனு இந்த மூக பஞ்சசதி ஸ்லோகத்தில் வருவது, நம்ம ஸ்வாமிகள் மஹாவிஷ்ணு என்ற என் நம்பிக்கைக்கு ஒரு சான்று போல தோன்றுகிறது.

கோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா கோவிந்தா…

காமாக்ஷி பாதம் மஹாவிஷ்ணு (7 min audio in tamizh, same as transcript above)

One reply on “காமாக்ஷி பாதம் மஹா விஷ்ணு”

ஸ்ரீ காமாக்ஷி பாதம் ஷரணம் 🙏
நமஸ்காரம் அண்ணா 🙏

இன்றைய தியானத்தில் உதித்த ஸ்லோக
விளக்கம் மிக உயர்வானது.
தற்செயலாக, இன்று ஸ்ரீ ராமனை நினைத்து படித்துக் கொண்டு இருந்த ராமாயண பகுதியில் மனம் முழுமையாக லயிக்க இயலாமல், உடன் “அம்மா காமாக்ஷி உன் பாதங்களை என் தலையில் வைத்து ஆசி புரிய வேண்டும், இன்று உன் பாதங்கள் ஸ்ரீ ராமனாக நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டு மீதமுள்ள பகுதியில் மனம் ஒன்றி படிக்க அருள் வேண்டும் ” என்று நிறைவு செய்தேன்.
இந்த மூக பஞ்சசதி ஸ்லோகம் ஒப்புமை அணி, மிக மிக நேர்த்தியான அணியாக மனதில் நிலை பெற செய்தது.
மிக்க நன்றி 🙏
ஸ்ரீ ஸ்வாமிகள் பாதங்களில் ஷரணம் 🙏
மஹா பெரியவாபாதம் ஷரணம் 🙏
ஸ்ரீ சிவன் சார் பாதம் ஷரணம் 🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.